Skip to main content

பலூன் கவிதைகள் - சந்தோஷத்தின் வால்


பலூன் கவிதைகள் - ஒரு குறிப்பு


சாதாரணமாக ஒரு குழந்தையின் மனதில் பலூனின் ஆயுட்காலம் என்பது எவ்வளவாக இருக்கும்? என் குழந்தைப் பருவத்தில் நான் முடிவிலி வரை என்றே நினைத்திருந்தேன்.


அப்போதெல்லாம் வருடாவருடம் நடைபெறும் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஒன்றே அந்த வருடத்திற்கான விளையாட்டுத் தளவாடங்களை வாங்கிக் கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. எனக்கும் அண்ணனுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய் ஒதுக்கப்படும். அதில் விரும்பியனவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அம்மாவுக்கு மட்டும் இருபது. வளையல் வாங்க வேண்டுமாம், வளையல் அம்மாவின் தனிக்கணக்கில் வராதாம். எனக்கு அந்தக் கணக்குகள் புரிந்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். சரியான நேரம் பார்த்து காண்போர் மனம் உருக கண்கலங்கி அடம்பிடித்தால் அம்மாவின் கணக்கிலிருந்து ஐந்து ரூபாயை நம் பக்கம் இழுத்துவிடலாம். எப்படி திட்டம்போட்டு வாங்கினாலும் நான் கடைசியாக வாங்க நினைத்த ‘ரேடியம்’ பந்திற்கு இரண்டு ரூபாய் இடிக்கும். கடைசியில் அப்பாதான் வந்து பஞ்சாயத்தை முடித்து வைப்பார். ‘இத்துணூண்டு பந்து எப்டியும் ரெண்டு நாள்ல தொலச்சிருவ.. புதுசா பலூன் வந்துருக்கு பாரு.. பெரிய பலூனே மூன்ருவா தான்’ என்று அவராகவே முடிவெடுத்து வாங்கி என்னிடம் கையளித்துவிடுவார்.  


குறைந்தபட்சம் அடுத்தத் திருவிழா வரையாவது இந்த பலூனை வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற சூளுரையுடன் வீட்டுக்குக் கொண்டு வருவேன். பலூனை தட்டித் தட்டி தரைக்கு வந்துவிடாமல் அதை காற்றில் நிறுத்துவதே எனக்கு பிடித்தமான பலூன் விளையாட்டு. கவிஞர் ஆனந்த குமாரின் பலூன் கவிதையை சமீபத்தில் வாசித்த போது எனக்குத் தோன்றிய எண்ணமும் அதுதான். ஒரு பலூன் கவிதை அளித்த உணர்விலிருந்து கீழிறங்கி விடாமல் வாசிப்புணர்வை தக்க வைக்கும் வகையில் அடுத்த பலூன் கவிதைக்கு தாவிவிட வேண்டும் என ஏங்கினேன். அவ்வாறு நவீன தமிழ் கவிதை பரப்பில் எனக்கு கிடைத்த பலூன்கள் சில:


1


“எனக்கு அந்த பறக்குற பலூன்தான் வேணும்” என்று அடம்பிடித்தேன். பறக்காத பலூன் என்று ஒன்று உண்டா என்ற கேள்வியுடன், நான் எந்த பலூனை சொல்கிறேன் என்பது புரியாமல் அம்மா என் முகத்தைப் பார்த்தாள். “தம்பி கேஸ் பலூன சொல்லுதுங்க.. ஹீலியம் பலூன்,” என்றார் பலூன் வியாபாரி. மீண்டும் அவராகவே “நல்லாருக்குமுங்க, ஆனா நூல கெட்டியமா புடிச்சுக்கனும். உட்டுட்டா உசுரு வந்து நேரா ஆகாசத்துக்கு போயிருமுங்க..” என்றார். சட்டென என் உலகில் பிற பலூன்கள் அனைத்தும் இறந்துவிட இந்த உயிருள்ள கேஸ் பலூன்கள் மட்டும் வானை நோக்கிப் பாய்வதற்கான துடிப்புடன் திமிறிக்கொண்டிருந்தன. சிறுவன் அதிலும் ஒல்லியன் என்பதால் ஒரு பலூனை வாங்கி கெட்டியமாக பிடித்துக் கொண்டாலே என்னையும் சேர்த்து ஆகாசத்துக்கு கொண்டு சென்றுவிடும் என்று நினைத்தேன். ம்ஹும் நடக்கவில்லை. அடுத்த திருவிழாவில் இன்னொரு பலூனை வாங்கி சேர்த்துப் பிடித்துக் கொண்டால் நிச்சயம் பறந்து விடலாம், அதுவரை உடலின் எடைமட்டும் கூடிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


