Skip to main content

கண்டங்கருவளை - எஞ்சும் நஞ்சு

இன்று அந்த துளிக் கருமைக்கான நாள் போலும்.


தினசரி காலைநடையில் நான் கண்களைப் பார்த்து முகமன் உரைப்பது அந்தப் பெரியவரிடம் மட்டும்தான். முகமன் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு தலையசைப்பு, பதிலுக்கு அவரும் ஒரு தலையசைப்பு. அவர் தன் வயலோரமாக சாலையை ஒட்டி அமைந்திருக்கும் மாமரத்தின் அடியில் சிமெண்ட் கல்வெர்ட்டில் அமர்ததிருப்பார். ஊன்றுகோல் எப்போதும் துணையிருக்கும். எப்போதாவது “மாங்கா வேணுமா, சொரக்கா வேணுமா?” எனக் கேட்பார். வீட்ல செஞ்சிருப்பாங்களே ஐயா என்று கடந்து விடுவேன்.


இன்றைய நடையின் போது தூரத்திலிருந்தே பார்த்துவிட்டேன், அவர் கோழிக்கொண்டை வயலுக்கு நடுவே தன் ஊன்றுகோலின் கவட்டை பகுதியில் ஒரு காட்சிப்பொருளைப் போல அதை தூக்கிக் கொண்டு வந்தார், ஓர் அரவு. அவர் தூக்கி வந்த நிதானத்தையும் முகத்திலிருந்த பெருமிதத்தையும் பார்க்கும் போது பாம்பு பெரும்பாலும் இறந்துவிட்டது என்பது தெரிந்தது. நான் ஆர்வத்தில் முதலில் வேகமாக சென்றாலும் ஒருவேளை உயிர் எஞ்சியிருக்குமோ என்ற ஐயம் எழுந்தவுடன் கால்கள் தயங்கின.



அந்த நேரத்தில் சாலையில் நான் மட்டுமே இருந்ததால் அவர் நேராக தூக்கிக் கொண்டு என் கிட்டத்திலேயே வந்துவிட்டார். நான் சற்று பின்னடைந்ததும் அவர், “அட இளசா இருந்துட்டு இதுக்குப்போயி பயப்புடுறியே.. மயிலுக் கொத்தி ஏற்கனவே செத்துப்போச்சு” என்றார். ஆம் கொடியில் தொங்கப்போட்ட இடுப்புவாரைப் போல எந்த அசைவுமின்றி கிடந்தது. கருப்பு உடலில் வெள்ளை வரிகளைக் கண்டதும் கட்டு வரியனோ (விரியன் அல்ல, வரியன் என்பதே சரியான பெயர்) என யோசித்தேன். அவர் “கண்டங்கருவளை!” என்றார் கம்பீரமாக. கட்டு வரியனின் உள்ளூர் பெயர். “என்னென்னமோ வைத்தியம் இருக்குன்னு சொல்வாங்க.. ஆனா எதுவுமே வேலைக்கு ஆவாது, கடிச்ச ஆறு மணி நேரத்துல ஆள் காலி. பொழைக்க வழியில்ல” என்றார் சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் அழகிய புன்னகையுடன்.


அதற்குள் அவரது எருமைகள் குரலெழுப்ப வரியனை சாலையிலேயே கிடத்திவிட்டு சென்றார்.


தீட்டப்பட்ட வாள் குருதியை அடைந்தே தீரும் என்பார்கள். எனில் தேக்கிய நஞ்சு என்னவாகும்? வேறொரு உலகில் வேறொரு யதார்த்தத்தில் அது உமிழப்படுமா? தான் இறந்த திசையை வெறித்து நோக்கியபடி சாலையில் கிடந்தது அரவம். அது கிடந்த விதத்தைப் பார்க்கும் போது அதற்கு உயிர் பிரிந்ததா அல்லது வந்தாதா தெரியவில்லை.


 


Comments

  1. தீட்டப்பட்ட வாள் குருதியை அடைந்தே தீரும் என்பார்கள். எனில் தேக்கிய நஞ்சு என்னவாகும்? வேறொரு உலகில் வேறொரு யதார்த்தத்தில் அது உமிழப்படுமா?

