சென்ற வெள்ளி சனி ஆகிய தினங்களில் பறவை பார்த்தலுக்காக பாலக்காட்டைச் சேர்ந்த பறவையியலாளர் கிருஷ்ணமூர்த்தி சாருடன் நெல்லியம்பதி சென்றிருந்தோம்.
பயணத்தின் போது இயல்பாகவே சில்லிக் கொம்பனை குறித்த பேச்சு வந்துகொண்டே இருந்தது. "அவன் ஒரு சாதுப் பிள்ளையாக்கும். ரோட்ல போகும்போது நீங்க தனி ஆளா நடுராத்திரில அவன் எதிர வந்துட்டா கூட விஷமிக்க ஒண்ணுமில்ல கேட்டீங்களா. இதுவர அவன் யாருக்கும் ஒரு தொந்திரவம் செஞ்சதில்ல. இங்க இருக்க எல்லாருக்கும் அவன அடையாளம் தெரியும். இந்த ஊரோட பிள்ளை அவன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி சார்.
அவர் மட்டுமின்றி இந்தப் பயணம் முழுக்க நெல்லியம்பதி ஊர்மக்கள், ஜீப் டிரைவர்கள் என சில்லிக் கொம்பனை குறித்து பேசிய அனைவரும் அவனை ஒருவித ப்ரியத்துடனே குறிப்பிட்டனர். அவன் அருகில்தான் இருக்கிறான், எப்போது வேண்டுமானாலும் அவனைப் பார்க்க வாய்ப்புள்ளது என்ற உணர்வு எங்களுக்கு பயணம் முழுக்க இருந்து கொண்டே இருந்தது. நேரில் பார்க்காவிட்டாலும் அவன் அருகாமையை உணர்ந்தபடி இருந்தோம். அவன் பெயருக்கு காரணமான நீண்ட மெலிந்த தந்தங்கள் எவ்வாறு இருக்கும் என ஒவ்வொருவரும் ஒருவாறு கற்பனை செய்து விவாதித்துக் கொண்டிருந்தோம்.
இன்று காலை கிருஷ்ணமூர்த்தி சார் அவன் பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து இறந்துவிட்ட செய்தியை பகிர்ந்திருந்தார். முதலில் இதுவொரு விபத்து எனத் தோன்றினாலும் அவன் வாழ்வு குறித்து இணையத்தில் கிடைக்கும் செய்திகளை பார்க்கும் போது அப்படியில்லை எனத் தோன்றுகிறது.
சென்ற மூன்று நான்கு வருடங்களாக தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். வார இறுதிகளில் எந்த மலைப்பாதையிலும் பயணிக்க முடியாத அளவுக்குக் கூட்டம் வருகிறது. காப்புக் காடுகளின் அருகேயும் உள்ளேயும் சொகுசு விடுதிகள் நம்ப முடியாத வேகத்தில் பெருகி வருகின்றன. காப்புக் காடுகளின் அருகே சொகுசு விடுதிகளின் எண்ணிக்கை கட்டாயம் கண்காணிக்கப்படவும் குறைக்கப்படவும் வேண்டும். அடிப்படை வசதி கொண்ட விடுதிகளும் அடிப்படையான நுகர்வு பொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
ரிசார்ட்டுகளும் மின்சார வேலிகளும் காடு அழிப்பும் சில்லிக் கொம்பனை வாழ்நாள் முழுக்க துரத்தியிருக்கிறது. இதுகுறித்த உரையாடலின் போது கிருஷ்ணமூர்த்தி சார் இவ்வாறு சொன்னார், "யானை தப்பிப்பதற்கு முயற்சி செய்ய வில்லை. மின் தாக்குதல் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. வயிற்றில் பெரிய காயம் உள்ளது. தற்கொலை என்ற ஐயமும் தோன்றுகிறது."
இதுகுறித்த உறுதியான தகவல்கள் நம்மிடம் இல்லை. தற்கொலையாக இல்லாவிட்டாலும் இது நாம் நிகழ்த்திய கொலை என்றே கொள்ள வேண்டும். தற்கொலை எனில் இது எத்தனை பெரிய துயர்? சொந்த மண்ணில் வாழ வழியில்லாத அரசனின் துயர். இது விபத்து என கடந்து செல்வதை விட ஒரு சமூகமாக நாம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
நம் மேற்கு தொடர்ச்சி மலை உலகின் மிக முக்கிய செல்வம். மண்ணில் எஞ்சியிருக்கும் வெகுசில பல்லுயிர் காடுகளில் ஒன்று. சூழியல் பிரக்ஞ்சையுடன் இம்மாதிரி இடங்களுக்கு செல்வதை உறுதியேற்போம். அதை பிறரிடமும் வலியுறுத்துவோம். ஒட்டுமொத்தமாக காடுகளுக்கு பயணம் செய்வதை குறைத்துக் கொள்வதே கூட நல்லதுதான்.
இதுவரை நானும் உடன் பயணித்த நண்பர்களும் சூழியல் பொறுப்புடன் பயணித்திருப்பதாகவே நம்புகிறேன். எங்கும் ஒருதுளி குப்பையோ வன உயிர்களுக்கு தொந்திரவோ தேவைக்கு அதிகமான நுகர்வோ செய்த்ததில்லை. இருப்பினும் தற்போது குற்றவுணர்வு கொள்கிறேன். பயணம் எந்த விதத்தில் செய்யப்பட்டாலும் அது நிச்சயம் பல்லுயிர் வெளிக்குள் சலனத்தை ஏற்படுத்தும். அந்தத் துலாத் தட்டில் இணையான எடையை வைக்க முடிந்தால் மட்டுமே இனி காடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும்.
இவையெல்லாம் எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் சமாதானம் மட்டுமே என தெளிவாக உணர்கிறேன். யானைகளின் இறப்பு என்பது முற்றிய நோயின் வெளிப்பாடு மட்டுமே. இன்னும் நம் கவனத்துக்கே வராத பல அழிவுகள் நடந்திருக்கும். தமிழகம் மட்டுமின்றி கேரளத்திலும் இந்த அழித்தொழிப்புகள் குறைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஒட்டுமொத்தமாக மானுடம் மீது கசப்பே எஞ்சுகிறது. பைரணின் வரிகளுடன் காறி உமிழவேத் தோன்றுகிறது.
Man, vain insect!

This comment has been removed by the author.
ReplyDeleteநிறைய நண்பர்கள் யானை தற்கொலை செய்து கொள்ளுமா என்ற கேள்வியை தனிச் செய்திகளில் கேட்டிருந்தார்கள். நான் மேற்கோள் காட்டியிருப்பது முப்பது வருடங்களாக அக்காட்டிற்கு தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் ஒரு சூழியலாளரின் வரிகளை. அவரும் அதை ஓர் ஐயமாகவே முன்வைக்கிறார். நானறிந்தவரை அவர் எதையும் மிகையாக சொள்ளக்கூடியவர் அல்ல.
ReplyDeleteவிஷயம் அதுவல்ல, தற்கொலையாக இல்லாவிட்டாலும் ஒரு சமூகமாக நாம் இதில் பொறுப்பேற்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்றே சொல்ல வருகிறேன். மனித மனம் குற்றவுணர்விலிருந்து தப்பிக்க மேற்கொள்ளும் வழிகளை புரிந்து கொள்கிறேன்.
இந்த விஷயத்தில் இனிமேலும் கசப்பை வெளிப்படுத்த விரும்பவில்லை. நேர்மறையாக ஆக வேண்டியதைப் பார்ப்போம்.