Skip to main content

புராதன எறும்பு

ஒரு கவிதை ஓர் எறும்பை என்ன செய்துவிட முடியும்? எறும்பிடம் சென்று உன்னைப் பற்றி இன்றைக்கு ஒரு நல்ல கவிதை வாசித்தேன் என்று சொல்லிப் பார்க்க முடியுமா? 


ஓர் எறும்பிடம் பேசிப் பார்த்தேன், 

“முழு வீட்டையும் எடுத்துக்கொள் உன் இடம்தான் இது, அது புரிகிறது.. ஆனால் இரவு படுக்கையையும் மதிய சாப்பாட்டையும் கடைசி ஜட்டியையும் மட்டுமாவது விட்டுவைக்கலாம் அல்லவா? பார், மனிதர்கள் நாங்கள் உன்னைப் பற்றி கவிதைகள் எழுதுகிறோம். எங்கள் கவியுலகில் நினைவுகள் குறித்த பேச்சு வந்தாலே கவிதைக்குள் நீங்கள் வரிசைக்கட்டி ஊர ஆரம்பித்து விடுவீர்கள். காச்சர் கோச்சர் எனும் நாவலில் மையப் படிமமே நீங்கள் தான். எறும்பு ஊர மனிதர்கள் தேய்வார்கள் அந்நாவலில். அதுபோக சூழியல் ஆர்வலர்கள் முதல் தத்துவவாதிகள் வரை உன்னைப் பேசாத ஆட்களே இல்லை. சமூக வாழ்க்கையா, எறும்பு. எடைத் தூக்குவதா, எறும்பு. கூட்டு உழைப்பா, எறும்பு. பொறியியல் கட்டுமானமா, எறும்பு. தொடர்புறுத்தலா, எறும்பு. அதிகார அமைப்பா, எறும்பு. சேமிப்பின் மகத்துவமா, எறும்பு. ஒத்திசைவா, எறும்பு. வாழ்வின் தத்துவமே எறும்பு.


இதையெல்லாம் எதற்கு உன்னிடம் சொல்கிறேன் என்றால் மனிதர்கள் நாங்கள் உன் மீது நல்ல மதிப்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ளத்தான். மனிதர்கள் என்ன மனிதர்கள், முக்கியமாக நான். இதையெல்லாம் கேட்டுப் படித்து வைத்திருக்கிறேன். இனிமேலாவது என் ஜட்டியை பதம் பார்க்காமல் இருப்பது குறித்து நீங்கள் பரிசீலிக்க வேண்டும். ஆடைக்குள் கடிக்கும் போது உன்னை அந்த இடத்திலேயே நசுக்கித் தள்ளியிருக்கிறேன், அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ள கூடாது. மன்னித்தலின் மேன்மையை எறும்பிடம் கற்க வேண்டும் என்பதை நிச்சயம் மனிதர்கள் எங்காவது சொல்லியிருப்பார்கள். இல்லையென்றால் நான் இப்போது சொல்லி வைக்கிறேன்.



அப்புறம் மதிய சாப்பாடும் இரவு படுக்கையும். அந்தரத்தில் மிதக்கும் பாத்திரங்களும் மெத்தைகளும் அமேசானில் விற்பனைக்கு வரும் வரையிலாவது பொறுத்திருக்கக் கூடாதா? இதோடு இந்தக் கோடையில் மட்டும் நான்கு எறும்பு சாக்பீஸ் காலி. பார் இப்போது கூட எறும்பு பவுடர் போட்டு உன்னைக் கொல்லவில்லை. திசைமாற்றும் கோடுகள் மட்டும் தான். ஆனால் நானோ அழகிய வட்டங்கள் போடக்கூடியவன் அல்ல. கோணல் மாணலாக வருகிறது. வீட்டில் ஓர் ஓவியக்காரியை வைத்துக் கொண்டு எதற்கெல்லாமோ திட்டு வாங்க வேண்டியிருக்கிறது. அப்படியே கவனத்தை குவித்து அழகிய வட்டம் போட்டாலும் அது ஒருவாரத்தில் காலாவதியாகி விடுகிறது. இல்லையெனில் நீங்கள் எண்ணியிரா கோணத்திலிருந்து எண்ணியிரா பாதையை கண்டடைந்து எப்படியோ இலக்கை அடைந்து விடுகிறீர்கள். நேற்று அலமாரியிலிருந்து தொங்கிய நூலின் நுனி லேசாக சுவரில் தொட்டுக் கொண்டிருந்தது. இதையெல்லாம் நான் எப்படி கணிக்க முடியும்? நூலின் வழியாக பாதையமைத்து இருந்த நான்கு முந்திரிகளையும் காலி செய்துவிட்டிருக்கிறீர்கள்.