    என்றும் நினைவில் நிற்கும் வரிகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீலக்குறுநிலவு

"இப்ப ஒரு தவிப்புக் குரல் கேக்குதில்லையா.. இத கவனிச்சு பாருங்க, கொஞ்சம் கொஞ்சமா இந்தக் குரலோட ஸ்ருதி ஏறிட்டே போகும். அதுக்கப்றம் ஒரே சொல், இல்லயில்ல ஒரு இரட்டை சொல் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கும், சிலப்பம் நாள் முழுக்கக் கூட கேக்குறதுண்டு. குறிப்பா இரவு நேரத்துல கேக்க ஆரம்பிச்சா அப்றம் நிக்காது. நேத்து நைட் எங்க கிணத்துக்குடில் பக்கம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. இது இப்டி பித்து பிடிச்ச மாதிரி ராத்திரி முழுக்க கத்திட்டே இருக்குறதால இதுக்கு Brain fever Bird ன்னு பேரு" என்று சுசித்ரா அக்காவிடம் நித்யவனத்தின் லைப்ரரி ஹால் வாசலில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். கோடை காலம் ஆதலால் விடியற்காலையின் எஞ்சியிருந்த குளிரும் விரைவாக அகன்று நன்றாக வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. "ஓ இன்ட்ரெஸ்டிங் நேம்", சுசித்ரா அக்கா சிறிது நேரம் செவிகூர்ந்தார், "ஆமா ரொம்ப தொந்திரவான குரல்தான். மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் ஒரு அழைப்பு அல்லது கட்டளையிடப்படும் ஒரு ஆணை மாதிரி கேக்குதில்லையா" "ஆமாக்கா. சரியா சொன்னீங்க. இந்தக் குரல்ல இருக்குறது அழைப்புக்கான தவிப்பா இல்ல...

தினமும் எழுந்துவரும் ஜோதி

  அன்புள்ள ஆசிரியருக்கு, “இதுவே இந்தச் சொற்களை அல்லது இம்மாதிரி வாக்கியங்களை வேற யாராச்சும் சொல்லிருந்தா எளிமையா தேய்வழக்குன்னு ஒதுக்கித் தள்ளியிருப்போம். ஆனா பாட்டி மாதிரி ஓர் ஆளுமை சொல்லும்போது சொற்களுக்கு உண்மையிலேயே உயிர் வந்திடுது” என்றார் கிருஷ்ணன் சார். எனக்கும் பள்ளி நாட்களில் யோகா ஆசிரியர் மூலமாக அறிமுகமான அச்சொற்கள் அப்போது எந்த அதிர்வையும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் பாட்டியின் உச்சரிப்பில் அவை ஓர் அசரீரி போல் ஒலிப்பதை எண்ணிக் கொண்டேன். பாட்டிக்கு அச்சொற்களை சொல்லும் போது மட்டும் சுத்தமாக குரல் நடுங்குவதில்லை. உச்சரிக்கும் பொழுது முழுமைக்கும் சித்தம் அச்சொற்களுக்கே என ஒப்படைத்து அழுத்தம் திருத்தமாக சொல்வார், “அருட்பெருஞ்ஞ்ஞ்.. ஜோதி தனிப்பெருங்ங்ங்.. கருணை” கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு நூறு அகவை நிறைவு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு நாங்கள் திண்டுக்கல் காந்திகிராம ஊழியரகத்தை அடைந்த பொழுது நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தன, பேராசிரியர் பழனிதுரை உரையாற்றிக் கொண்டிருந்தார். மாலை நான்கு மணி ஆகிவிட்டது. காலை முதலே நிகழ்ச்சிகள், ஆசியளித்தல்கள் என இருந்திருக்கும் என...

One more Bottle!