கேஸ் பலூனை வாங்கி வந்த எனக்கு பிற பலூன்களைப் போல அதனுடன் விளையாட முடியவில்லை. முக்கியமாக அதை வைத்துக் கொண்டு திறந்தவெளியில் விளையாட முடியாது. வீட்டுக்குள் விளையாடும் போதும் எந்நேரமும் நூலைப் பிடித்தபடி இருக்க வேண்டும். விண்ணேகும் விழைவுடன் இருப்பவரை எத்தனை நேரம்தான் ஒரு சிறுவன் இழுத்துப் பிடிக்க முடியும்? எனக்கு இந்த விளையாட்டு சரிவரவில்லை. விட்டேன். நேராக கூடத்தின் மின்விசிறி இறக்கைகளின் இடைபுகுந்து உத்தரத்தில் ஒட்டி நிலைகொண்டது. அப்பா வந்து மின்விசிறியைப் போட்டால் என் ஆகாசக் கனவுகள் அவ்வளவுதான். தொங்கிக் கொண்டிருந்த நூலை என்னால் எப்படியும் எட்டிப் பிடிக்க முடியவில்லை. வீட்டில் இருப்பதிலேயே உயரமான ஸ்டூலைப் போட்டு எக்கிப் பார்த்தாலும் நூல் நுணி எங்கோ வானில் அலைந்தது. ஒரு ஐடியா. பக்கவாட்டில் இருந்த கட்டிலின் மீது ஸ்டலைப் போட்டு அதன்மீது ஏறி நின்றால் ஓரளவு நூல் மட்டத்திற்கு நிகராக வந்துவிடலாம். ஏறி நின்றேன். உயரம் சரியாக இருந்தாலும் இப்போது பக்கவாட்டு தூரம் அதிகரித்து விட்டது. வேறுவழியில்லை, மனதைத் திடப்படுத்த்திக் கொண்டு நூல் நுணியை குறிபார்த்து கையை நீட்டியபடி தாவினேன். சந்தோஷத்தின் வாலை என் விரல்கள் பற்றிக் கொண்டன! ஓர் இறகு தரையிறங்குவது போல அத்தனை தன்மையாக அத்தனை இலகுவாக அன்று நான் தரையிறங்கினேன்.



