Skip to main content

புராதன எறும்பு

ஒரு கவிதை ஓர் எறும்பை என்ன செய்துவிட முடியும்? எறும்பிடம் சென்று உன்னைப் பற்றி இன்றைக்கு ஒரு நல்ல கவிதை வாசித்தேன் என்று சொல்லிப் பார்க்க முடியுமா? 


ஓர் எறும்பிடம் பேசிப் பார்த்தேன், 

“முழு வீட்டையும் எடுத்துக்கொள் உன் இடம்தான் இது, அது புரிகிறது.. ஆனால் இரவு படுக்கையையும் மதிய சாப்பாட்டையும் கடைசி ஜட்டியையும் மட்டுமாவது விட்டுவைக்கலாம் அல்லவா? பார், மனிதர்கள் நாங்கள் உன்னைப் பற்றி கவிதைகள் எழுதுகிறோம். எங்கள் கவியுலகில் நினைவுகள் குறித்த பேச்சு வந்தாலே கவிதைக்குள் நீங்கள் வரிசைக்கட்டி ஊர ஆரம்பித்து விடுவீர்கள். காச்சர் கோச்சர் எனும் நாவலில் மையப் படிமமே நீங்கள் தான். எறும்பு ஊர மனிதர்கள் தேய்வார்கள் அந்நாவலில். அதுபோக சூழியல் ஆர்வலர்கள் முதல் தத்துவவாதிகள் வரை உன்னைப் பேசாத ஆட்களே இல்லை. சமூக வாழ்க்கையா, எறும்பு. எடைத் தூக்குவதா, எறும்பு. கூட்டு உழைப்பா, எறும்பு. பொறியியல் கட்டுமானமா, எறும்பு. தொடர்புறுத்தலா, எறும்பு. அதிகார அமைப்பா, எறும்பு. சேமிப்பின் மகத்துவமா, எறும்பு. ஒத்திசைவா, எறும்பு. வாழ்வின் தத்துவமே எறும்பு.


இதையெல்லாம் எதற்கு உன்னிடம் சொல்கிறேன் என்றால் மனிதர்கள் நாங்கள் உன் மீது நல்ல மதிப்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ளத்தான். மனிதர்கள் என்ன மனிதர்கள், முக்கியமாக நான். இதையெல்லாம் கேட்டுப் படித்து வைத்திருக்கிறேன். இனிமேலாவது என் ஜட்டியை பதம் பார்க்காமல் இருப்பது குறித்து நீங்கள் பரிசீலிக்க வேண்டும். ஆடைக்குள் கடிக்கும் போது உன்னை அந்த இடத்திலேயே நசுக்கித் தள்ளியிருக்கிறேன், அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ள கூடாது. மன்னித்தலின் மேன்மையை எறும்பிடம் கற்க வேண்டும் என்பதை நிச்சயம் மனிதர்கள் எங்காவது சொல்லியிருப்பார்கள். இல்லையென்றால் நான் இப்போது சொல்லி வைக்கிறேன்.



அப்புறம் மதிய சாப்பாடும் இரவு படுக்கையும். அந்தரத்தில் மிதக்கும் பாத்திரங்களும் மெத்தைகளும் அமேசானில் விற்பனைக்கு வரும் வரையிலாவது பொறுத்திருக்கக் கூடாதா? இதோடு இந்தக் கோடையில் மட்டும் நான்கு எறும்பு சாக்பீஸ் காலி. பார் இப்போது கூட எறும்பு பவுடர் போட்டு உன்னைக் கொல்லவில்லை. திசைமாற்றும் கோடுகள் மட்டும் தான். ஆனால் நானோ அழகிய வட்டங்கள் போடக்கூடியவன் அல்ல. கோணல் மாணலாக வருகிறது. வீட்டில் ஓர் ஓவியக்காரியை வைத்துக் கொண்டு எதற்கெல்லாமோ திட்டு வாங்க வேண்டியிருக்கிறது. அப்படியே கவனத்தை குவித்து அழகிய வட்டம் போட்டாலும் அது ஒருவாரத்தில் காலாவதியாகி விடுகிறது. இல்லையெனில் நீங்கள் எண்ணியிரா கோணத்திலிருந்து எண்ணியிரா பாதையை கண்டடைந்து எப்படியோ இலக்கை அடைந்து விடுகிறீர்கள். நேற்று அலமாரியிலிருந்து தொங்கிய நூலின் நுனி லேசாக சுவரில் தொட்டுக் கொண்டிருந்தது. இதையெல்லாம் நான் எப்படி கணிக்க முடியும்? நூலின் வழியாக பாதையமைத்து இருந்த நான்கு முந்திரிகளையும் காலி செய்துவிட்டிருக்கிறீர்கள்.



என் முழுத் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். உங்கள் பாதைகளை கணிப்பது என்னால் ஆகாது. அட்டன்பரோ தாத்தா உங்கள் பெருமைகளை சிலாகித்த போது சந்தேகித்தது தப்பு தான்.


வீட்டுக்குள் நீங்கள் ஊடுருவவில்லை, உங்கள் மகத்தான வலைப்பின்னலுக்கு இடையே தான் இந்த வீடே இருக்கிறது. புராதன எறும்புகளே உங்கள் ஊடுபாதைகளை வணங்குகிறேன். அவை பதிந்திருக்கும் உங்கள் கூட்டு நனவிலியை வணங்குகிறேன். காலங்காலமாய் இங்கு வந்து கொண்டிருக்கும் உங்களை வணங்குகிறேன்.”