என் முழுத் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். உங்கள் பாதைகளை கணிப்பது என்னால் ஆகாது. அட்டன்பரோ தாத்தா உங்கள் பெருமைகளை சிலாகித்த போது சந்தேகித்தது தப்பு தான்.


வீட்டுக்குள் நீங்கள் ஊடுருவவில்லை, உங்கள் மகத்தான வலைப்பின்னலுக்கு இடையே தான் இந்த வீடே இருக்கிறது. புராதன எறும்புகளே உங்கள் ஊடுபாதைகளை வணங்குகிறேன். அவை பதிந்திருக்கும் உங்கள் கூட்டு நனவிலியை வணங்குகிறேன். காலங்காலமாய் இங்கு வந்து கொண்டிருக்கும் உங்களை வணங்குகிறேன்.”



எறும்புகள்


கூ ட் ட ங் கூ ட் ட மா ய் கூ ட் ட ங் கூ ட் ட மா ய்

கூ ட் ட ங் கூ ட் ட மா ய் கூ ட் ட ங் கூ ட் ட மா ய்


எங்கிருந்து வருகின்றன

எறும்புகள்


கால ங் கால மாய் கால ங் கால மாய்

கால ங் கால மாய் கால ங் கால மாய்


எறும்புகள் - வி சங்கர்





Comments

  1. Beautifully written. எங்கள் வீடும் புராதனமான இடத்தில் இருக்கிறது என்பதில் பெருமை கொள்கிறேன் 🥰

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீலக்குறுநிலவு

"இப்ப ஒரு தவிப்புக் குரல் கேக்குதில்லையா.. இத கவனிச்சு பாருங்க, கொஞ்சம் கொஞ்சமா இந்தக் குரலோட ஸ்ருதி ஏறிட்டே போகும். அதுக்கப்றம் ஒரே சொல், இல்லயில்ல ஒரு இரட்டை சொல் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கும், சிலப்பம் நாள் முழுக்கக் கூட கேக்குறதுண்டு. குறிப்பா இரவு நேரத்துல கேக்க ஆரம்பிச்சா அப்றம் நிக்காது. நேத்து நைட் எங்க கிணத்துக்குடில் பக்கம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. இது இப்டி பித்து பிடிச்ச மாதிரி ராத்திரி முழுக்க கத்திட்டே இருக்குறதால இதுக்கு Brain fever Bird ன்னு பேரு" என்று சுசித்ரா அக்காவிடம் நித்யவனத்தின் லைப்ரரி ஹால் வாசலில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். கோடை காலம் ஆதலால் விடியற்காலையின் எஞ்சியிருந்த குளிரும் விரைவாக அகன்று நன்றாக வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. "ஓ இன்ட்ரெஸ்டிங் நேம்", சுசித்ரா அக்கா சிறிது நேரம் செவிகூர்ந்தார், "ஆமா ரொம்ப தொந்திரவான குரல்தான். மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் ஒரு அழைப்பு அல்லது கட்டளையிடப்படும் ஒரு ஆணை மாதிரி கேக்குதில்லையா" "ஆமாக்கா. சரியா சொன்னீங்க. இந்தக் குரல்ல இருக்குறது அழைப்புக்கான தவிப்பா இல்ல...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

