Skip to main content

தினமும் எழுந்துவரும் ஜோதி

 அன்புள்ள ஆசிரியருக்கு,


“இதுவே இந்தச் சொற்களை அல்லது இம்மாதிரி வாக்கியங்களை வேற யாராச்சும் சொல்லிருந்தா எளிமையா தேய்வழக்குன்னு ஒதுக்கித் தள்ளியிருப்போம். ஆனா பாட்டி மாதிரி ஓர் ஆளுமை சொல்லும்போது சொற்களுக்கு உண்மையிலேயே உயிர் வந்திடுது” என்றார் கிருஷ்ணன் சார். எனக்கும் பள்ளி நாட்களில் யோகா ஆசிரியர் மூலமாக அறிமுகமான அச்சொற்கள் அப்போது எந்த அதிர்வையும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் பாட்டியின் உச்சரிப்பில் அவை ஓர் அசரீரி போல் ஒலிப்பதை எண்ணிக் கொண்டேன். பாட்டிக்கு அச்சொற்களை சொல்லும் போது மட்டும் சுத்தமாக குரல் நடுங்குவதில்லை. உச்சரிக்கும் பொழுது முழுமைக்கும் சித்தம் அச்சொற்களுக்கே என ஒப்படைத்து அழுத்தம் திருத்தமாக சொல்வார், “அருட்பெருஞ்ஞ்ஞ்.. ஜோதி தனிப்பெருங்ங்ங்.. கருணை”


கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு நூறு அகவை நிறைவு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு நாங்கள் திண்டுக்கல் காந்திகிராம ஊழியரகத்தை அடைந்த பொழுது நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தன, பேராசிரியர் பழனிதுரை உரையாற்றிக் கொண்டிருந்தார். மாலை நான்கு மணி ஆகிவிட்டது. காலை முதலே நிகழ்ச்சிகள், ஆசியளித்தல்கள் என இருந்திருக்கும் என்பதால் பாட்டி சோர்வுற்றிருக்கக் கூடும் என்று நினைத்தோம். ஆனால் நிறைவுரைக்கான தருணம் வந்ததும் அவர் திடமாகவே எழுந்து நின்று பேச ஆரம்பித்துவிட்டார், “காலைல நாலர மணிக்கு எழுந்தா இங்க இந்த ஓட்டுக்கூரைக்கு அடியில ஒக்காந்திட்டுதான் விடியலுக்காக பாத்திட்டு இருப்பேன். வலப்பக்கம் கைப்பிடிச்சுவருக்கு அப்பால பசுமைவெளி இருக்கே, அங்கதான் அந்த ஜோதி மொதல்ல எட்டிப் பார்க்கும். நேரா மேல வந்துடாது, அப்டியே சுத்திட்டு கொஞ்சம் கொஞ்சமா எழுந்து வரும். ஒளியால இந்த இடம் முழுக்க நிறைஞ்சிடும். ஒவ்வொருநாளும் அன்றைக்கான செயல் என்னன்னு அந்த ஜோதிவடிவானவன் சொல்லுவான். அவனோட கருணையினால அது அன்னைக்கு நிகழ்ந்தேறும். நீங்களும் சாதாரணமா நாலரைக்கோ, ஐந்தரைக்கோ இல்லாட்டி ஆறு மணிக்கு எழுந்து வந்து அந்த பெருஞ்ஜோதிய பாருங்க. நீங்க செய்யக்கூடிய செயல் எதுவா இருந்தாலும் அதை தொடங்குங்க.”

பாட்டியின் உரை முடிந்ததும் அவரை மரக்கன்றுகள் நடுவதற்காக அழைத்துச் சென்றார்கள். அவரின் மாணவர்கள் சார்பில் நூற்றி ஒன்று மரக்கன்றுகள் நடப்படுவதற்கு தயாராக இருந்தன. அனைத்துமே உள்ளூர் மர வகைகள். பாட்டி தன் கரங்களால் முதல் மரக்கன்றாக நீர்மருதத்தைத் தொட்டளித்தார்.

