நான் மத நம்பிக்கையாளன் அல்ல. இதுவரை இறை நம்பிக்கையாளனும் கூட அல்ல. ஆனாலும் இது அடிக்கடி நேர்கிறது. வாழ்வுத் தருணங்களில் நாம் சோர்வடைந்தோ சற்றே குழப்பத்துடனோ மன சஞ்சலத்துடன் இருக்கையில் எங்கிருந்தோ ஒரு பைபிள் வசனம் ஒரு சுடரைப் போல நம்முன் தோன்றி நம் அகத்தை நமக்கே மீட்டளிப்பதைப் பார்த்திருக்கிறேன். இன்று ஒரு மருத்துவமனையின் காத்திருப்பு நேரத்தில் அவ்வாறான ஒரு தருணம் வாய்க்கப் பெற்றது. ஆண்டவருக்கு கட்டியணைத்து முத்தங்கள்.
இன்று அந்த துளிக் கருமைக்கான நாள் போலும். தினசரி காலைநடையில் நான் கண்களைப் பார்த்து முகமன் உரைப்பது அந்தப் பெரியவரிடம் மட்டும்தான். முகமன் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு தலையசைப்பு, பதிலுக்கு அவரும் ஒரு தலையசைப்பு. அவர் தன் வயலோரமாக சாலையை ஒட்டி அமைந்திருக்கும் மாமரத்தின் அடியில் சிமெண்ட் கல்வெர்ட்டில் அமர்ததிருப்பார். ஊன்றுகோல் எப்போதும் துணையிருக்கும். எப்போதாவது “மாங்கா வேணுமா, சொரக்கா வேணுமா?” எனக் கேட்பார். வீட்ல செஞ்சிருப்பாங்களே ஐயா என்று கடந்து விடுவேன். இன்றைய நடையின் போது தூரத்திலிருந்தே பார்த்துவிட்டேன், அவர் கோழிக்கொண்டை வயலுக்கு நடுவே தன் ஊன்றுகோலின் கவட்டை பகுதியில் ஒரு காட்சிப்பொருளைப் போல அதை தூக்கிக் கொண்டு வந்தார், ஓர் அரவு. அவர் தூக்கி வந்த நிதானத்தையும் முகத்திலிருந்த பெருமிதத்தையும் பார்க்கும் போது பாம்பு பெரும்பாலும் இறந்துவிட்டது என்பது தெரிந்தது. நான் ஆர்வத்தில் முதலில் வேகமாக சென்றாலும் ஒருவேளை உயிர் எஞ்சியிருக்குமோ என்ற ஐயம் எழுந்தவுடன் கால்கள் தயங்கின. அந்த நேரத்தில் சாலையில் நான் மட்டுமே இருந்ததால் அவர் நேராக தூக்கிக் கொண்டு என் கிட்டத்திலேயே வந்துவிட்டார...