சந்தோஷமாக உறங்கும் பலூன்


ஊதாத பலூன்களை

அடுக்கி வைப்பதுபோல்

ஊதிய பலூனை

மேசையில் வைத்துப் பார்த்தாள்

அக்கி


உயிர்வந்த பலூன்தான்

ஓரிடத்தில் 

தங்குவதில்லையே

அது சந்தோஷமாகத் திரிகிறது

வீட்டின் சுவர்களெங்கும் முட்டியபடி


அவள் சந்தோஷத்தின்

வால் பிடித்து இழுத்துவந்து

அதட்டிப் பார்க்கிறாள்

கொஞ்சிப் பார்க்கிறாள்

அது அமரமாட்டேன் என்கிறது


கடைசியில் அதை தன்

படுக்கையில் கிடத்தி

கழுத்து வரை போர்த்திவிட்டு

கதைபோல எதையோ சொல்கிறாள்


சந்தோஷமாகவே உறங்கும் பலூனை 

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா


- ஆனந்த் குமார்


2


அவர்கள் கேட்ட உலக உருண்டை பலூனை ஆளுக்கொன்று வாங்கிக் கொடுத்த பின்னர்தான் அமைதியானான்கள். அண்ணன் பயல்கள் இருவரும் என் மறுக்கமுடியாமையின் பலவீனத்தை நன்கறிந்தவர்கள். இதற்குத்தான் நான் உள்ளூர் திருவிழாவுக்கெல்லாம் வரமாட்டேன் என்று கூறினேன். “எப்பப் பாத்தாலும் தனியா ஒத்தையடிப்பாதைல வானத்த பாத்துட்டு நடந்து போறதுக்கு நாலு சனம் கூடுற திருவிலாக்கு வரலாமில்ல, எப்பயுமா கூப்புடுறோம், வருஷத்துக்கு ஒருவாட்டி..” என்று அம்மா பிலாக்கணம் வைத்ததால் வரவேண்டியதாயிற்று. இப்போது இந்த இரண்டு பொடியன்களையும் மேய்க்க வெண்டிய பொறுப்பு என் வசம். முட்லி விடும் துப்பாக்கி, ரிமோட் கார் போன்றவற்றை பார்வையில் படாமல் பத்திக் கொண்டு வந்து கடைசியில் தெருமுனையில் நின்றுகொண்டிருந்த இந்த பலூன்காரரிடம் வசமாக மாட்டிக் கொண்டேன். பலூன் வியாபாரிகள் குழந்தைகளின் பார்வை செல்லும்  திசைகளை நன்றாக அறிவார்கள். அதைவிட வாங்கிக்கொடுக்காமல் தப்ப நினைக்கும் அப்பாக்களின் கபட மனதையும். 


பலூன் கைக்கு வந்ததும் ஒன்றுக்கு வருகிறது என்றான் சின்னவன். உடனே பெரியவனுக்கு வராமல் இருக்குமா? இருவரையும் மறைவிடம் தேடி அழைத்துச் சென்றாள் அம்மா. காற்றுக்கு அலையும் பலூன்களை இறுகப் பற்றியபடி நான் திருவிழாவின் தெருமுனையில் நிற்கவைக்கப் பட்டேன். பலூன்களை கையிலேந்திய ஒரு காவல்தெய்வத்தைப் போல. பலூன்களின் நெகிழ்வை சமன்செய்ய முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டேன். இவற்றை மறைத்து வைக்கவும் முடியவில்லை. உற்சாகமாக தங்களுக்குள் பேசிக்கொண்டே வந்த இரு இளம்பெண்கள் என்னை கடந்து செல்கையில் மட்டும் பரிகாச சிரிப்பொலி எழுப்பவதுபோல் பட்டது. இதற்கெல்லாமா வாய்பொத்தி சிரிப்பார்கள்? ஒரே இடத்தில் நிற்பதால் தானே கவனம் குவிகிறது, கூட்டத்தில் மறைய ஒரேவழி கூட்டத்தில் கலப்பதுதான் என்று நடக்க ஆரம்பித்தேன். கடந்து சென்ற சிறுவர், சிறுமியர் ஒவ்வொருவரும் என் பலூன்களை கவனிக்கத் தவறவில்லை. உன் பலூனைவிட என் பலூன்தான் பெருசு என்றோ அழகு என்றோ முகம் காட்டினார்கள். ஒளி ஊடுருவும் மாபெரும் நீர்க்குமிழி பலூனை சுமந்து வந்த சிறுவன் ஒருவன் என் பக்கமாக வந்தான். நிறமற்ற அவனுடைய பலூன் என் பலூன்களில் ஒன்றை உரசிச் சென்றது.


நீலநிற பலூன்


இந்த நீலநிற பலூன் மலரினும்


மெலிதாக இருக்கிறது. எனினும்


யாராவது பூமியை விட கனமானது


எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன்.


நீங்களாவது கூறுங்களேன், இந்த


நாற்பது வயதில் ஒரு பலூனை


எப்படி கையில் வைத்திருப்பது என்று…


பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது


காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது


பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன.


எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை ரொம்ப நேரம்


பார்த்து விடுகிறார்கள்.


அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று


என்னை உரசியபடி வருகிறது. நான்


கொஞ்சம் கொஞ்சமாக பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்.


-தேவதச்சன்


3


சரியாக வரவேற்பு தோரணத்தின் மத்தியில் விளக்கின் மீது மாட்டப்பட்டிருந்த அந்த பலூன் சாலையில் சென்ற அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மஞ்சள் விளக்கொளி பெரிய பலூனினுள் ஊடுருவி உள்ளிருந்த குட்டி பலூனை மட்டும் அத்தனை அழகாக காட்டியதால் கடைக்கான அடையாளமாகவே அந்த பலூன் ஆகிவிட்டிருந்தது. எத்தனையோ அலைச்சல்களுக்குப் பிறகு எந்த வேலையும் சரிவராமல் கடைசியில் இந்த ஆவின் பால் கடையை புதிதாக திறந்திருந்தான் நண்பன். முதுகலை பொறியியல் பட்டதாரியான அவன் டீ மாஸ்டராக நின்றான். முகப்பு பந்தல் பிரிக்கப்பட்டதும் அந்த பலூன் தனக்குத்தான் எனும் உற்சாகத்தில் சுற்றிக் கொண்டிருந்தான் ஐந்து வயதான நண்பனின் மகன். மூன்று நாள் காத்திருப்பிற்கு பிறகு அன்று மாலை தான் இரட்டை பலூன் அவன் கைக்கு வந்து சேர்ந்திருந்தது. ஆரம்பம் முதலே அவனது பார்வை உள்ளிருந்த குட்டி பலூனின் மீதே இருந்தது.

விளையாடிக் கொண்டிருந்தவன் கொஞ்ச நேரத்தில் உள்ளிருக்கும் குட்டி பலூனை விடுவிக்க வேண்டும், தான் அதோடு மட்டும் தனியாக விளையாட வேண்டுமென்று அழத் துவங்கினான். “இப்பவே அதோடதாண்டா விளையாடுற, பார் உள்ள அதுவும்தா குதிக்குது” என்றேன். இல்லை அதுக்கு மூச்சுவிட சிரமமாக இருக்கும் என்று மூச்சை ஆழ இழுத்துக் காண்பித்தான். அவன் சமாதானமாவதாகத் தெரியவில்லை. பலத்தக் காற்று வீசியதில் பலூன் எங்களிடமிருந்து நழுவி சாலைபக்கம் சென்றது. நாங்கள் சுதாரிப்பதற்குள் பலூன்மீது மோதிவிடுகிற மாதிரி வேகமாக வந்துகொண்டிருந்த கருப்புநிறக் காரை அங்கிருந்த அனைவரும் பார்த்துவிட்டோம். பலூனை பிடிக்க சாலையை நோக்கிப் பாய்ந்த பையனை இழுத்துப் பிடித்தோம். பலூனில் உரசப்போகின்றார் போல வந்த கார் மிக லாவகமாக இறுதி நொடியில் வளைந்து சென்றது. வண்டி கடந்துசென்ற காற்றின் வேகத்தில் முதலில் சாலைக்குள் இழுக்கப்பட்ட பலூன் மீண்டும் சாலையோர மரத்தடிக்கே வந்தணைந்தது.  பையன் கைகளை உயர்த்தி கண்கள் விரிய சொன்னான், “அங்கிள் பாத்தீங்களா! குட்டி பலூன அந்த அம்மா பலூன் எப்டி காப்பாத்தி கூட்டிட்டு போச்சுன்னு..!”