அதன்பிறகு அங்கேயே பலரும் ஆசி வாங்கத் தொடங்கினர். பழனிதுரை அவர்கள் முனை இயக்கத்தினாரான சிபி, கெளதம், செளமியா ஆகியோரை அழைத்துச் சென்று நடைபயணம் போனவங்க என்று அறிமுகப்படுத்தினார். நன்றாகத் தெரியுமே என்று பாட்டி அவர்களை கட்டியணைத்து ஆசியளித்தார். அடுத்ததாக ஒருவர் தான் நெய்வேலியில் இருந்து வந்திருப்பதாகச் சொல்லி பாட்டியின் பாதம் பணிந்தார். பாட்டிக்கு அவரை நன்றாகவே அடையாளம் தெரிந்திருந்தது. ஆசியளிப்பது போல் கையை கொண்டு சென்று அவரை முதுகில் குத்தி எழுந்திருடா என்றார், “அடுத்த தடவ வர்றதுக்குள்ள நீ ஏதாச்சும் செயல தொடங்கியிருக்கனும், இல்லாட்டி நானே வந்து பாப்பேன். வர முடியாதுன்னு நினைக்காத, என்னால எங்கவேணா வரமுடியும். இந்த வெயில் குறைஞ்சதும் நானே வருவேன்”. பாட்டி உரிமையுடன் அளித்த ஆசியையும் ஆணையையும் எண்ணி சுற்றியிருந்த அனைவரும் புன்னகையில் நின்றோம்.

ஜெ, சென்ற ஆண்டு ஊழியகரத்தில் நடந்த வேறொரு விழாவில் பேசிய போதும் இந்த நூறு அகவையில் இன்னமும் தான் செய்ய வேண்டிய பணிகள், பெற்றுத்தர வேண்டிய நிலங்கள் பற்றியே பேசினார். இப்போதும் அவர் தனக்கான பணித்திட்டங்களை கொண்டவராகவும் பிறரை செயலாற்றத் தூண்டுபவராகவுமே உள்ளார். நூறு அகவை என்பது நாம் வணங்கி மீள்வதற்கான ஒரு தருணம் மட்டுமே, மற்றபடி அவருடைய அகத்தின் செயல்விசைக்கு அது எவ்விதத்திலும் பொருட்டல்ல. மாமலைகளை காணும்போது அவற்றின் அகவையை நாம் எண்ணுவதில்லை. மாமனிதர்களும் அவ்வாறே. அத்தகைய இருப்பின் முன் துளியென உணர்ந்து நம்மை கரைத்துக் கொள்வது மட்டுமே நாம் செய்யக்கூடுவது. நிறைவான நாள்.

டி ஏ பாரி


திரும்பும் வழியில்


Comments

Popular posts from this blog

நீலக்குறுநிலவு

"இப்ப ஒரு தவிப்புக் குரல் கேக்குதில்லையா.. இத கவனிச்சு பாருங்க, கொஞ்சம் கொஞ்சமா இந்தக் குரலோட ஸ்ருதி ஏறிட்டே போகும். அதுக்கப்றம் ஒரே சொல், இல்லயில்ல ஒரு இரட்டை சொல் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கும், சிலப்பம் நாள் முழுக்கக் கூட கேக்குறதுண்டு. குறிப்பா இரவு நேரத்துல கேக்க ஆரம்பிச்சா அப்றம் நிக்காது. நேத்து நைட் எங்க கிணத்துக்குடில் பக்கம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. இது இப்டி பித்து பிடிச்ச மாதிரி ராத்திரி முழுக்க கத்திட்டே இருக்குறதால இதுக்கு Brain fever Bird ன்னு பேரு" என்று சுசித்ரா அக்காவிடம் நித்யவனத்தின் லைப்ரரி ஹால் வாசலில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். கோடை காலம் ஆதலால் விடியற்காலையின் எஞ்சியிருந்த குளிரும் விரைவாக அகன்று நன்றாக வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. "ஓ இன்ட்ரெஸ்டிங் நேம்", சுசித்ரா அக்கா சிறிது நேரம் செவிகூர்ந்தார், "ஆமா ரொம்ப தொந்திரவான குரல்தான். மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் ஒரு அழைப்பு அல்லது கட்டளையிடப்படும் ஒரு ஆணை மாதிரி கேக்குதில்லையா" "ஆமாக்கா. சரியா சொன்னீங்க. இந்தக் குரல்ல இருக்குறது அழைப்புக்கான தவிப்பா இல்ல...

One more Bottle!

