Skip to main content

வண்ணமின்மையிலிருந்து வண்ணங்களுக்கு


கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா

கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா


கொல்லிமலை இரண்டாம் நாள் பயணத்தில் மதியம் சாப்பிட ஓர் உணவகத்திற்கு சென்றிருந்தோம். கைகழுவும் இடத்திலிருந்து வெளிவருகையில் இம்மலர் என்னை அழைத்தது.

அருகில் சென்றால் நல்ல வாசனை. வேறு பல தாவரங்களுக்குள் ஊடுருவியிருந்த கொடியில் இம்மலர் பூத்திருந்தது. கொடியின் ஊடுபாதைகளை தொடர்ந்து போதுதான் இம்மலர் மட்டுமல்லாமல் மேலும் நான்கைந்து மலர்கள் விழிதிறந்து எனை நோக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். எதை கையில் ஏந்துவது என்று குழப்பத்தில் நின்றேன். அப்போது காற்றின் சலனத்தில் எனை நோக்கி எம்பிய ஒரு மலரை தானாகவே கைகள் பற்றிக் கொண்டன. ஆச்சர்யமும் ஆர்வமுமாய் அதன் அமைப்பை புரிந்துகொள்ளவே எனக்கு சிறிது நேரம் ஆயிற்று.



மேலே மூன்று பட்டை மின்விசிறி போன்றதொரு அமைப்பு, அதன் கீழ் ஐந்து பட்டை மின்விசிறி, அதற்கடியில் ஊதா நிற சூரிய கதிர் இழைகள், எல்லாவற்றுக்கும் அடியில் தாங்கி நிற்பது போன்ற இதழ்கள். மூன்று திசைகளில் பிரிந்திருந்த கொடியின் இலைகள் பப்பாளி இலையின் சிறிய வடிவம் போலத் தோற்றமளித்தது. இம்மலரை வாழ்வில் முதன்முறையாக பார்க்கிறேன் அல்லது முதன்முறையாக கவனிக்கிறேன். விசாரித்ததில் இதன் பெயர் கிருஷ்ண கமலம் என்று சொன்னார்கள். ஆஹா அப்படியென்றால் நம் நாயகனின் மலரல்லவா.. ஆசை தீர கண்களால் வருடிக் கொண்டிருந்தேன். எத்தனை நுட்பமான வடிவம்? அழகிய நிறத் தேர்வுகள். நுட்பமும் ஒத்திசைவும் இணையும் புள்ளியைத்தான் நாம் அழகு என்கிறோமா?

இம்மலரைப் பார்த்த மகிழ்ச்சியை ஆசிரியர் லோகமாதேவியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. மேலும் அவர்கள் இம்மலர் பற்றி ஏதேனும் சொல்லக்கூடும். அவருக்கு படத்தை பகிர்ந்த ஐந்தாவது வினாடியில் “ஆமா தம்பி.. கிருஷ்ண கமலம்” என்று தன் மகிழ்ச்சி குரலை அனுப்பியிருந்தார். 

மேலும் இதற்கு ‘மகாபாரத மலர்’ எனும் வேறொரு பெயரும் இருப்பதாகச் சொல்லி அதை விளக்கினார். 

அடிப்பக்கம் உள்ள ஊதா நிற இதழ் நீட்சிகள் நூறு எண்ணிக்கை இல்லாவிட்டாலும் நூறு இருப்பதாகக் கணக்கு. அதன் மேல் மஞ்சள் நிறத்திலிருக்கும் சிறிய இதழ்கள் ஐந்து. நூறும் ஐந்தும் இருப்பதனால் இதனை மகாபாரத மலர் என்றும் சொல்கிறார்கள் என்றார். இதே மலரில் சிகப்பு நிற இதழ்கள் கொண்ட மலரில் கண்களை எடுக்கவே முடியாதபடிக்கு அத்தனை வசீகரமாய் இருக்குமென்றும் தன் ஆவலை பகிர்ந்து கொண்டார்.

