Skip to main content

சென்னை பயணம் - மானசா பதிப்பக விழா

 மானசா பதிப்பகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பெண் எழுத்து சார்ந்த அரங்கம் மற்றும் பதிப்பகத்தின் முதல் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள ரஞ்சனியும் நானும் சென்னை சென்றிருந்தோம். அதிகாலை ஏற்காடு வண்டியில் சென்றிரங்கியவுடன் நண்பர் நவீன் வீட்டில் தஞ்சம். அவர் வீட்டின் உறுப்பினரான சிம்பா எங்களை வரவேற்றான். சிம்பா பீகல் இனத்தவன். இரண்டு வருடம் முன்பு கோவையில் அவனை சந்தித்ததை நினைவில் வைத்திருந்தான். நாங்கள் சென்றதும் ஒரு துணிப்பொம்மையை எடுத்து காலடியில் வைத்துக் கொண்டு யாருக்கும் தரமாட்டேன் என்றான். அதை எடுக்க முயன்று தோற்பதுபோல் நாம் விளையாட வேண்டுமாம்.

கிளம்பி விழா நடைபெறும் கவிக்கோ மன்றம் சென்றோம். பேனர் அமைக்கும் வேலை, சிற்றுண்டி ஏற்பாடு, விருந்தினர்களை அழைத்து வருவது போன்ற வேலைகளை பயணத்தின் போதே நவீன் போனில் ஒருங்கிணைத்துக் கொண்டே இருந்தார். டாக்டர் ஜெகன், விஜயபாரதி,சபரிஷ், சூரஜ் போன்ற நண்பர்கள் அவரவர் வேலைகளை எடுத்துக் கொண்டனர்.

விருந்தினர் பத்மா விஸ்வநாதனை அழைத்துவரச் சென்ற நவீனுடன் நானும் இணைந்து கொண்டேன். அந்த வகையில் அவருடன் கொஞ்சம் உரையாட முடிந்தது. அவர் பிரேசில் நாட்டு எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு ஒன்றை மொழியாக்கம் செய்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவரது அழகியல் பார்வை நிறுவப்பட்ட சில செவ்வியல் எழுத்தாளர்களை விடுத்து புதிதாக வேறு சிலரை கண்டடைவதாக இருந்துள்ளது. அதுவரை பிரேசில் இலக்கிய வரலாற்றில் அதிகம் பேசப்படாத சில எழுத்தாளர்களை அத்தொகுப்பின மூலம் மீண்டும் கவனத்துக்கு கொண்டு வர முடிந்ததைச் சொன்னார்.

விழா அரங்கிலும் அவரது உரையே எனக்கு நெருக்கமாக இருந்தது. பத்மா அவர்கள் கனடா நாட்டவராக இருந்தாலும் அவரின் பூர்வீகம் இந்தியாவில் அதுவும் சென்னையை சுற்றி இருந்துள்ளது. வழக்கமாக அவரது பாட்டி இந்தியாவில் உள்ள சமகால உறவினர்களைப் பற்றி சொல்லும் போது பத்மாவிற்கு எந்த ஆர்வமும் எழவில்லை. ஒருமுறை இரண்டு தலைமுறைக்கு முந்தைய பூர்வீக வரலாற்றிலிருந்து பாட்டி கதை சொல்லியிருக்கிறார். அந்த சமூக சூழல் மாந்தர்கள் எல்லாம் இவருக்கு ஆர்வத்தை உண்டாக்கவே அங்கிருந்து தொடங்கியது தான் அவரது முதல் நாவலுக்கான (‘The toss of a Lemon’) பயணம். இந்த நாவலுக்காகவும் சென்ற தலைமுறை உறவினர்களை சந்திக்கவும் இந்தியாவுக்கு பலமுறை பயணம் செய்திருக்கிறார். தற்போதைய பயணத்தில் கூட தமிழ் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே பிரதான நோக்கமாக வைத்திருக்கிறார்.

