அன்புள்ள ஆசிரியருக்கு,
“இதுவே இந்தச் சொற்களை அல்லது இம்மாதிரி வாக்கியங்களை வேற யாராச்சும் சொல்லிருந்தா எளிமையா தேய்வழக்குன்னு ஒதுக்கித் தள்ளியிருப்போம். ஆனா பாட்டி மாதிரி ஓர் ஆளுமை சொல்லும்போது சொற்களுக்கு உண்மையிலேயே உயிர் வந்திடுது” என்றார் கிருஷ்ணன் சார். எனக்கும் பள்ளி நாட்களில் யோகா ஆசிரியர் மூலமாக அறிமுகமான அச்சொற்கள் அப்போது எந்த அதிர்வையும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் பாட்டியின் உச்சரிப்பில் அவை ஓர் அசரீரி போல் ஒலிப்பதை எண்ணிக் கொண்டேன். பாட்டிக்கு அச்சொற்களை சொல்லும் போது மட்டும் சுத்தமாக குரல் நடுங்குவதில்லை. உச்சரிக்கும் பொழுது முழுமைக்கும் சித்தம் அச்சொற்களுக்கே என ஒப்படைத்து அழுத்தம் திருத்தமாக சொல்வார், “அருட்பெருஞ்ஞ்ஞ்.. ஜோதி தனிப்பெருங்ங்ங்.. கருணை”

கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு நூறு அகவை நிறைவு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு நாங்கள் திண்டுக்கல் காந்திகிராம ஊழியரகத்தை அடைந்த பொழுது நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தன, பேராசிரியர் பழனிதுரை உரையாற்றிக் கொண்டிருந்தார். மாலை நான்கு மணி ஆகிவிட்டது. காலை முதலே நிகழ்ச்சிகள், ஆசியளித்தல்கள் என இருந்திருக்கும் என்பதால் பாட்டி சோர்வுற்றிருக்கக் கூடும் என்று நினைத்தோம். ஆனால் நிறைவுரைக்கான தருணம் வந்ததும் அவர் திடமாகவே எழுந்து நின்று பேச ஆரம்பித்துவிட்டார், “காலைல நாலர மணிக்கு எழுந்தா இங்க இந்த ஓட்டுக்கூரைக்கு அடியில ஒக்காந்திட்டுதான் விடியலுக்காக பாத்திட்டு இருப்பேன். வலப்பக்கம் கைப்பிடிச்சுவருக்கு அப்பால பசுமைவெளி இருக்கே, அங்கதான் அந்த ஜோதி மொதல்ல எட்டிப் பார்க்கும். நேரா மேல வந்துடாது, அப்டியே சுத்திட்டு கொஞ்சம் கொஞ்சமா எழுந்து வரும். ஒளியால இந்த இடம் முழுக்க நிறைஞ்சிடும். ஒவ்வொருநாளும் அன்றைக்கான செயல் என்னன்னு அந்த ஜோதிவடிவானவன் சொல்லுவான். அவனோட கருணையினால அது அன்னைக்கு நிகழ்ந்தேறும். நீங்களும் சாதாரணமா நாலரைக்கோ, ஐந்தரைக்கோ இல்லாட்டி ஆறு மணிக்கு எழுந்து வந்து அந்த பெருஞ்ஜோதிய பாருங்க. நீங்க செய்யக்கூடிய செயல் எதுவா இருந்தாலும் அதை தொடங்குங்க.”

பாட்டியின் உரை முடிந்ததும் அவரை மரக்கன்றுகள் நடுவதற்காக அழைத்துச் சென்றார்கள். அவரின் மாணவர்கள் சார்பில் நூற்றி ஒன்று மரக்கன்றுகள் நடப்படுவதற்கு தயாராக இருந்தன. அனைத்துமே உள்ளூர் மர வகைகள். பாட்டி தன் கரங்களால் முதல் மரக்கன்றாக நீர்மருதத்தைத் தொட்டளித்தார்.
அதன்பிறகு அங்கேயே பலரும் ஆசி வாங்கத் தொடங்கினர். பழனிதுரை அவர்கள் முனை இயக்கத்தினாரான சிபி, கெளதம், செளமியா ஆகியோரை அழைத்துச் சென்று நடைபயணம் போனவங்க என்று அறிமுகப்படுத்தினார். நன்றாகத் தெரியுமே என்று பாட்டி அவர்களை கட்டியணைத்து ஆசியளித்தார். அடுத்ததாக ஒருவர் தான் நெய்வேலியில் இருந்து வந்திருப்பதாகச் சொல்லி பாட்டியின் பாதம் பணிந்தார். பாட்டிக்கு அவரை நன்றாகவே அடையாளம் தெரிந்திருந்தது. ஆசியளிப்பது போல் கையை கொண்டு சென்று அவரை முதுகில் குத்தி எழுந்திருடா என்றார், “அடுத்த தடவ வர்றதுக்குள்ள நீ ஏதாச்சும் செயல தொடங்கியிருக்கனும், இல்லாட்டி நானே வந்து பாப்பேன். வர முடியாதுன்னு நினைக்காத, என்னால எங்கவேணா வரமுடியும். இந்த வெயில் குறைஞ்சதும் நானே வருவேன்”. பாட்டி உரிமையுடன் அளித்த ஆசியையும் ஆணையையும் எண்ணி சுற்றியிருந்த அனைவரும் புன்னகையில் நின்றோம்.
ஜெ, சென்ற ஆண்டு ஊழியகரத்தில் நடந்த வேறொரு விழாவில் பேசிய போதும் இந்த நூறு அகவையில் இன்னமும் தான் செய்ய வேண்டிய பணிகள், பெற்றுத்தர வேண்டிய நிலங்கள் பற்றியே பேசினார். இப்போதும் அவர் தனக்கான பணித்திட்டங்களை கொண்டவராகவும் பிறரை செயலாற்றத் தூண்டுபவராகவுமே உள்ளார். நூறு அகவை என்பது நாம் வணங்கி மீள்வதற்கான ஒரு தருணம் மட்டுமே, மற்றபடி அவருடைய அகத்தின் செயல்விசைக்கு அது எவ்விதத்திலும் பொருட்டல்ல. மாமலைகளை காணும்போது அவற்றின் அகவையை நாம் எண்ணுவதில்லை. மாமனிதர்களும் அவ்வாறே. அத்தகைய இருப்பின் முன் துளியென உணர்ந்து நம்மை கரைத்துக் கொள்வது மட்டுமே நாம் செய்யக்கூடுவது. நிறைவான நாள்.
டி ஏ பாரி
 |
| திரும்பும் வழியில் |
Comments
Post a Comment