மகரந்தம் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோடு நாடக கொட்டாயில் நடைபெற்ற 'நீர்வழிப்படூஉம்' நாவலின் நாடக வடிவைக் காண நேற்று மாலை நண்பர்கள் ரஞ்சனி, விக்ரம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சென்றிருந்தேன்.
ஈரோடு நாடக கொட்டகை கட்டிடம் கூத்துப்பட்டறையின் நிறுவனர் மறைந்த ந. முத்துசாமியின் நினைவகமும் கூட. மறைந்த ஆசிரியரின் வழியில் தொடர்ந்து செயலை முன்னெடுப்பதே வாழும் நினைவகமாக இருக்க முடியும். அவ்வகையில் வெவ்வேறு நவீன நாடக முயற்சிகள் தொடர்ந்து இக்கொட்டகையில் அரங்கேறுவதாய் அறிகிறேன். கொட்டகை அமைந்துள்ள கட்டிடம் முன்னர் ஒரு தேவாலாயமாக இருந்த இடம். உயர்ந்த நீண்ட ஓட்டுக்கூரை வடிவத்தை இப்போதும் நாம் பார்க்கலாம். மனித நாடகங்களை அரங்கேற்ற தேவனின் ஆலயம் ஏற்ற இடம்தான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்திருந்ததை விடவும் தற்போது அரங்கம் புதுப்பொலிவுடன் இருந்தது. பார்வையாளர்களுக்கான கேலரி புதிதாக அமைத்திருந்தார்கள். சுமார் அறுபது பேர் வரை வசதியாக அமர்ந்து நாடகம் பார்க்கலாம்.
தற்போது கொட்டகையை நிர்வகிப்பவர் முத்துசாமியின் மாணவர் சதீஷ் குமார். அவரும் தோழர் கலைக்கோவனும் இணைந்தே 'நீர்வழிப்படூஉம்' நாவலின் நாடக வடிவத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
நாவலின் நாடக வடிவம் என அறிவிப்பில் பொதுவாக போட்டிருந்தாலும் நாவலில் இடம்பெறும் குறிப்பிட்ட மூன்று நாடகீய தருணங்களை மட்டுமே இணைத்து நாடகத்தை அமைத்திருந்தார்கள். காரு மாமா சவரம் செய்யும் பணியில் இருக்கையில் தன் மனைவி ராசம்மா செட்டியுடன் ஓடிப்போய்விட்டாள் என்ற செய்தியை கேள்விப்படுவது முதல் தருணம். காலடித்தடங்களைக் கொண்டு மனைவியுடன் சேர்ந்து குழந்தைகளும் போய்விட்டார்கள் என்பதையறிந்து ஒரே நாளில் தன் உலகம் நிர்மூலமாகிவிட்டதை உணரும் கணம்.
அடுத்தக் காட்சி பனிரெண்டு ஆண்டுகள் கழித்து காரு மாமா இறந்த பின்பு அவரின் சாவுக்கு வந்துசேரும் மனைவி ராசம்மாவும் வயதுக்கு வந்த பெண் ஈஸ்வரியும். நீண்ட தன்விளக்கமும், ஒப்பாரியும், தற்போதைய கையறுநிலையும் அரங்கேறும் இக்காட்சியில் ராசம்மாவாக தோன்றியவர் சிறப்பாக நடித்திருந்தார்.
நாவலின் இறுதியில் நடைபெறும் பகடை விளையாட்டு, நாவலை வாசித்தவர்கள் யாரும் மறக்க முடியாத பகுதி. ஒரு காதலும், இருவரின் வாழ்வும் மொத்த குடும்பத்தின் எதிர்காலமும் ஓர் எளிய பகடையாட்டத்தில் விளையாட்டாய் முடிவாகப்போவதாய் வரும். ஆனால் யோசித்துப் பார்த்தால் அத்தருணம் விளையாட்டானது அல்ல. எந்த மனித வாழ்விலுமே வாழ்வை தீர்மாணிக்கும் முக்கிய முடிவுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லாத நம் கரங்களாலோ அல்லது ஏதோவொன்றின் கரங்களாலோதான் எடுக்கப்படுகிறது. அந்த பகடையாட்டக் காட்சியை சுமார் இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்ளாக எடுத்திருந்தார்கள். எனவே அக்காட்சிக்கான போதிய 'அழுத்தம்' உருவாகமல் போய்விட்டதாக உணர்ந்தேன். அருகிலிருந்த விக்ரமும் தான் இதுவரை நாவல் வாசிக்காததால் இறுதிக்காட்சியில் எந்த எழுச்சியும் உருவாகவில்லை என்றார்.