விழா முடிந்து திரும்பும் பயணத்தில் தமிழ் கற்று வரும் அனுபவத்தை சுசித்ராவிடம் சொல்லிக் கொண்டு வந்தார். குறிப்பாக A place of her own தொகுப்பில் இடம்பெற்ற ரம்யாவின் The Dust (தூசு) சிறுகதையை மூலத்திலேயே வாசித்து அதை ஆங்கிலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் அளவுக்கு பயிற்சியடைய வேண்டும் என்றார். அதன் மூலம் மொழியைக் கற்பதுடன் தமிழ் சிறுகதை ஆங்கிலத்தில் எவ்வாறு பரிணாமம் கொள்கிறது என்ற சித்திரத்தையும் அவர் அடைய விரும்புவதாகச் சொன்னார். தூசு சிறுகதையுடன் பொதுவாகவே இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளிலும் ஒரு லட்சியத்தை / தேடலை நோக்கி மனிதர்கள் தொடர்ந்து உந்தப்பட்டு செயலாற்றுவது தன்னைக் கவரும் அம்சமாகக் குறிப்பிட்டார்.

விழா விருந்தினர்கள் பத்மா, கீதா, வைஷ்ணவ் ராய் மூவருமே இந்த லட்சியத்தை நோக்கிய செயால்லுற்றும் தன்மையே தங்களை இந்த விழா நோக்கி ஈர்த்ததாக வெவ்வேறு வகையில் குறிப்பிட்டனர் என நினைக்கிறேன். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தங்கள் துறைகளில் தொடர் செயல்பாட்டில் இருக்கும் முன்னோடி ஆளுமைகள் இளம் பெண்கள் துவங்கிய பதிப்பகத்தின் முதல் விழாவிற்கு வருகைதர வேறு எந்த காரணங்களும் இருக்க முடியாது. அதன் சாட்சியாக மானசா பதிப்பகத்தின் முதலிரு நூல்களின் வெளியீடும் அமைந்திருந்தன.

விழா முடித்து மதியத்திற்கு மேல் அடையாரில் இருந்த மானஸா பதிப்பகத்தின் அலுவலகத்திற்கு அருண்மொழி அம்மாவை பார்க்கச் சென்றோம். அம்மாவிற்கு சென்ற மாதம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்திருந்தது. நாங்கள் சென்ற போது தன்னால் அடுத்த வீதிவரை நடை செல்ல முடிந்ததை அஜியிடம் உற்சாகமாக சொல்லிக்கொண்டிருந்தார். நண்பர்களுடன் அவரை சந்தித்தது நிறைவான அனுபவமாக இருந்தது. 

மாலை பவித்ரா அவர்கள் மயிலாப்பூரில் ஒரு கர்நாடக இசைக் கச்சேரிக்கு அழைத்துச் சென்றார். ‘மதுரத்வனி’ என்ற அமைப்பின் சார்பில் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக சென்னையில் நடைபெற்று வரும் தியாகராஜ கீர்த்தனைகளின் நிகழ்ச்சி அது. எல்லாரும் தவறவே விடக்கூடாத முக்கியமான கலைஞர்கள் என்றார் பவித்ரா. எனக்கு ராகம் தாளம் எதுவும் புரியாவிட்டாலும் சென்னையின் நெரிசல், புழுதிக்கு இடையே தப்பித்து அவ்வாறு இசையின் முன் அமர்ந்திருப்பதே நல்ல அனுபவமாக இருந்தது.