வெள்ளிமலையில் அதிகம் காணப்படும் கிருஷ்ணன் பெயரில் அமைந்த இன்னொரு மலரைப் பற்றியும் குறிப்பிட்டார். கிருஷ்ண கிராந்தி அல்லது விஷ்ணு கிராந்தி எனப்படும் மிகச்சிறிய மலர். இதன் செடி தரையெங்கும் படர்ந்திருக்கும் வகையிலானது. கிருஷ்ண நீலத்தில் அமைந்த மலர். சிறிய மலராக இருந்தாலும் தன் அற்புதமான வண்ணத்தால் கவனத்தை ஈர்ப்பது. அம்மலரின் ஆச்சர்யத்தை சொல்லிவிட துடிக்கும் மகிழ்ச்சி அவரின் குரலில் தெரிந்தது, “நிறமற்றது என்று நாம் சொல்லும் மண்ணிலிருந்து இந்த எளிய செடி எத்தனை அற்புதமான நிறத்தை கொண்டு வருகிறது தம்பி! இல்லையா.. இதன் வேதியியலை நினைத்துப் பாருங்கள்..” என்றார். இருப்பற்ற இன்மையிலிருந்து இந்த பிரபஞ்சம் திரண்டு வந்ததைப் போல என்று நினைத்துக் கொண்டேன்.

 

வெள்ளிமலை கிருஷ்ண கிராந்தி

நாள்தோறும் இயற்கை தன் தூரிகையால் இத்தனை வண்ணங்களை நம் முன் நிகழ்த்திக் காட்டுகிறது. ஒரு மகத்தான ஓவியன் கணந்தோறும் அற்புத ஓவியங்களை வரைந்து நம் முன்னால் நீட்டிக் கொண்டே இருப்பதைப் போல. இத்தனை வண்ணங்களும் எங்கிருந்து வருகின்றன? நீரும் காற்றும் ஒளியும் வானும் நிறமற்றவை. நிலமும் நம் கணக்கில் நிறமற்றதே. பொருள்மிக்க எதுவும் இன்மையிலிருந்து தோன்றுவதே ஆதிவிதி போலும். எண்ணங்களின் இன்மையிலிருந்து கவிதை தோன்றுவதைப் போல.

வண்ணமின்மையிலிருந்து வண்ணங்கள் பிறக்கின்றன. ஒளியில் பிரியும் வண்ணங்கள் நீரிலோ ஒன்று கலக்கின்றன. அதன்பிறகு உயிர்வெளியெங்கும் வண்ணங்களே நிறைந்துள்ளன, ஆழ்கடலில் ஆனாலும் பெரும்பாலையில் ஆனாலும். பெரும்பாலான உயிர்கள் தன் உச்சகட்ட வெளிப்பாடாக வண்ணங்களை கொப்பளிக்கின்றன. மரங்கள் மலர்களில், பறவைகள் இறகுகளில், விலங்குகள் பளபளக்கும் தோல்பரப்பில், மீன்கள் செதில்களில், மனிதர்கள் ஆடைகளில் என இங்கு உயிர்கள் வண்ணங்கள் வழியாக வெளிப்படுத்துவது எதை? அதுவொரு மாபெரும் உறுதிப்பாடு அல்லவா?  வண்ணங்களால் இங்கு உயிரின் ஆடல் நிகழ்கிறது. மண்ணில் வண்ணங்கள் திகழாத நாளொன்றில்லை, எந்தச் சூழலிலும் எங்கும் எப்போதும் அவை நமக்காக திரண்டபடியே உள்ளன.