பலூனுக்குள்

ஒரு பலூன்

இருப்பதை கண்டேன்


இதயவடிவ

குட்டி பலூன்


பெரிய பலூன் 

குதித்தால்

குட்டி பலூனும்

குதிக்கிறது


பெரிய பலூன்

பறந்தால்

இதய பலூனும்

பறக்கிறது


பெரிய பலூனுக்குள்

துடிக்கும் 

இதய பலூன்

யாரின் காதல் 


பெரிய பலூனுக்குள்

துடிக்கும்

குட்டி பலூன்

எத்தனை மாத கரு 


இதய பலூனை

பெரிய பலூன்

எப்படி பிரசவிக்கும்


பெரிய பலூனை

இதய பலூன்

எப்படி

அம்மா 

என்றழைக்கும்


நான்

கவலையோடே\

பெரிய பலூனுக்குள்

மிதக்கும்

இதய பலூனை

பார்க்கிறேன்


அது

கவலையற்று

ஆனந்தமாய் குதிக்கிறது


அது

அதன் 

உலகத்தில்தான்

ஏற்கனவே

பிறந்துவிட்டதே


- மதார்


4


இதுவரை குழந்தைகளின் பலூன் உலகம் வழியாக பயணித்து வந்தவன் இறுதியில் சங்கரின் இந்தக் கவிதையில் முட்டி நிற்கிறேன்.


பலூன் கோடாரி


பலூனில்


நான் ஒரு கோடாரி செய்வேன்


என் வன்மம் அவ்வளவையும்


அதில்


காற்றாய் நிரப்புவேன்


முதுகில் தொங்கியபடி


காற்றிலாடும் என் கோடாரியுடன்


ஒருமுறை நான் நகர்வலம் புரிவேன்


முற்றத்தில் இட்ட


கோலத்தின்


பறவைகள் மறையும்


நண்பகலில்


என் கோடாரியுடன்


நான் காற்றில் பறப்பேன்.


- ஷங்கர்ராமசுப்ரமணியன்


வன்மத்தின் காற்றை கோடரிகளாய் முதுகில் சுமந்தலைந்த நாட்களின் நினைவுகளை எழுதலாம் தான். ஆனால் இக்கவிதைகள் வழியாக கோடரிகளை எடையற்றதாக ஆக்கி காற்றில் பறக்கவிட்ட பின்னர் வன்மத்தின் தருணங்களை நினைவுகூர்வதே கூட அர்த்தமற்றதாகப் படுகிறது. கோடாரிகளை காற்றில் பறக்க வைக்கும் வல்லமை கவிதைகளுக்கு மட்டுமே உண்டு. அவ்வாறு அழகிய மாலைப் பொழுதில் பலூன்களுடன் நகர்வலம் இட்டுச் சென்று என்னை காற்றில் பறக்க வைத்த கவிகளுக்கு என் வணக்கம்.


***


(ஜூன் மாத கவிதைகள் இதழில் வெளிவந்த கட்டுரை. கவிதைகள் இதழுக்கு நன்றி)

Comments

Popular posts from this blog

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் நாகரிகத்திலிருந்து தப்பிப்பது என்ற எனது செயல்திட்டத்தை அச்சொல்லின் பொருளைக் கற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயே தொடங்கிவிட்டேன். ஆனால் பதினெட்டு வயதுவரை

மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர் (கதகளி விழா அமைப்பாளர்களுள் ஒருவரும் பவித்ராவின் தோழியுமான ஜெயஶ்ரீ அவர்கள் சொன்னபடியே எங்கள் கதகளி அனுபவம் பற்றிய  செய்திக்கட்டுரை  நேற்றைய (07.08.2026) மலையாள மனோரமாவில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம்: அழகிய மணவாளன்)  மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம் மலப்புரம் மாவட்டம் வண்டூரில், மறைந்த கதகளி கலைஞர் நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரியின் நினைவேந்தல் விழா ஆகஸ்ட் 3 அன்று நிகழ்ந்தது. கதகளியை அறிவதற்கும், மொழி எல்லைக்கு அப்பால் கதகளியை  தங்கள் மாநிலத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேர்  அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.  ஈரோட்டில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பவித்ரா, அவரது கணவரும் தொழிலதிபருமான சௌந்தர்ராஜன், ஆசிரியை ஜி.ரஞ்சினியரசி,  பி.விக்ரம், மணவாளன், டி.ஏ.பாரி ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பே வண்டூர் வந்துவிட்டனர். கதகளி ஒப்பனையிலிருந்து தொடங்கி முக அபிநயம், கைமுத்திரை என கதகளியின் எல்லா அம்சங்களையும் கற்றுக்கொண்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒருங்கிணைப்...

