(கதகளி விழா அமைப்பாளர்களுள் ஒருவரும் பவித்ராவின் தோழியுமான ஜெயஶ்ரீ அவர்கள் சொன்னபடியே எங்கள் கதகளி அனுபவம் பற்றிய செய்திக்கட்டுரை நேற்றைய (07.08.2026) மலையாள மனோரமாவில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம்: அழகிய மணவாளன்)
மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்
மலப்புரம் மாவட்டம் வண்டூரில், மறைந்த கதகளி கலைஞர் நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரியின் நினைவேந்தல் விழா ஆகஸ்ட் 3 அன்று நிகழ்ந்தது. கதகளியை அறிவதற்கும், மொழி எல்லைக்கு அப்பால் கதகளியை தங்கள் மாநிலத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேர் அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.
ஈரோட்டில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பவித்ரா, அவரது கணவரும் தொழிலதிபருமான சௌந்தர்ராஜன், ஆசிரியை ஜி.ரஞ்சினியரசி, பி.விக்ரம், மணவாளன், டி.ஏ.பாரி ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பே வண்டூர் வந்துவிட்டனர். கதகளி ஒப்பனையிலிருந்து தொடங்கி முக அபிநயம், கைமுத்திரை என கதகளியின் எல்லா அம்சங்களையும் கற்றுக்கொண்டனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான எளங்கூர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியையான என்.டி.ஜெயஸ்ரீயுடனான டாக்டர் பவித்ராவின் கதகளி நட்புதான் அந்த தமிழ்நாட்டு நண்பர்களை இந்த நினைவேந்தல் நிகழ்விற்கு வரவைத்தது.
மலையாளம் மற்றும் தமிழ் இலக்கியங்களுக்கு இடையே ஒருவகையான பாலம் போல செயல்படும் பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் கதகளி அனுபவக்கட்டுரையை படித்த பிறகே கதகளியுடன் தனக்கு நெருக்கம் ஏற்பட்டதாக டாக்டர் பவித்ரா சொல்கிறார். இலக்கியம்தான் அந்த 6 பேருக்கும் பொதுவானது. அனைவரும் ஜெயமோகனின் வாசகர்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவரம்பை சேர்ந்த ஜெயமோகன் எம்.கோவிந்தன் முதல் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு வரையிலான கவிஞர்களின் கவிதைகளை 'தற்கால மலையாளக் கவிதைகள்' எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். மலையாளத்தின் 5 இளம் கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்து 'இன்றைய மலையாளக் கவிதைகள்' எனும் தலைப்பில் தமிழில் வெளியிட்டிருக்கிறார். தமிழில் கதகளி உட்பட கேரள கலை வடிவங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். ஜெயமோகனின் புனைவுலகத்திலிருந்துதான் கதகளியின் அழகியலையும் வரலாற்றையும் தமிழ் நண்பர்கள் முதன்முதலில் அறிந்து கொள்கிறார்கள். நேரடியாக கதகளி நிகழ்வுகளை பார்த்தபோது கதகளியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் விழைவால் கதகளி ஆட்டங்களின் பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களைத் தொடர்ந்து பார்த்து, அடிப்படை முத்திரைகளை புரிந்துகொண்டனர். Kathakali plays in english (vol1,2,3,4) by agatha jane pillaar என்ற நூலில் ஒவ்வொரு கதகளி ஆட்டக்கதைக்குமான ஆங்கில வடிவம் உள்ளது. அதை வாசித்து மொழி சார்ந்த தடையை கடந்தனர். ஆங்கிலத்தில் மேலும் கதகளி சார்ந்து நூல்களின் தேவை இருக்கிறது என்றும், அதற்கான முயற்சிகள் தேவை என்றும் அந்த நட்புக்குழுவில் ஒருவர் சொன்னார்.