(தொடரும்)

Comments

Popular posts from this blog

நீலக்குறுநிலவு

"இப்ப ஒரு தவிப்புக் குரல் கேக்குதில்லையா.. இத கவனிச்சு பாருங்க, கொஞ்சம் கொஞ்சமா இந்தக் குரலோட ஸ்ருதி ஏறிட்டே போகும். அதுக்கப்றம் ஒரே சொல், இல்லயில்ல ஒரு இரட்டை சொல் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கும், சிலப்பம் நாள் முழுக்கக் கூட கேக்குறதுண்டு. குறிப்பா இரவு நேரத்துல கேக்க ஆரம்பிச்சா அப்றம் நிக்காது. நேத்து நைட் எங்க கிணத்துக்குடில் பக்கம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. இது இப்டி பித்து பிடிச்ச மாதிரி ராத்திரி முழுக்க கத்திட்டே இருக்குறதால இதுக்கு Brain fever Bird ன்னு பேரு" என்று சுசித்ரா அக்காவிடம் நித்யவனத்தின் லைப்ரரி ஹால் வாசலில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். கோடை காலம் ஆதலால் விடியற்காலையின் எஞ்சியிருந்த குளிரும் விரைவாக அகன்று நன்றாக வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. "ஓ இன்ட்ரெஸ்டிங் நேம்", சுசித்ரா அக்கா சிறிது நேரம் செவிகூர்ந்தார், "ஆமா ரொம்ப தொந்திரவான குரல்தான். மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் ஒரு அழைப்பு அல்லது கட்டளையிடப்படும் ஒரு ஆணை மாதிரி கேக்குதில்லையா" "ஆமாக்கா. சரியா சொன்னீங்க. இந்தக் குரல்ல இருக்குறது அழைப்புக்கான தவிப்பா இல்ல...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

மாருத லீலை

ஆடிக் காற்று வாங்க ஆடிவரை காத்திருக்க வேண்டுமென்பதில்லை. ஆணி பதினைந்து வாக்கிலேயே நல்ல காற்று வீசுவதாகத் தெரிந்தால் நீங்கள் மொட்டைமாடிக்குப் போகலாம், அதற்கு நகராட்சி சார்பில் அபராதம் எதுவும் கிடையாது. எப்போது நீங்கள் இரண்டு நாட்களாக தேடி சலித்த உள்ளாடையை பக்கத்து வீட்டுக்காரர் தங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் ஒரு கரித்துணி விழுந்து கிடந்ததாகச் சொல்லி மீட்டுத் தருகிறாரோ அப்போதே நீங்கள் உஷாராகிவிட வேண்டும். அப்போதும் நீங்கள் அசமந்தமாக இருந்தால் அடுத்தக்கட்ட எச்சரிக்கை உங்கள் மனைவியிடமிருந்து வரும், “எத்தன வாட்டி சொல்றது, பொடவைக்கும் கிளிப்பு போடுன்னு.. எப்பதான் உனக்கு அறிவு வருமோ?” நமக்கு எப்போது அறிவு வரும் என்று யோசிப்பது நல்ல தத்துவார்த்த கேள்வியாகப் பட்டது. ஆனால் தத்துவக் கேள்விகளை விசாரிக்க வீட்டு சோபா உகந்த இடமல்ல. இதை ஏன் நாம் ஒரு மாலை நடை சென்றபடியே சிந்திக்கலாகாது? “அறிவியாலாளர்கள் முதல் தத்துவஞானிகள் வரை தங்களுக்கான விடையை இயற்கையின் மகத்தான தற்செயலிலிருந்தே பெற்றிருக்கிறார்கள். உங்கள் உள்ளார்ந்த கேள்வியுடன் பிரபஞ்சத்தை செவிகூருங்கள், அது உங்களுக்கு விடையளிக்கும்.” என்ற மேற்கோளை...

வண்ணமின்மையிலிருந்து வண்ணங்களுக்கு

கொல்லிமலை பயணம் (1) - அருகிருக்கும் ஷம்பாலா கொல்லிமலை பயணம் (2) - வான்வெளி பூங்கா கொல்லிமலை இரண்டாம் நாள் பயணத்தில் மதியம் சாப்பிட ஓர் உணவகத்திற்கு சென்றிருந்தோம். கைகழுவும் இடத்திலிருந்து வெளிவருகையில் இம்மலர் என்னை அழைத்தது.

