நேற்று கவிஞர் தேவதேவனின் பிறந்தநாள் என்று சொன்னார்கள். ப்ரியத்துக்குரிய கவிஞரை எண்ணிக்கொள்ள மேலுமொரு தருணம் என நினைத்துக் கொண்டேன். ஆசிரியர் ஜெ துவங்கி
அவரின் கவிதையுலகை அறிமுகப்படுத்தும் நிறைய நல்ல கட்டுரைகள், ரசனை குறிப்புகள், அவரின் கவி உள்ளம் செயல்படும் விதத்தை அருகிலிருந்து அனுபவித்த அனுபவப் பதிவுகள் என பலவும் எழுதப்பட்டுவிட்டன. அநேகமாக நவீன தமிழ் கவிஞர்கள் வரிசையில் அதிகம் மேற்கோள் காட்டப்படுவராகவும் அதிகம் விவாதிக்கப்பட்டவராகவும் தேவதேவன் இருக்கலாம்.ஆனால் இன்று இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது அவர் ஒரு வகையில் காதல் கவிஞர் என்ற எண்ணமே எனக்கு முதலில் எழுந்தது. ஊட்டி குருநித்யா காவிய முகாமில் அவரது கவிதைகள் குறித்த விவாதத்தில் ஆசிரியர் ஜெ ஒருமுறை உலகில் எழுதப்பட்ட மிகச்சிறந்த காதல் கவிதைகளில் ஒன்றாக “காபி சாப்பிடலாம் வா..” கவிதையை குறிப்பிட்டார். அப்போதே அது ஆண் பெண் உறவு குறித்தான கவிதை மட்டுமல்ல என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனக்கு முதன் முதலாக “யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்” என்ற கவிதை வழியே தான் தேவதேவன் அறிமுகமாகியிருந்தார். என்னுள் எவ்வாறோ இந்த இரு கவிதைகளும் இணைந்து கொண்டன. ஒன்றின் பிரதிபலிப்பாக இன்னொன்று தோன்றியது. அல்லது ஒன்றின் நீட்சியாக இன்னொன்று. திருமணம் நிச்சயம் ஆன சமயத்தில் அவளுக்கு “காபி சாப்பிடலாம் வா..” கவிதையை யார் பெயரும் போடாமல் என்னுடைய கவிதையைப்போல அனுப்பியிருந்தேன். முதலில் “என்ன இது கல்யாணத்துக்கு முன்னாடியே கட்டிப்பிடி முத்தம் கொடுன்னு..? இப்டியெல்லாம் பேசுனா நா யோசிக்க வேண்டியிருக்கும்.. “ என்று ஒரு குறுஞ்செய்தி. தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிக்கொண்டோமே எனத் தோன்றியது. ஐந்து நிமிட இடைவெளியில் அவளே அடுத்த செய்தியை அனுப்பினாள். “ஸாரி.. ஸாரி.. எனக்கு இப்பதான் புரிஞ்சுது, இந்த வாரம் காபி சாப்பிடலாம்” என்று அனுப்பியிருந்தாள். அவளுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை, ஆனால் திருமணம் முடியும் வரை அது என்னுடைய கவிதை என்பது மாதிரியே மெயின்டெய்ன் செய்து கொண்டேன்.
நேற்று கவிஞர் வேணு மொழிபெயர்த்த தேவதேவனின் கவிதை ஒன்று கவனத்திற்கு வந்தது. கவிதைகள் இதழில் வந்த If tickled.. எனும் கவிதை. கவிதை மொழியாக்கம் என்பது பிற மொழியினருக்கு கவிதையை கடத்ததுதல் என்பதைத் தாண்டி என்னளவில் முதன்மையாக அது கவிதையை தியானிக்கும் செயல்பாடு தான். எந்த மொழியாக்கமும் அவ்வகையில் மூலப்படைப்புடன் அதிக நேரம் செலவிடுவதற்கான முகாந்திரம் தான். அவ்வகையில் கவிஞர் வேணு தன் மொழியாக்கத்தால் கவிதையை அடிக்கோடிட்டு இருக்கிறார்.
காணுமிடத்தையெல்லாம் முத்தமிட்டு களிக்கும் கவிக்கு என் வணக்கம்.
If tickled... - DevaDevan ~ கவிதைகள்

Comments
Post a Comment