மாருத லீலை

ஆடிக் காற்று வாங்க ஆடிவரை காத்திருக்க வேண்டுமென்பதில்லை. ஆணி பதினைந்து வாக்கிலேயே நல்ல காற்று வீசுவதாகத் தெரிந்தால் நீங்கள் மொட்டைமாடிக்குப் போகலாம், அதற்கு நகராட்சி சார்பில் அபராதம் எதுவும் கிடையாது. எப்போது நீங்கள் இரண்டு நாட்களாக தேடி சலித்த உள்ளாடையை பக்கத்து வீட்டுக்காரர் தங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் ஒரு கரித்துணி விழுந்து கிடந்ததாகச் சொல்லி மீட்டுத் தருகிறாரோ அப்போதே நீங்கள் உஷாராகிவிட வேண்டும். அப்போதும் நீங்கள் அசமந்தமாக இருந்தால் அடுத்தக்கட்ட எச்சரிக்கை உங்கள் மனைவியிடமிருந்து வரும், “எத்தன வாட்டி சொல்றது, பொடவைக்கும் கிளிப்பு போடுன்னு.. எப்பதான் உனக்கு அறிவு வருமோ?” நமக்கு எப்போது அறிவு வரும் என்று யோசிப்பது நல்ல தத்துவார்த்த கேள்வியாகப் பட்டது. ஆனால் தத்துவக் கேள்விகளை விசாரிக்க வீட்டு சோபா உகந்த இடமல்ல. இதை ஏன் நாம் ஒரு மாலை நடை சென்றபடியே சிந்திக்கலாகாது? “அறிவியாலாளர்கள் முதல் தத்துவஞானிகள் வரை தங்களுக்கான விடையை இயற்கையின் மகத்தான தற்செயலிலிருந்தே பெற்றிருக்கிறார்கள். உங்கள் உள்ளார்ந்த கேள்வியுடன் பிரபஞ்சத்தை செவிகூருங்கள், அது உங்களுக்கு விடையளிக்கும்.” என்ற மேற்கோளை...

சென்னை பயணம் - மானசா பதிப்பக விழா

  மானசா பதிப்பகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பெண் எழுத்து சார்ந்த அரங்கம் மற்றும் பதிப்பகத்தின் முதல் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள ரஞ்சனியும் நானும் சென்னை சென்றிருந்தோம். அதிகாலை ஏற்காடு வண்டியில் சென்றிரங்கியவுடன் நண்பர் நவீன் வீட்டில் தஞ்சம். அவர் வீட்டின் உறுப்பினரான சிம்பா எங்களை வரவேற்றான். சிம்பா பீகல் இனத்தவன். இரண்டு வருடம் முன்பு கோவையில் அவனை சந்தித்ததை நினைவில் வைத்திருந்தான். நாங்கள் சென்றதும் ஒரு துணிப்பொம்மையை எடுத்து காலடியில் வைத்துக் கொண்டு யாருக்கும் தரமாட்டேன் என்றான். அதை எடுக்க முயன்று தோற்பதுபோல் நாம் விளையாட வேண்டுமாம். கிளம்பி விழா நடைபெறும் கவிக்கோ மன்றம் சென்றோம். பேனர் அமைக்கும் வேலை, சிற்றுண்டி ஏற்பாடு, விருந்தினர்களை அழைத்து வருவது போன்ற வேலைகளை பயணத்தின் போதே நவீன் போனில் ஒருங்கிணைத்துக் கொண்டே இருந்தார். டாக்டர் ஜெகன், விஜயபாரதி,சபரிஷ், சூரஜ் போன்ற நண்பர்கள் அவரவர் வேலைகளை எடுத்துக் கொண்டனர். விருந்தினர் பத்மா விஸ்வநாதனை அழைத்துவரச் சென்ற நவீனுடன் நானும் இணைந்து கொண்டேன். அந்த வகையில் அவருடன் கொஞ்சம் உரையாட முடிந்தது. அவர் பிரேசில்...

