Skip to main content

வண்ணமின்மையிலிருந்து வண்ணங்களுக்கு


கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா

கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா


கொல்லிமலை இரண்டாம் நாள் பயணத்தில் மதியம் சாப்பிட ஓர் உணவகத்திற்கு சென்றிருந்தோம். கைகழுவும் இடத்திலிருந்து வெளிவருகையில் இம்மலர் என்னை அழைத்தது.

அருகில் சென்றால் நல்ல வாசனை. வேறு பல தாவரங்களுக்குள் ஊடுருவியிருந்த கொடியில் இம்மலர் பூத்திருந்தது. கொடியின் ஊடுபாதைகளை தொடர்ந்து போதுதான் இம்மலர் மட்டுமல்லாமல் மேலும் நான்கைந்து மலர்கள் விழிதிறந்து எனை நோக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். எதை கையில் ஏந்துவது என்று குழப்பத்தில் நின்றேன். அப்போது காற்றின் சலனத்தில் எனை நோக்கி எம்பிய ஒரு மலரை தானாகவே கைகள் பற்றிக் கொண்டன. ஆச்சர்யமும் ஆர்வமுமாய் அதன் அமைப்பை புரிந்துகொள்ளவே எனக்கு சிறிது நேரம் ஆயிற்று.



மேலே மூன்று பட்டை மின்விசிறி போன்றதொரு அமைப்பு, அதன் கீழ் ஐந்து பட்டை மின்விசிறி, அதற்கடியில் ஊதா நிற சூரிய கதிர் இழைகள், எல்லாவற்றுக்கும் அடியில் தாங்கி நிற்பது போன்ற இதழ்கள். மூன்று திசைகளில் பிரிந்திருந்த கொடியின் இலைகள் பப்பாளி இலையின் சிறிய வடிவம் போலத் தோற்றமளித்தது. இம்மலரை வாழ்வில் முதன்முறையாக பார்க்கிறேன் அல்லது முதன்முறையாக கவனிக்கிறேன். விசாரித்ததில் இதன் பெயர் கிருஷ்ண கமலம் என்று சொன்னார்கள். ஆஹா அப்படியென்றால் நம் நாயகனின் மலரல்லவா.. ஆசை தீர கண்களால் வருடிக் கொண்டிருந்தேன். எத்தனை நுட்பமான வடிவம்? அழகிய நிறத் தேர்வுகள். நுட்பமும் ஒத்திசைவும் இணையும் புள்ளியைத்தான் நாம் அழகு என்கிறோமா?

இம்மலரைப் பார்த்த மகிழ்ச்சியை ஆசிரியர் லோகமாதேவியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. மேலும் அவர்கள் இம்மலர் பற்றி ஏதேனும் சொல்லக்கூடும். அவருக்கு படத்தை பகிர்ந்த ஐந்தாவது வினாடியில் “ஆமா தம்பி.. கிருஷ்ண கமலம்” என்று தன் மகிழ்ச்சி குரலை அனுப்பியிருந்தார். 

மேலும் இதற்கு ‘மகாபாரத மலர்’ எனும் வேறொரு பெயரும் இருப்பதாகச் சொல்லி அதை விளக்கினார். 

அடிப்பக்கம் உள்ள ஊதா நிற இதழ் நீட்சிகள் நூறு எண்ணிக்கை இல்லாவிட்டாலும் நூறு இருப்பதாகக் கணக்கு. அதன் மேல் மஞ்சள் நிறத்திலிருக்கும் சிறிய இதழ்கள் ஐந்து. நூறும் ஐந்தும் இருப்பதனால் இதனை மகாபாரத மலர் என்றும் சொல்கிறார்கள் என்றார். இதே மலரில் சிகப்பு நிற இதழ்கள் கொண்ட மலரில் கண்களை எடுக்கவே முடியாதபடிக்கு அத்தனை வசீகரமாய் இருக்குமென்றும் தன் ஆவலை பகிர்ந்து கொண்டார்.

வெள்ளிமலையில் அதிகம் காணப்படும் கிருஷ்ணன் பெயரில் அமைந்த இன்னொரு மலரைப் பற்றியும் குறிப்பிட்டார். கிருஷ்ண கிராந்தி அல்லது விஷ்ணு கிராந்தி எனப்படும் மிகச்சிறிய மலர். இதன் செடி தரையெங்கும் படர்ந்திருக்கும் வகையிலானது. கிருஷ்ண நீலத்தில் அமைந்த மலர். சிறிய மலராக இருந்தாலும் தன் அற்புதமான வண்ணத்தால் கவனத்தை ஈர்ப்பது. அம்மலரின் ஆச்சர்யத்தை சொல்லிவிட துடிக்கும் மகிழ்ச்சி அவரின் குரலில் தெரிந்தது, “நிறமற்றது என்று நாம் சொல்லும் மண்ணிலிருந்து இந்த எளிய செடி எத்தனை அற்புதமான நிறத்தை கொண்டு வருகிறது தம்பி! இல்லையா.. இதன் வேதியியலை நினைத்துப் பாருங்கள்..” என்றார். இருப்பற்ற இன்மையிலிருந்து இந்த பிரபஞ்சம் திரண்டு வந்ததைப் போல என்று நினைத்துக் கொண்டேன்.