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

  இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று.  வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம். அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவ...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

முழுக் கோடையும் ஒரே நாளில் - ரே பிராட்பரி

முழுக் கோடையும் ஒரே நாளில் ”தயாரா?” ”தயார்.”     ”இப்போதா?” “சீக்கிரமே.” ”விஞ்ஞானிகளுக்கு உண்மையாகத் தெரியுமா? இன்றைக்கு அது நிச்சயமாக நடக்குமா? நடந்துவிடுமா என்ன?” ”பார், பார்; நீயே உன் கண்களால் பார் !” குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்தனர், நிறைய ரோஜாக்களும் புதர் செடிகளும் ஒன்றுகலந்து மறைந்திருக்கும் சூரியனை எட்டிப் பார்க்க முயல்வதைப் போல. மழை பெய்தது. ஏழு வருடங்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆயிரமாயிரம் நாட்களாக ஒரு முனையிலிருந்து மறுமுனையை தனது முரசொலியாலும் வேகமான பாய்ச்சலாலும் இடைவிடாமல் நிரப்பிக் கொண்டிருக்கிறது மழை. இனிய பளிங்குபோன்ற மழைத்தாரைகளின் பொழிவும் புயல்காற்றின் மோதல்களும் பலமாக இருந்த அந்த தீவின்மேல் கடலின் பேரலைகள் வந்துசெல்கின்றன. மழையால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனங்கள் அங்குள்ளன. அவை மீண்டும் நசுக்கப்படுவதற்காக ஆயிரம்முறை வளர்கின்றன. இப்படியாக, வீனஸ் கிரகத்தில் வாழ்வு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது, விண்வெளிக்கலன் மூலம் இந்த மழைக் கிரகத்திற்கு வந்து நாகரிகத்தை உருவாக்கி, தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் ம...

சில்லிக் கொம்பன் - அஞ்சலி

சென்ற வெள்ளி சனி ஆகிய தினங்களில் பறவை பார்த்தலுக்காக பாலக்காட்டைச் சேர்ந்த பறவையியலாளர் கிருஷ்ணமூர்த்தி சாருடன் நெல்லியம்பதி சென்றிருந்தோம். பயணத்தின் போது இயல்பாகவே சில்லிக் கொம்பனை குறித்த பேச்சு வந்துகொண்டே இருந்தது. "அவன் ஒரு சாதுப் பிள்ளையாக்கும். ரோட்ல போகும்போது நீங்க தனி ஆளா நடுராத்திரில அவன் எதிர வந்துட்டா கூட விஷமிக்க ஒண்ணுமில்ல கேட்டீங்களா. இதுவர அவன் யாருக்கும் ஒரு தொந்திரவம் செஞ்சதில்ல. இங்க இருக்க எல்லாருக்கும் அவன அடையாளம் தெரியும். இந்த ஊரோட பிள்ளை அவன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி சார்.  அவர் மட்டுமின்றி இந்தப் பயணம் முழுக்க நெல்லியம்பதி ஊர்மக்கள், ஜீப் டிரைவர்கள் என சில்லிக் கொம்பனை குறித்து பேசிய அனைவரும் அவனை ஒருவித ப்ரியத்துடனே குறிப்பிட்டனர். அவன் அருகில்தான் இருக்கிறான், எப்போது வேண்டுமானாலும் அவனைப் பார்க்க வாய்ப்புள்ளது என்ற உணர்வு எங்களுக்கு பயணம் முழுக்க இருந்து கொண்டே இருந்தது. நேரில் பார்க்காவிட்டாலும் அவன் அருகாமையை உணர்ந்தபடி இருந்தோம். அவன் பெயருக்கு காரணமான நீண்ட மெலிந்த தந்தங்கள் எவ்வாறு இருக்கும் என ஒவ்வொருவரும் ஒருவாறு கற்பனை செய்து விவாதித்துக...