ஓவியம்: ரஞ்சனி அரசி


நன்றி: ஆசிரியர் லோகமாதேவி


(நிறைவு)



Comments

Popular posts from this blog

நீலக்குறுநிலவு

"இப்ப ஒரு தவிப்புக் குரல் கேக்குதில்லையா.. இத கவனிச்சு பாருங்க, கொஞ்சம் கொஞ்சமா இந்தக் குரலோட ஸ்ருதி ஏறிட்டே போகும். அதுக்கப்றம் ஒரே சொல், இல்லயில்ல ஒரு இரட்டை சொல் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கும், சிலப்பம் நாள் முழுக்கக் கூட கேக்குறதுண்டு. குறிப்பா இரவு நேரத்துல கேக்க ஆரம்பிச்சா அப்றம் நிக்காது. நேத்து நைட் எங்க கிணத்துக்குடில் பக்கம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. இது இப்டி பித்து பிடிச்ச மாதிரி ராத்திரி முழுக்க கத்திட்டே இருக்குறதால இதுக்கு Brain fever Bird ன்னு பேரு" என்று சுசித்ரா அக்காவிடம் நித்யவனத்தின் லைப்ரரி ஹால் வாசலில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். கோடை காலம் ஆதலால் விடியற்காலையின் எஞ்சியிருந்த குளிரும் விரைவாக அகன்று நன்றாக வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. "ஓ இன்ட்ரெஸ்டிங் நேம்", சுசித்ரா அக்கா சிறிது நேரம் செவிகூர்ந்தார், "ஆமா ரொம்ப தொந்திரவான குரல்தான். மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் ஒரு அழைப்பு அல்லது கட்டளையிடப்படும் ஒரு ஆணை மாதிரி கேக்குதில்லையா" "ஆமாக்கா. சரியா சொன்னீங்க. இந்தக் குரல்ல இருக்குறது அழைப்புக்கான தவிப்பா இல்ல...

தினமும் எழுந்துவரும் ஜோதி

  அன்புள்ள ஆசிரியருக்கு, “இதுவே இந்தச் சொற்களை அல்லது இம்மாதிரி வாக்கியங்களை வேற யாராச்சும் சொல்லிருந்தா எளிமையா தேய்வழக்குன்னு ஒதுக்கித் தள்ளியிருப்போம். ஆனா பாட்டி மாதிரி ஓர் ஆளுமை சொல்லும்போது சொற்களுக்கு உண்மையிலேயே உயிர் வந்திடுது” என்றார் கிருஷ்ணன் சார். எனக்கும் பள்ளி நாட்களில் யோகா ஆசிரியர் மூலமாக அறிமுகமான அச்சொற்கள் அப்போது எந்த அதிர்வையும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் பாட்டியின் உச்சரிப்பில் அவை ஓர் அசரீரி போல் ஒலிப்பதை எண்ணிக் கொண்டேன். பாட்டிக்கு அச்சொற்களை சொல்லும் போது மட்டும் சுத்தமாக குரல் நடுங்குவதில்லை. உச்சரிக்கும் பொழுது முழுமைக்கும் சித்தம் அச்சொற்களுக்கே என ஒப்படைத்து அழுத்தம் திருத்தமாக சொல்வார், “அருட்பெருஞ்ஞ்ஞ்.. ஜோதி தனிப்பெருங்ங்ங்.. கருணை” கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு நூறு அகவை நிறைவு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு நாங்கள் திண்டுக்கல் காந்திகிராம ஊழியரகத்தை அடைந்த பொழுது நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தன, பேராசிரியர் பழனிதுரை உரையாற்றிக் கொண்டிருந்தார். மாலை நான்கு மணி ஆகிவிட்டது. காலை முதலே நிகழ்ச்சிகள், ஆசியளித்தல்கள் என இருந்திருக்கும் என...

One more Bottle!