எங்களை விட உயரம் குறைவாக இருந்தாலோ என்னவோ அவள் கண்களுக்குத்தான் பறவைகள் அதிகம் தட்டுப்பட்டன. அகல்யா. உயரத்தின் காரணத்தால் பார்வைகோணம் மாறுபடுவது மட்டுமல்ல, பொதுவாகவே இப்பயணத்தில் பல பறவைகளை முதலில் அடையாளம் காட்டியது அவளே. அதுவும் குறிப்பாக பார்வைக்கு அதிகம் சிக்காத குயிலனங்களை கண்டறிவதில் தேர்ச்சி பெற்றிருந்தாள் (Cuckoo Spotter!). மொத்தம் மூன்று ஜோடிகள் விஜயபாரதி-கெளசல்யா, கோபி-சரண்யா, திரு-காயத்ரி ; மூன்று பேச்சிலர்கள் (பயணத்தின் போது மட்டும்) ஈஸ்வரமூர்த்தி, ஞானவேல், நான்; நிறைய குழந்தைகள் ஆதித்யா, அகல்யா, அன்பரசி, மகிழ், மஞ்சரி என அந்த சிறுமலை பயணத்திற்கான குழு அமைந்திருந்தது. நாங்கள் முதல் நாள் சனி காலை கொடைக்கானல் ஏறும் பாதையில் ஒரு திருப்பமெடுத்து அங்கு பெருமாள்மலை என்ற பகுதியை ஒட்டி நிலைகொண்டோம். பகல் முழுக்க அங்கு பறவை பார்த்து முடித்துவிட்டு அங்கிருந்து சிறுமலைக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். மொத்தம் மூன்று கார்களில் எங்கள் கார் முன்னரே அடிவாரத்தை அடைந்திருந்தது. இருபுறமும் மாந்தோப்புகள் தென்பட தொடங்கியிருந்தன. இவ்வருடம் மழை மற்றும் காற்றின் ஒத்துழைப்பில் பூக்கள் அதிகம் உதிராத...

ஈரோடு நாடகக் கொட்டாய் - நீர்வழிப்படூஉம்

 மகரந்தம் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோடு நாடக கொட்டாயில் நடைபெற்ற 'நீர்வழிப்படூஉம்' நாவலின் நாடக வடிவைக் காண நேற்று மாலை நண்பர்கள் ரஞ்சனி, விக்ரம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சென்றிருந்தேன். ஈரோடு நாடக கொட்டகை கட்டிடம் கூத்துப்பட்டறையின் நிறுவனர் மறைந்த ந. முத்துசாமியின் நினைவகமும் கூட. மறைந்த ஆசிரியரின் வழியில் தொடர்ந்து செயலை முன்னெடுப்பதே வாழும் நினைவகமாக இருக்க முடியும். அவ்வகையில் வெவ்வேறு நவீன நாடக முயற்சிகள் தொடர்ந்து இக்கொட்டகையில் அரங்கேறுவதாய் அறிகிறேன். கொட்டகை அமைந்துள்ள கட்டிடம் முன்னர் ஒரு தேவாலாயமாக இருந்த இடம். உயர்ந்த நீண்ட ஓட்டுக்கூரை வடிவத்தை இப்போதும் நாம் பார்க்கலாம். மனித நாடகங்களை அரங்கேற்ற தேவனின் ஆலயம் ஏற்ற இடம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்திருந்ததை விடவும் தற்போது அரங்கம் புதுப்பொலிவுடன் இருந்தது. பார்வையாளர்களுக்கான கேலரி புதிதாக அமைத்திருந்தார்கள். சுமார் அறுபது பேர் வரை வசதியாக அமர்ந்து நாடகம் பார்க்கலாம். தற்போது கொட்டகையை நிர்வகிப்பவர் முத்துசாமியின் மாணவர் சதீஷ் குமார். அவரும் தோழர் கலைக்கோவனும் இணைந்தே 'ந...

சிறுமலை பயணம் - படங்கள்

One more Bottle - சிறுமலை பயணக் குறிப்பு குட்டீஸ்:)   Velvet-fronted Nuthatch கருந்தலைச் சில்லை தெக்கத்தி மலையில் இறுதிக் காட்சியாக துடுப்புவாலன் Choco Boy விழுப்புண் பெற்ற blue tiger Common Blue bottle The transparent one வழுக்குனா விட்ருவனா.. Rock agama, On top of the world The spotter while spotting அழகு ஆண்களின் நடுவே.. மலர்ச் சூரியன் ஆயிரம் ஜன்னல் வீடு துணை Shining Silver வழி வழிகாட்டி கருப்பண்ணசாமி வழித்துணையுடன் வேலி தாண்டிய மலர் படங்கள்: அன்பரசி, வேலு, பாரி. (நிறைவு)