 

வெள்ளிமலை கிருஷ்ண கிராந்தி

நாள்தோறும் இயற்கை தன் தூரிகையால் இத்தனை வண்ணங்களை நம் முன் நிகழ்த்திக் காட்டுகிறது. ஒரு மகத்தான ஓவியன் கணந்தோறும் அற்புத ஓவியங்களை வரைந்து நம் முன்னால் நீட்டிக் கொண்டே இருப்பதைப் போல. இத்தனை வண்ணங்களும் எங்கிருந்து வருகின்றன? நீரும் காற்றும் ஒளியும் வானும் நிறமற்றவை. நிலமும் நம் கணக்கில் நிறமற்றதே. பொருள்மிக்க எதுவும் இன்மையிலிருந்து தோன்றுவதே ஆதிவிதி போலும். எண்ணங்களின் இன்மையிலிருந்து கவிதை தோன்றுவதைப் போல.

வண்ணமின்மையிலிருந்து வண்ணங்கள் பிறக்கின்றன. ஒளியில் பிரியும் வண்ணங்கள் நீரிலோ ஒன்று கலக்கின்றன. அதன்பிறகு உயிர்வெளியெங்கும் வண்ணங்களே நிறைந்துள்ளன, ஆழ்கடலில் ஆனாலும் பெரும்பாலையில் ஆனாலும். பெரும்பாலான உயிர்கள் தன் உச்சகட்ட வெளிப்பாடாக வண்ணங்களை கொப்பளிக்கின்றன. மரங்கள் மலர்களில், பறவைகள் இறகுகளில், விலங்குகள் பளபளக்கும் தோல்பரப்பில், மீன்கள் செதில்களில், மனிதர்கள் ஆடைகளில் என இங்கு உயிர்கள் வண்ணங்கள் வழியாக வெளிப்படுத்துவது எதை? அதுவொரு மாபெரும் உறுதிப்பாடு அல்லவா?  வண்ணங்களால் இங்கு உயிரின் ஆடல் நிகழ்கிறது. மண்ணில் வண்ணங்கள் திகழாத நாளொன்றில்லை, எந்தச் சூழலிலும் எங்கும் எப்போதும் அவை நமக்காக திரண்டபடியே உள்ளன.


ஓவியம்: ரஞ்சனி அரசி


நன்றி: ஆசிரியர் லோகமாதேவி


(நிறைவு)



Comments

Popular posts from this blog

கொல்லிமலை பயணம் - அருகிருக்கும் ஷம்பாலா

தேர்தல் முடிவுகள் வரும்போது ஊரில் இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் முதலில் எழுந்தது. என் வாழ்வில் நான் மிக முக்கியமானதாக கருதும் எழுத்துப் பணி ஒன்றை எனக்கு நானே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். விசையை தக்கவைத்துக் கொள்ள

கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா அந்த இடம் மட்டும் மரங்கள் அதிகமின்றி வானைநோக்கி வெட்டவெளியாக இருந்தது. வான்வெளி பூங்காவின் மைய வளாகம் ஒரு சிறிய கட்டிடம்.

புராதன எறும்பு

ஒரு கவிதை ஓர் எறும்பை என்ன செய்துவிட முடியும்? எறும்பிடம் சென்று உன்னைப் பற்றி இன்றைக்கு ஒரு நல்ல கவிதை வாசித்தேன் என்று சொல்லிப் பார்க்க முடியுமா?  ஓர் எறும்பிடம் பேசிப் பார்த்தேன்,  “முழு வீட்டையும் எடுத்துக்கொள் உன் இடம்தான் இது, அது புரிகிறது.. ஆனால் இரவு படுக்கையையும் மதிய சாப்பாட்டையும் கடைசி ஜட்டியையும் மட்டுமாவது விட்டுவைக்கலாம் அல்லவா? பார், மனிதர்கள் நாங்கள் உன்னைப் பற்றி கவிதைகள் எழுதுகிறோம். எங்கள் கவியுலகில் நினைவுகள் குறித்த பேச்சு வந்தாலே கவிதைக்குள் நீங்கள் வரிசைக்கட்டி ஊர ஆரம்பித்து விடுவீர்கள். காச்சர் கோச்சர் எனும் நாவலில் மையப் படிமமே நீங்கள் தான். எறும்பு ஊர மனிதர்கள் தேய்வார்கள் அந்நாவலில். அதுபோக சூழியல் ஆர்வலர்கள் முதல் தத்துவவாதிகள் வரை உன்னைப் பேசாத ஆட்களே இல்லை. சமூக வாழ்க்கையா, எறும்பு. எடைத் தூக்குவதா, எறும்பு. கூட்டு உழைப்பா, எறும்பு. பொறியியல் கட்டுமானமா, எறும்பு. தொடர்புறுத்தலா, எறும்பு. அதிகார அமைப்பா, எறும்பு. சேமிப்பின் மகத்துவமா, எறும்பு. ஒத்திசைவா, எறும்பு. வாழ்வின் தத்துவமே எறும்பு. இதையெல்லாம் எதற்கு உன்னிடம் சொல்கிறேன் என்றால் மனிதர்கள் ...

காதல் கவி தேவதேவன்

நேற்று கவிஞர் தேவதேவனின் பிறந்தநாள் என்று சொன்னார்கள். ப்ரியத்துக்குரிய கவிஞரை எண்ணிக்கொள்ள மேலுமொரு தருணம் என நினைத்துக் கொண்டேன். ஆசிரியர் ஜெ துவங்கி