இன்று அந்த துளிக் கருமைக்கான நாள் போலும்.
தினசரி காலைநடையில் நான் கண்களைப் பார்த்து முகமன் உரைப்பது அந்தப் பெரியவரிடம் மட்டும்தான். முகமன் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு தலையசைப்பு, பதிலுக்கு அவரும் ஒரு தலையசைப்பு. அவர் தன் வயலோரமாக சாலையை ஒட்டி அமைந்திருக்கும் மாமரத்தின் அடியில் சிமெண்ட் கல்வெர்ட்டில் அமர்ததிருப்பார். ஊன்றுகோல் எப்போதும் துணையிருக்கும். எப்போதாவது “மாங்கா வேணுமா, சொரக்கா வேணுமா?” எனக் கேட்பார். வீட்ல செஞ்சிருப்பாங்களே ஐயா என்று கடந்து விடுவேன்.
இன்றைய நடையின் போது தூரத்திலிருந்தே பார்த்துவிட்டேன், அவர் கோழிக்கொண்டை வயலுக்கு நடுவே தன் ஊன்றுகோலின் கவட்டை பகுதியில் ஒரு காட்சிப்பொருளைப் போல அதை தூக்கிக் கொண்டு வந்தார், ஓர் அரவு. அவர் தூக்கி வந்த நிதானத்தையும் முகத்திலிருந்த பெருமிதத்தையும் பார்க்கும் போது பாம்பு பெரும்பாலும் இறந்துவிட்டது என்பது தெரிந்தது. நான் ஆர்வத்தில் முதலில் வேகமாக சென்றாலும் ஒருவேளை உயிர் எஞ்சியிருக்குமோ என்ற ஐயம் எழுந்தவுடன் கால்கள் தயங்கின.
அந்த நேரத்தில் சாலையில் நான் மட்டுமே இருந்ததால் அவர் நேராக தூக்கிக் கொண்டு என் கிட்டத்திலேயே வந்துவிட்டார். நான் சற்று பின்னடைந்ததும் அவர், “அட இளசா இருந்துட்டு இதுக்குப்போயி பயப்புடுறியே.. மயிலுக் கொத்தி ஏற்கனவே செத்துப்போச்சு” என்றார். ஆம் கொடியில் தொங்கப்போட்ட இடுப்புவாரைப் போல எந்த அசைவுமின்றி கிடந்தது. கருப்பு உடலில் வெள்ளை வரிகளைக் கண்டதும் கட்டு வரியனோ (விரியன் அல்ல, வரியன் என்பதே சரியான பெயர்) என யோசித்தேன். அவர் “கண்டங்கருவளை!” என்றார் கம்பீரமாக. கட்டு வரியனின் உள்ளூர் பெயர். “என்னென்னமோ வைத்தியம் இருக்குன்னு சொல்வாங்க.. ஆனா எதுவுமே வேலைக்கு ஆவாது, கடிச்ச ஆறு மணி நேரத்துல ஆள் காலி. பொழைக்க வழியில்ல” என்றார் சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் அழகிய புன்னகையுடன்.
அதற்குள் அவரது எருமைகள் குரலெழுப்ப வரியனை சாலையிலேயே கிடத்திவிட்டு சென்றார்.
தீட்டப்பட்ட வாள் குருதியை அடைந்தே தீரும் என்பார்கள். எனில் தேக்கிய நஞ்சு என்னவாகும்? வேறொரு உலகில் வேறொரு யதார்த்தத்தில் அது உமிழப்படுமா? தான் இறந்த திசையை வெறித்து நோக்கியபடி சாலையில் கிடந்தது அரவம். அது கிடந்த விதத்தைப் பார்க்கும் போது அதற்கு உயிர் பிரிந்ததா அல்லது வந்தாதா தெரியவில்லை.


தீட்டப்பட்ட வாள் குருதியை அடைந்தே தீரும் என்பார்கள். எனில் தேக்கிய நஞ்சு என்னவாகும்? வேறொரு உலகில் வேறொரு யதார்த்தத்தில் அது உமிழப்படுமா?
ReplyDeleteஎன்றும் நினைவில் நிற்கும் வரிகள்
💙
Delete