சென்னை பயணம் (2) - எய்டன் சென்ற பாதையில்

சென்னை பயணம் - மானசா பதிப்பக விழா இரண்டாம் நாள் காலை விஜய்(பாரதி) அண்ணா தலைமையில் பறவை பார்த்தல். நாங்கள் ஈரோடு கோஷ்டி பூநாரைகள் பார்க்க வேண்டும் என்றதும் அதற்கேற்ப கேளம்பாக்கம் அருகே ஒரு இடத்தை முடிவு செய்திருந்தார். அவரின் கணிப்புத் தவறவில்லை. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பூநாரைகளைக் கண்டு களிப்புற்றோம். அவை வெயிலில் நிற்பது, ஒற்றைக்கால் தவம் செய்வது, நின்ற வாக்கிலேயே தூங்குவது என நீண்டநேரம் அவற்றுடன் இருந்தோம். கூடவே வலசை பருவத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் Curlew, Whimbrel, Redshank, Greenshank போன்ற பறவைகளையும் நெடுங்கால் உள்ளான் குஞ்சுகளையும் காண முடிந்தது. வலசை பருவம் முடிந்த பின்பும் ஜூலை மத்தியில் இவற்றையெல்லாம் காண முடிவது அரிது தான் என்றார் விஜயபாரதி. சில பறவைகள் long wintering என்ற பெயரில் இவ்வாறு தங்கிவிடுவது உண்டாம். பறவை பார்த்தல் முடித்து நவீன் வீட்டுக்குத் திரும்பவே மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. சென்னை நகருக்குள் பயணமே பெரும் நேரத்தை எடுத்துக் கொள்கிறது. எங்களுக்கு மிச்சம் இருந்தது ஒரேயொரு ஞாயிறு மாலை. தரமணி இரயில் நிலையத்தில் Fort station என்ற வாசகம் கண்ணில் பட வெள்ளை...

ஈரோடு நாடகக் கொட்டாய் - நீர்வழிப்படூஉம்

 மகரந்தம் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோடு நாடக கொட்டாயில் நடைபெற்ற 'நீர்வழிப்படூஉம்' நாவலின் நாடக வடிவைக் காண நேற்று மாலை நண்பர்கள் ரஞ்சனி, விக்ரம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சென்றிருந்தேன். ஈரோடு நாடக கொட்டகை கட்டிடம் கூத்துப்பட்டறையின் நிறுவனர் மறைந்த ந. முத்துசாமியின் நினைவகமும் கூட. மறைந்த ஆசிரியரின் வழியில் தொடர்ந்து செயலை முன்னெடுப்பதே வாழும் நினைவகமாக இருக்க முடியும். அவ்வகையில் வெவ்வேறு நவீன நாடக முயற்சிகள் தொடர்ந்து இக்கொட்டகையில் அரங்கேறுவதாய் அறிகிறேன். கொட்டகை அமைந்துள்ள கட்டிடம் முன்னர் ஒரு தேவாலாயமாக இருந்த இடம். உயர்ந்த நீண்ட ஓட்டுக்கூரை வடிவத்தை இப்போதும் நாம் பார்க்கலாம். மனித நாடகங்களை அரங்கேற்ற தேவனின் ஆலயம் ஏற்ற இடம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்திருந்ததை விடவும் தற்போது அரங்கம் புதுப்பொலிவுடன் இருந்தது. பார்வையாளர்களுக்கான கேலரி புதிதாக அமைத்திருந்தார்கள். சுமார் அறுபது பேர் வரை வசதியாக அமர்ந்து நாடகம் பார்க்கலாம். தற்போது கொட்டகையை நிர்வகிப்பவர் முத்துசாமியின் மாணவர் சதீஷ் குமார். அவரும் தோழர் கலைக்கோவனும் இணைந்தே 'ந...