அந்த நட்புக்குழுவில் உள்ள மணவாளன் 7 வருடங்களாக கதகளி பார்ப்பவர், மலையாளமும் தெரியும். கதகளியின் அழகியல் அம்சங்களை மலையாளத்தில் உள்ள நூல்கள், கதகளியின் கலைஞர்களின் தன்வரலாறுகள், நேர்காணல்கள் வழியாக வாசித்தவர். நிகழ்வின்போது கதகளியின் ஆட்டக்கதையில் உள்ளவற்றையும் அதன் பின்னணியில் உள்ள புராணக்கதை, உபகதைகள், கைமுத்திரைகள், சங்கீதம், நிருத்த அம்சம்கொண்ட ஆட்டங்கள், முகஃபாவங்கள் போன்ற அம்சங்களை பிற நண்பர்களுக்கு விளக்குகிறார். மேலும் அந்த நண்பர்கள் google translate, chatgpt வழியாக கதகளி பதங்களை(கதகளி பாடல்வரிகளை) மொழிபெயர்த்தும் புரிந்துகொள்கிறார்கள். மலையாளத்திற்கும் தமிழிற்கும் இடையே நிறைய பொதுசொற்கள் இருப்பதால், கதகளி பதங்களில் அந்த சொற்கள் நிறையவே இருப்பதாலும் கதகளி பதங்களை புரிந்துகொள்வது அவ்வளவு கடினமாக இல்லை என்று அந்த நட்புக்குழுவில் ஒருவர் சொன்னார். ஆறுபேரும் கதகளி தொடர்ச்சியாக பார்க்கிறார்கள். கதகளியை மேலும் அணுக தொடர்ந்து பயணம் செய்கிறார்கள்.
வாழேங்கடா என்ற ஊரில் உள்ள ”குஞ்சுநாயர் டிரஸ்ட்” என்ற கதகளி டிரஸ்டில் நிகழ்ந்த ‘கீசகவதம்’ கதகளி பார்க்கும்போதுதான் அந்த தமிழ் நண்பர்களில் ஒருவரனான Dr.பவித்ராவிற்கு கதகளி ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ அறிமுகமாகிறார். அறிமுகம் என்பதற்கப்பால் அது கதகளி சார்ந்த உரையாடலாகவும் வளர்கிறது. கேரளத்தில் எங்கு முக்கியமான கதகளி நிகழ்ந்தாலும், ஜெயஸ்ரீ இந்த நண்பர்களுக்கு தெரியப்படுத்துகிறார். அவற்றில் தங்களுக்கு வசதிப்பட்ட கதகளி நிகழ்வுகளை இந்த நண்பர்கள் பார்க்க செல்வார்கள்.
இந்த நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரி நினைவேந்தல் விழாவில் விருதுவிழா,கதகளி நிகழ்வுடன், நளசரிதம் கதகளியின் அழகியல் பற்றி கதகளி கலைஞர் பீஷப்பிள்ளி ராஜீவனின் lec-demமும் இருந்தது. இந்த நண்பர்களுக்கு அந்த lec-dem மிகவும் பிடித்திருந்தது. தமிழ்நாட்டில் பீஷப்பிள்ளி ராஜீவனை அழைத்து அதேபோல lec-dem நடத்துவது தொடர்பாக அந்த நண்பர்கள் ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நினைவேந்தல் நிகழ்வில் கல்யாணசௌகந்திகம் கதகளி நடந்தது. அதைமுழுமையாக பார்த்துவிட்டே நண்பர்கள் கிளம்பினர். கேரளத்தின் பலபகுதிகளிலிருந்து கதகளி ரசிகர்களும், கதகளி கலைஞர்களும் அந்த நிகழ்விற்கு வந்திருந்தனர். தமிழ் நண்பர்கள் அவர்களிடம் அறிமுகப்படுத்துக்கொண்டனர். நெல்லியோடு நம்பூதிரியின் நினைவேந்தல் வருடாவருடம் நிகழும். அடுத்த வருடமும் தாங்கள் கண்டிப்பாக கலந்துகொள்வதாக உறுதியளித்துவிட்டுதான் அந்த நண்பர்கள் விடைபெற்றனர்.

Comments
Post a Comment