எங்களை விட உயரம் குறைவாக இருந்தாலோ என்னவோ அவள் கண்களுக்குத்தான் பறவைகள் அதிகம் தட்டுப்பட்டன. அகல்யா. உயரத்தின் காரணத்தால் பார்வைகோணம் மாறுபடுவது மட்டுமல்ல, பொதுவாகவே இப்பயணத்தில் பல பறவைகளை முதலில் அடையாளம் காட்டியது அவளே. அதுவும் குறிப்பாக பார்வைக்கு அதிகம் சிக்காத குயிலனங்களை கண்டறிவதில் தேர்ச்சி பெற்றிருந்தாள் (Cuckoo Spotter!). மொத்தம் மூன்று ஜோடிகள் விஜயபாரதி-கெளசல்யா, கோபி-சரண்யா, திரு-காயத்ரி ; மூன்று பேச்சிலர்கள் (பயணத்தின் போது மட்டும்) ஈஸ்வரமூர்த்தி, ஞானவேல், நான்; நிறைய குழந்தைகள் ஆதித்யா, அகல்யா, அன்பரசி, மகிழ், மஞ்சரி என அந்த சிறுமலை பயணத்திற்கான குழு அமைந்திருந்தது. நாங்கள் முதல் நாள் சனி காலை கொடைக்கானல் ஏறும் பாதையில் ஒரு திருப்பமெடுத்து அங்கு பெருமாள்மலை என்ற பகுதியை ஒட்டி நிலைகொண்டோம். பகல் முழுக்க அங்கு பறவை பார்த்து முடித்துவிட்டு அங்கிருந்து சிறுமலைக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். மொத்தம் மூன்று கார்களில் எங்கள் கார் முன்னரே அடிவாரத்தை அடைந்திருந்தது. இருபுறமும் மாந்தோப்புகள் தென்பட தொடங்கியிருந்தன. இவ்வருடம் மழை மற்றும் காற்றின் ஒத்துழைப்பில் பூக்கள் அதிகம் உதிராத...

ஈரோடு நாடகக் கொட்டாய் - நீர்வழிப்படூஉம்

 மகரந்தம் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோடு நாடக கொட்டாயில் நடைபெற்ற 'நீர்வழிப்படூஉம்' நாவலின் நாடக வடிவைக் காண நேற்று மாலை நண்பர்கள் ரஞ்சனி, விக்ரம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சென்றிருந்தேன். ஈரோடு நாடக கொட்டகை கட்டிடம் கூத்துப்பட்டறையின் நிறுவனர் மறைந்த ந. முத்துசாமியின் நினைவகமும் கூட. மறைந்த ஆசிரியரின் வழியில் தொடர்ந்து செயலை முன்னெடுப்பதே வாழும் நினைவகமாக இருக்க முடியும். அவ்வகையில் வெவ்வேறு நவீன நாடக முயற்சிகள் தொடர்ந்து இக்கொட்டகையில் அரங்கேறுவதாய் அறிகிறேன். கொட்டகை அமைந்துள்ள கட்டிடம் முன்னர் ஒரு தேவாலாயமாக இருந்த இடம். உயர்ந்த நீண்ட ஓட்டுக்கூரை வடிவத்தை இப்போதும் நாம் பார்க்கலாம். மனித நாடகங்களை அரங்கேற்ற தேவனின் ஆலயம் ஏற்ற இடம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்திருந்ததை விடவும் தற்போது அரங்கம் புதுப்பொலிவுடன் இருந்தது. பார்வையாளர்களுக்கான கேலரி புதிதாக அமைத்திருந்தார்கள். சுமார் அறுபது பேர் வரை வசதியாக அமர்ந்து நாடகம் பார்க்கலாம். தற்போது கொட்டகையை நிர்வகிப்பவர் முத்துசாமியின் மாணவர் சதீஷ் குமார். அவரும் தோழர் கலைக்கோவனும் இணைந்தே 'ந...

சிறுமலை பயணம் - படங்கள்

One more Bottle - சிறுமலை பயணக் குறிப்பு குட்டீஸ்:)   Velvet-fronted Nuthatch கருந்தலைச் சில்லை தெக்கத்தி மலையில் இறுதிக் காட்சியாக துடுப்புவாலன் Choco Boy விழுப்புண் பெற்ற blue tiger Common Blue bottle The transparent one வழுக்குனா விட்ருவனா.. Rock agama, On top of the world The spotter while spotting அழகு ஆண்களின் நடுவே.. மலர்ச் சூரியன் ஆயிரம் ஜன்னல் வீடு துணை Shining Silver வழி வழிகாட்டி கருப்பண்ணசாமி வழித்துணையுடன் வேலி தாண்டிய மலர் படங்கள்: அன்பரசி, வேலு, பாரி. (நிறைவு)