சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார்.
எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது.
இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியராக கருதப்படும் ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத்திரம். ஆனால் சௌந்தர்ய லஹரி மட்டுமின்றி அவர் இயற்றியதாக கருதப்படும் ஸ்தோத்திரப் பாடல்களின் எண்ணிக்கை அதிகம். (பார்க்க: உசாத்துணை)
பாஷ்யங்கள் (உரை நூல்கள்), தத்துவ விளக்க நூல்கள் அளவுக்கே ஆதிசங்கரர் ஸ்தோத்திரங்களையும் (துதிப் பாடல்கள்) இயற்றியுள்ளார்.
'பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே பிரம்மம். அனைத்து இறைகளும் பிரம்ம ரூபங்களே, அவை அனைத்துமே ஒன்று' என்ற கருத்தின் மூலம் அறுவகை சமயங்களையும் (ஷண்மதங்கள்) ஒன்றாக்கியவர் ஆதிசங்கரர். ஆச்சரியமாக அவர் இயற்றிய பாடல்களே இன்றுவரை அதன் ஒவ்வொரு பிரிவிலும் புகழ்மிக்க பாடல்களாக நீடிக்கின்றன.
தேவியைக் (சாக்தம்) குறித்து அவர் இயற்றியுள்ள பாடல்கள்: சௌந்தர்ய லஹரி, ஆனந்த லஹரி - இது சௌந்தர்ய லஹரியின் பகுதியாக அமைந்தது, அன்னையின் ஆனந்த நிலையை மட்டுமே விவரிக்கும் பாடல்கள். இதுபோக கனகதாரா ஸ்தோத்திரம், அன்னபூர்ணா ஸ்தோத்திரம், பவானி அஷ்டகம், தேவி புஜங்கம், மீனாட்சி ஸ்தோத்திரம் போன்றவையும் அவர் இயற்றியதாகக் கருதப்படுகிறது.
சைவத்தை எடுத்துக் கொண்டால் சிவானந்த லஹரி, தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம், சிவ புஜங்கம், லிங்காஷ்டகம், காலபைரவஷ்டகம், சிவ பஞ்சட்சர ஸ்தோத்திரம் ஆகிய பாடல்கள். வைணவ பிரிவில் பஜ கோவிந்தம், விஷ்ணு புஜங்கம், கிருஷ்ண அஷ்டகம். மேலும் கணேச பஞ்சரத்ணம் (காணாபத்தியம்), சுப்ரமண்ய புஜங்கம் (கௌமாரம்) ஆகிய துதிப்பாடல்களும் சங்கரரின் நூல் பட்டியலில் உள்ளன.
தற்போது பத்மநாபன் சார் பகிர்ந்திருந்த ஐகிரி நந்தினி பாடலுக்கு வருகிறேன். மகிஷாசுரமர்தினி ஸ்தோத்திரம் என்றழைக்கப்படும் இப்பாடல் மார்க்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியாக இடம்பெறும் “தேவி மகாத்மியத்தை” அடிப்படையாகக் கொண்டு ஆதிசங்கரர் இயற்றியது.
சமஸ்கிருதத்தில் அமைந்த இப்பாடலை தற்போது எழுத்தாளரும் திரைப்படப் பாடலாசிரியருமான நிரஞ்சன் பாரதி அவர்கள் தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார். சுப்பிரமணிய பாரதியாரின் எள்ளுப் பேரனான நிரஞ்சன் பாரதி, கர்நாடக இசைக்கலைஞர் ராஜ்குமார் பாரதியின் மகனும் ஆவார்.
நான் கேட்டவரை ஐகிரி நந்தினி பாடல் இத்தனை நாளும் நாம் கேட்டு வளர்ந்த சமஸ்கிருத பாடலின் இசைத்தன்மை குலையாமல் தமிழுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. வழக்கமாக தாளத்துக்காக எழுதப்படும் போது உருவாகும் செயற்கைத்தனம் எதுவும் தமிழ் வடிவத்தில் உருவாகவில்லை. மற்றபடி இசையும் சமஸ்கிருதமும் அறிந்தவற்களே இதுகுறித்து விரிவாக சொல்ல முடியும் என நினைக்கிறேன்.
முதலிரு பத்திகளை மட்டும் சமஸ்கிருத மூலத்தையும் அதற்கினையான தமிழ் வடிவத்தையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தேன்:
சமஸ்கிருத மூலம்
அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தனுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே |
பகவதி ஹே ஸிதி கண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஸைலஸுதே || 1 ||
ஸுரவர வர்ஷிணி துர்பர தர்ஷிணி துர்முக தர்ஷிணி துர்மதே
த்ரிபுர ஸரிணி ஸுரதில ரிணி ஸுரதில ரிணி ஸுரதிலதே |
அவநி ஸுதாவதி ஸாவதி ஸாவதி கல்பலதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி ஸைலஸுதே || 2 ||
நிரஞ்சன் பாரதி அவர்களின் தமிழ் வடிவம்:
ஐகிரி நந்தினி வைய மகிழ்வினி ஆடிடும் சேயினி நந்தி புகழ்
விந்திய மாமலை மேவிடும் மாதினி திருமிகுமாலினி அமரன் புகழ்
இறைவினி நீல மிடற்றன் குடும்பினி தரணி குடும்பினி நிறைமகளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாகளே
வரமழை முகிலினி துருதர முடிவினி துர்முக முற்றினி மகிழினியே
மூவுலகாளினி சங்கரன் பாங்கினி தீவினை நாசினி கோஷினியே
தானவர் சீறினி திதிசுத தீயினி துர்மத காயினி ஆழினியே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாகளே
நான் ஒப்பிட்டு நோக்கியவரை அர்த்த மாறுபாடுகள் அதிகம் இல்லை, மூலத்தை ஒட்டியே செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் சமஸ்கிருத வேர் கொண்ட பல சொற்கள் தமிழ் வடிவிலும் இடம்பெற்றுள்ளன. இதை தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன். வைய மகிழ்வினி, நீல மிடற்றன், ஆழினி போன்ற பல பிரயோகங்கள் எனக்குப் பிடித்திருந்தன. எதற்காக இல்லாவிட்டாலும் சரணத்தின் இறுதியில் வரும் “பூங்குழலி மலைமாகளே” என்ற விளிக்காகவே இப்புதிய தமிழ் வடிவத்தைக் கேட்கலாம்.
உசாத்துணை:
https://www.advaita-vedanta.org/texts/Complete_Works_of_Adishankara.html
https://tamil.wiki/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D
Comments
Post a Comment