நாடகம் முடிந்ததும் அதைக் குறித்த உரையாடல் பகுதி என்று அமைத்திருந்தார்கள். எழுத்தாளர் தேவிபாரதியும் அரங்குக்கு வந்திருந்ததால் அவருடன் வாசகர்கள் தங்கள் அன்பை பகிர்ந்துகொள்ளும் பகுதியாக அது மாறிப் போனது. தேவிபாரதி சார் சென்ற ஆண்டு பார்த்ததை விடவும் தற்போது உற்சாகமாகவும் உடல்நிலை முன்னேறி நன்கு பேசக் கூடியவராகவும் இருந்தார்.
நாடகம் குறித்த தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். நாவலில் வரும் வாழ்க்கை எந்தளவு தன் சொந்த வாழ்வுடன் தொடர்புடையது என்று சொனார். காரு மாமாவையும் அந்த நிலத்தையும் அவர் தினமும் பார்த்து வளர்ந்திருக்கிறார். ஒருவகையில் அவர் நெருங்கிய சொந்தம் என்றார். ஆனால் நாவலில் புனைவம்சம் உள்ளது. புனைவு இல்லாமல் எதுவும் உண்மையோ முழுமையோ ஆவதில்லை. 'ஆதியாகமம்' நாவலையும் முடிக்க வேண்டிய இன்னும் இரு நாவல்களையும் முடித்தே தீருவேன் என்றார்.
அதன்பிறகு அவர் தான் பேசுவதை விடவும் பார்வையாளர்களிடம் உரையாடவே விரும்பினார். வாசகர்கள், நெருங்கிய நண்பர்கள் என மேடைக்கு பேச வந்த அனைவரின் கைகளையும் பற்றிக் கொண்டார். அனைவருமே அவரை நீண்டநாள் கழித்து நல்ல நிலையில் பார்ப்பதால் மொத்த அரங்குமே ஒருவித நெகிழ்ச்சியுடன் இருந்தது.
அவரின் நீண்டநாள் நண்பர் ஒருவர், அவருடன் அலுவலகத்தில் வேலை பார்த்தவர் தேவிபாரதியுடன் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். சினிமா பிரபலங்களுடன் நட்பில் இருப்பவர் எப்படி தன்னுடனும் எளிமையாக பழகுவார் என வியந்து வியந்து சொல்லிக் கொண்டிருந்தார். நண்பர் நல்ல நோக்கில் சொன்னாலும் எனக்கு எரிச்சலாக இருந்தது. நிழலின் தனிமையும், பிறகொரு இரவும், நட்ராஜ் மகராஜ்ஜும் எழுதியவரிடம் நமக்கு வியப்பதற்கு வேறெதுவுமே இல்லையா? அவர் சினிமா பிரபலங்களிடம் விடியவிடிய இலக்கியம் பேசுவார் என்று எழுத்தாளர்களை குறித்து 'பெருமையாக' சொல்வதை இனிமேலும் தமிழ் கலைச்சமூகம் தொடரக்கூடாது. யோசித்துப் பாருங்கள் சிவக்குமாரோ, நாசரோ இருக்கும் மேடையில் அவர்களின் நண்பர்கள் யாராவது தேவிபாரதி சாருக்கே நாசரை அடையாளம் தெரியும் என்று பெருமையாக சொல்வார்களா என்ன?
நான் சென்று நண்பரின் இந்தக் கருத்துக்கான என் மறுப்பை அவையில் தெரிவித்தேன். மேலும் நாடகத்தில் காரு மாமாவும் ராசம்மாவாக நடித்தவரும் நன்றாக நடித்தார்கள் என்றும் இறுதிக் காட்சியின் அழுத்தம் மட்டும் போதவில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்தேன்.
நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு அமைப்பாளர்கள் குறியாய் இருந்தனர். மாதாமாதம் மகரந்தம் வாசிப்பு இயக்கம் நடத்தும் இலக்கிய கூடுகைகளிலும் இந்த நேர ஒழுங்கு கடைபிடிக்கப்படுவதாய் சொன்னார்கள். பிரதி மாதம் மூன்றாம் சனி மாலை 5 முதல் 8 ஒரு புத்தகம் குறித்து இக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நாடகத்தை முன்னெடுத்ததோடு தொடர்ந்து வாசிப்பையும் முன்னெடுக்கும் ஈரோடு மகரந்தம் வாசிப்பு இயக்கத்திற்கு வாழ்த்துக்கள்.
***
மேலும் படங்கள்:






Comments
Post a Comment