வண்ணமின்மையிலிருந்து வண்ணங்களுக்கு

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா கொல்லிமலை இரண்டாம் நாள் பயணத்தில் மதியம் சாப்பிட ஓர் உணவகத்திற்கு சென்றிருந்தோம். கைகழுவும் இடத்திலிருந்து வெளிவருகையில் இம்மலர் என்னை அழைத்தது.

சென்னை பயணம் (2) - எய்டன் சென்ற பாதையில்

சென்னை பயணம் - மானசா பதிப்பக விழா இரண்டாம் நாள் காலை விஜய்(பாரதி) அண்ணா தலைமையில் பறவை பார்த்தல். நாங்கள் ஈரோடு கோஷ்டி பூநாரைகள் பார்க்க வேண்டும் என்றதும் அதற்கேற்ப கேளம்பாக்கம் அருகே ஒரு இடத்தை முடிவு செய்திருந்தார். அவரின் கணிப்புத் தவறவில்லை. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பூநாரைகளைக் கண்டு களிப்புற்றோம். அவை வெயிலில் நிற்பது, ஒற்றைக்கால் தவம் செய்வது, நின்ற வாக்கிலேயே தூங்குவது என நீண்டநேரம் அவற்றுடன் இருந்தோம். கூடவே வலசை பருவத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் Curlew, Whimbrel, Redshank, Greenshank போன்ற பறவைகளையும் நெடுங்கால் உள்ளான் குஞ்சுகளையும் காண முடிந்தது. வலசை பருவம் முடிந்த பின்பும் ஜூலை மத்தியில் இவற்றையெல்லாம் காண முடிவது அரிது தான் என்றார் விஜயபாரதி. சில பறவைகள் long wintering என்ற பெயரில் இவ்வாறு தங்கிவிடுவது உண்டாம். பறவை பார்த்தல் முடித்து நவீன் வீட்டுக்குத் திரும்பவே மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. சென்னை நகருக்குள் பயணமே பெரும் நேரத்தை எடுத்துக் கொள்கிறது. எங்களுக்கு மிச்சம் இருந்தது ஒரேயொரு ஞாயிறு மாலை. தரமணி இரயில் நிலையத்தில் Fort station என்ற வாசகம் கண்ணில் பட வெள்ளை...

ஈரோடு நாடகக் கொட்டாய் - நீர்வழிப்படூஉம்

 மகரந்தம் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோடு நாடக கொட்டாயில் நடைபெற்ற 'நீர்வழிப்படூஉம்' நாவலின் நாடக வடிவைக் காண நேற்று மாலை நண்பர்கள் ரஞ்சனி, விக்ரம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சென்றிருந்தேன். ஈரோடு நாடக கொட்டகை கட்டிடம் கூத்துப்பட்டறையின் நிறுவனர் மறைந்த ந. முத்துசாமியின் நினைவகமும் கூட. மறைந்த ஆசிரியரின் வழியில் தொடர்ந்து செயலை முன்னெடுப்பதே வாழும் நினைவகமாக இருக்க முடியும். அவ்வகையில் வெவ்வேறு நவீன நாடக முயற்சிகள் தொடர்ந்து இக்கொட்டகையில் அரங்கேறுவதாய் அறிகிறேன். கொட்டகை அமைந்துள்ள கட்டிடம் முன்னர் ஒரு தேவாலாயமாக இருந்த இடம். உயர்ந்த நீண்ட ஓட்டுக்கூரை வடிவத்தை இப்போதும் நாம் பார்க்கலாம். மனித நாடகங்களை அரங்கேற்ற தேவனின் ஆலயம் ஏற்ற இடம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்திருந்ததை விடவும் தற்போது அரங்கம் புதுப்பொலிவுடன் இருந்தது. பார்வையாளர்களுக்கான கேலரி புதிதாக அமைத்திருந்தார்கள். சுமார் அறுபது பேர் வரை வசதியாக அமர்ந்து நாடகம் பார்க்கலாம். தற்போது கொட்டகையை நிர்வகிப்பவர் முத்துசாமியின் மாணவர் சதீஷ் குமார். அவரும் தோழர் கலைக்கோவனும் இணைந்தே 'ந...