எறும்புகள்


கூ ட் ட ங் கூ ட் ட மா ய் கூ ட் ட ங் கூ ட் ட மா ய்

கூ ட் ட ங் கூ ட் ட மா ய் கூ ட் ட ங் கூ ட் ட மா ய்


எங்கிருந்து வருகின்றன

எறும்புகள்


கால ங் கால மாய் கால ங் கால மாய்

கால ங் கால மாய் கால ங் கால மாய்


எறும்புகள் - வி சங்கர்





Comments

  1. Beautifully written. எங்கள் வீடும் புராதனமான இடத்தில் இருக்கிறது என்பதில் பெருமை கொள்கிறேன் 🥰

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வண்ணமின்மையிலிருந்து வண்ணங்களுக்கு

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா கொல்லிமலை இரண்டாம் நாள் பயணத்தில் மதியம் சாப்பிட ஓர் உணவகத்திற்கு சென்றிருந்தோம். கைகழுவும் இடத்திலிருந்து வெளிவருகையில் இம்மலர் என்னை அழைத்தது.

நீலக் குறுநிலவு

"இப்ப ஒரு தவிப்புக் குரல் கேக்குதில்லையா.. இத கவனிச்சு பாருங்க, கொஞ்சம் கொஞ்சமா இந்தக் குரலோட ஸ்ருதி ஏறிட்டே போகும். அதுக்கப்றம் ஒரே சொல், இல்லயில்ல ஒரு இரட்டை சொல் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கும், சிலப்பம் நாள் முழுக்கக் கூட கேக்குறதுண்டு. குறிப்பா இரவு நேரத்துல கேக்க ஆரம்பிச்சா அப்றம் நிக்காது. நேத்து நைட் எங்க கிணத்துக்குடில் பக்கம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. இது இப்டி பித்து பிடிச்ச மாதிரி ராத்திரி முழுக்க கத்திட்டே இருக்குறதால இதுக்கு Brain fever Bird ன்னு பேரு" என்று சுசித்ரா அக்காவிடம் நித்யவனத்தின் லைப்ரரி ஹால் வாசலில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். கோடை காலம் ஆதலால் விடியற்காலையின் எஞ்சியிருந்த குளிரும் விரைவாக அகன்று நன்றாக வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. "ஓ இன்ட்ரெஸ்டிங் நேம்", சுசித்ரா அக்கா சிறிது நேரம் செவிகூர்ந்தார், "ஆமா ரொம்ப தொந்திரவான குரல்தான். மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் ஒரு அழைப்பு அல்லது கட்டளையிடப்படும் ஒரு ஆணை மாதிரி கேக்குதில்லையா" "ஆமாக்கா. சரியா சொன்னீங்க. இந்தக் குரல்ல இருக்குறது அழைப்புக்கான தவிப்பா இல்ல...

சில்லிக் கொம்பன் - அஞ்சலி

சென்ற வெள்ளி சனி ஆகிய தினங்களில் பறவை பார்த்தலுக்காக பாலக்காட்டைச் சேர்ந்த பறவையியலாளர் கிருஷ்ணமூர்த்தி சாருடன் நெல்லியம்பதி சென்றிருந்தோம். பயணத்தின் போது இயல்பாகவே சில்லிக் கொம்பனை குறித்த பேச்சு வந்துகொண்டே இருந்தது. "அவன் ஒரு சாதுப் பிள்ளையாக்கும். ரோட்ல போகும்போது நீங்க தனி ஆளா நடுராத்திரில அவன் எதிர வந்துட்டா கூட விஷமிக்க ஒண்ணுமில்ல கேட்டீங்களா. இதுவர அவன் யாருக்கும் ஒரு தொந்திரவம் செஞ்சதில்ல. இங்க இருக்க எல்லாருக்கும் அவன அடையாளம் தெரியும். இந்த ஊரோட பிள்ளை அவன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி சார்.  அவர் மட்டுமின்றி இந்தப் பயணம் முழுக்க நெல்லியம்பதி ஊர்மக்கள், ஜீப் டிரைவர்கள் என சில்லிக் கொம்பனை குறித்து பேசிய அனைவரும் அவனை ஒருவித ப்ரியத்துடனே குறிப்பிட்டனர். அவன் அருகில்தான் இருக்கிறான், எப்போது வேண்டுமானாலும் அவனைப் பார்க்க வாய்ப்புள்ளது என்ற உணர்வு எங்களுக்கு பயணம் முழுக்க இருந்து கொண்டே இருந்தது. நேரில் பார்க்காவிட்டாலும் அவன் அருகாமையை உணர்ந்தபடி இருந்தோம். அவன் பெயருக்கு காரணமான நீண்ட மெலிந்த தந்தங்கள் எவ்வாறு இருக்கும் என ஒவ்வொருவரும் ஒருவாறு கற்பனை செய்து விவாதித்துக...

கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா அந்த இடம் மட்டும் மரங்கள் அதிகமின்றி வானைநோக்கி வெட்டவெளியாக இருந்தது. வான்வெளி பூங்காவின் மைய வளாகம் ஒரு சிறிய கட்டிடம்.