எங்களை விட உயரம் குறைவாக இருந்தாலோ என்னவோ அவள் கண்களுக்குத்தான் பறவைகள் அதிகம் தட்டுப்பட்டன. அகல்யா. உயரத்தின் காரணத்தால் பார்வைகோணம் மாறுபடுவது மட்டுமல்ல, பொதுவாகவே இப்பயணத்தில் பல பறவைகளை முதலில் அடையாளம் காட்டியது அவளே. அதுவும் குறிப்பாக பார்வைக்கு அதிகம் சிக்காத குயிலனங்களை கண்டறிவதில் தேர்ச்சி பெற்றிருந்தாள் (Cuckoo Spotter!). மொத்தம் மூன்று ஜோடிகள் விஜயபாரதி-கெளசல்யா, கோபி-சரண்யா, திரு-காயத்ரி ; மூன்று பேச்சிலர்கள் (பயணத்தின் போது மட்டும்) ஈஸ்வரமூர்த்தி, ஞானவேல், நான்; நிறைய குழந்தைகள் ஆதித்யா, அகல்யா, அன்பரசி, மகிழ், மஞ்சரி என அந்த சிறுமலை பயணத்திற்கான குழு அமைந்திருந்தது. நாங்கள் முதல் நாள் சனி காலை கொடைக்கானல் ஏறும் பாதையில் ஒரு திருப்பமெடுத்து அங்கு பெருமாள்மலை என்ற பகுதியை ஒட்டி நிலைகொண்டோம். பகல் முழுக்க அங்கு பறவை பார்த்து முடித்துவிட்டு அங்கிருந்து சிறுமலைக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். மொத்தம் மூன்று கார்களில் எங்கள் கார் முன்னரே அடிவாரத்தை அடைந்திருந்தது. இருபுறமும் மாந்தோப்புகள் தென்பட தொடங்கியிருந்தன. இவ்வருடம் மழை மற்றும் காற்றின் ஒத்துழைப்பில் பூக்கள் அதிகம் உதிராத...

ஈரோடு நாடகக் கொட்டாய் - நீர்வழிப்படூஉம்

 மகரந்தம் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோடு நாடக கொட்டாயில் நடைபெற்ற 'நீர்வழிப்படூஉம்' நாவலின் நாடக வடிவைக் காண நேற்று மாலை நண்பர்கள் ரஞ்சனி, விக்ரம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சென்றிருந்தேன். ஈரோடு நாடக கொட்டகை கட்டிடம் கூத்துப்பட்டறையின் நிறுவனர் மறைந்த ந. முத்துசாமியின் நினைவகமும் கூட. மறைந்த ஆசிரியரின் வழியில் தொடர்ந்து செயலை முன்னெடுப்பதே வாழும் நினைவகமாக இருக்க முடியும். அவ்வகையில் வெவ்வேறு நவீன நாடக முயற்சிகள் தொடர்ந்து இக்கொட்டகையில் அரங்கேறுவதாய் அறிகிறேன். கொட்டகை அமைந்துள்ள கட்டிடம் முன்னர் ஒரு தேவாலாயமாக இருந்த இடம். உயர்ந்த நீண்ட ஓட்டுக்கூரை வடிவத்தை இப்போதும் நாம் பார்க்கலாம். மனித நாடகங்களை அரங்கேற்ற தேவனின் ஆலயம் ஏற்ற இடம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்திருந்ததை விடவும் தற்போது அரங்கம் புதுப்பொலிவுடன் இருந்தது. பார்வையாளர்களுக்கான கேலரி புதிதாக அமைத்திருந்தார்கள். சுமார் அறுபது பேர் வரை வசதியாக அமர்ந்து நாடகம் பார்க்கலாம். தற்போது கொட்டகையை நிர்வகிப்பவர் முத்துசாமியின் மாணவர் சதீஷ் குமார். அவரும் தோழர் கலைக்கோவனும் இணைந்தே 'ந...

சிறுமலை பயணம் - படங்கள்

One more Bottle - சிறுமலை பயணக் குறிப்பு குட்டீஸ்:)   Velvet-fronted Nuthatch கருந்தலைச் சில்லை தெக்கத்தி மலையில் இறுதிக் காட்சியாக துடுப்புவாலன் Choco Boy விழுப்புண் பெற்ற blue tiger Common Blue bottle The transparent one வழுக்குனா விட்ருவனா.. Rock agama, On top of the world The spotter while spotting அழகு ஆண்களின் நடுவே.. மலர்ச் சூரியன் ஆயிரம் ஜன்னல் வீடு துணை Shining Silver வழி வழிகாட்டி கருப்பண்ணசாமி வழித்துணையுடன் வேலி தாண்டிய மலர் படங்கள்: அன்பரசி, வேலு, பாரி. (நிறைவு)