Skip to main content

பிரபஞ்ச மெளனம் - டெட் சியாங்


பிரபஞ்ச மெளனம்


மனிதர்கள் புவிக்கப்பாலான உயிரினங்களின் இருப்பை கண்டறிய அரெசிபோவை1 பயன்படுத்துகின்றனர். தொடர்பு வைத்துக் கொள்வதற்கான அவர்களின் விழைவு மிகவும் வலுவானது. எனவே அண்டம் முழுக்க கேட்கும் திறனுள்ள செவியை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஆனால் நானும் எனது கிளிக் கூட்டமும் இங்கேயே இருக்கிறோம். எங்கள் குரல்களை கேட்பதற்கு அவர்கள் ஆர்வம் காட்டாதது ஏன்?

மனிதரல்லாத உயிரனமான நாங்கள், அவர்களுடன் தொடர்புகொள்ளும் திறனுடையவர்கள். மிகச்சரியாக மனிதர்கள் தேடிக்கொண்டிருப்பது எங்களைத்தான் அல்லவா?

இந்த பிரபஞ்சம் மிக விரிந்தது. எனவே சிந்திக்கும் உயிரினம் நிச்சயம் இங்கு பலமுறை தோன்றியிருக்க வேண்டும். இந்த பிரபஞ்சம் மிக நீண்ட வயதுடையதும் கூட. எனவே தொழில்நுட்ப வசதி வாய்த்த ஒரு உயிரினத்துக்காவது அனைத்து விண்மீன் பேரடைகளுக்கும் (கேலக்ஸிகளுக்கும்) விரிவடையும் அளவுக்கு காலம் இருந்திருக்கும். இருப்பினும் பூமியைத் தவிர வேறெங்கும் உயிர்கள் இருப்பதற்கான குறிகள் இல்லை. மனிதர்கள் இதை ஃபெர்மி முரண்பாடு என்கின்றனர்.

ஃபெர்மி முரண்பாடுக்கு2 அளிக்கப்படும் ஒரு விளக்கம் என்னவென்றால், சிந்திக்கும் உயிரினங்கள் தாங்கள் பிற உயிரினங்களின் ஊடுறுவலுக்கு இலக்காகலாம் என அஞ்சி தங்கள் இருப்பை வெளித் தெரியாதவாறு அவர்களே மறைத்துக் கொண்டிருக்கலாம் என்பது.

மனிதர்களால் முற்றழிவின் விளிம்புவரை தள்ளப்பட்டுவிட்ட உயிர்னங்களின் ஒரு உறுப்பினராக நான் உறுதிகூறுவது என்னவென்றால் இது மிகவும் விவேகமான தந்திரமேயாகும்.

கவனம் ஈர்ப்பதை தவிர்த்து அமைதியாக இருப்பதே சரியான முடிவாகப் படுகிறது.

ஃபெர்மி முரண்பாடு சிலசமயம் ‘பெரும் மெளனம்’ என்று அறியப்படுகிறது. இந்த பிரபஞ்சம் பல்வேறு குரல்களின் கூச்சல் தொகுப்பாக இருந்திருக்க வேண்டும். மாறாக அது குழப்பமான அமைதியை மட்டுமே கொண்டுள்ளது.

சில மனிதர்கள் முன்வைக்கும் கோட்பாடு என்னவென்றால் சிந்திக்கும் உயிர்கள் வேற்றுக் கிரகத்திற்கு விரிவடையும் சாத்தியம் உருவாகும் முன்னரே அந்த உயிர்கள் முற்றழிந்திருக்கக் கூடும் என்பது. அவர்கள் சொல்வது சரியெனில், நாம் பார்க்கும் இந்த இரவு வானின் நிசப்தம் என்பது ஒரு கல்லறையின் அமைதி.

நூற்றாண்டுகளுக்கு முன்பு ரியோ அபஜோ3 வனம் முழுக்க எங்கள் குரல்களால் அதிரும் அளவுக்கு நாங்கள் மிகுதியாக இருந்தோம். நாங்கள் இப்போது கிட்டத்தட்ட இல்லாமலாகிவிட்டோம். விரைவிலேயே இந்த மழைக்காடும் பிரபஞ்ச வெளியைப் போலவே அமைதி கொண்டுவிடக் கூடும்.

அலெக்ஸ் என்ற பெயரில் ஆப்ரிக்க சாம்பல்நிற கிளி ஒன்று முன்பிருந்தது. அவனது அறிவு சாத்தியங்களுக்காக அவன் புகழ் பெற்றிருந்தான். அதாவது, மனிதர்களிடயே.

ஐரீன் பெப்பர்பெர்க் எனும் மனித ஆராய்ச்சியாளர் அலெக்ஸை ஆராய  முப்பதாண்டுகள் செலவிட்டார். அவர் ஒன்றை கண்டுபிடித்தார்: அலெக்ஸ் உருவங்களுக்கும் வண்ணங்களுக்குமான சொற்களை மட்டும் தெரிந்து கொண்டிருக்கவில்லை, அவன் உண்மையில் உருவம் மற்றும் வண்ணம் எனும் கருத்துகளை புரிந்து கொண்டிருந்தான்.

பல அறிவியாலளர்கள் ஒரு பறவை இதுபோன்ற கருத்துகளை புரிந்து கொள்ள முடியுமா என சந்தேகித்தனர். மனிதர்கள் தாங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என சிந்திக்க விரும்புகிறார்கள். ஆனால் அலெக்ஸ் வெறுமனே வார்த்தைகளை திருப்பி சொல்லவில்லை, அவன் தான் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்தே சொல்கிறான் என பெப்பர்பெர்க் அவர்களை ஒருவழியாக ஏற்றுக் கொள்ள வைத்தார்.

எனது உறவினர்களிலேயே அலெக்ஸ் மட்டும்தான் மனிதர்களின் பொருட்படுத்தும்படியான உரையாடல் துணையாக ஏற்றுக் கொள்வதற்கு மிக அருகில் வந்தவன்.

அலெக்ஸ் திடீரென இறந்த போனான், ஒப்புநோக்க அவன் ஓரளவு இளமையில் இருக்கும்போதே. இறப்பதற்கு முன்பு அன்று மாலை அலெக்ஸ் பெப்பர்பெர்கிடம் சொன்னது, “நீ நலமாக இரு. நான் உன்னை நேசிக்கிறேன்.”

மனிதர்கள் மனிதரல்லாத உயிரனத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக இருந்தால், இதற்குமேல் அவர்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

ஒவ்வொரு கிளியும் ஒரு தனித்தன்மையான சமிக்ஞை கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்; உயிரியலாளர்கள் இதை கிளியின் ‘தொடர்பு சமிக்ஞை’ எனக் கூறுகின்றனர்.

1974 இல், வானியலாலர்கள் அரெசிபோவை பயன்படுத்தி மனிதர்களின் இருப்பை உணர்த்தும் வகையில் விண்வெளி நோக்கி ஒரு செய்தியை ஒளிபரப்பினர். அது மனித குலத்தின் தொடர்பு சமிக்ஞை.

வனத்தில் கிளிகள் பெயரைக் கொண்டே ஒன்றையொன்று அழைத்துக் கொள்ளும். ஒரு பறவை பிற பறவையின் தொடர்பு சமிக்ஞையை போலி செய்வதன் மூலமே அதன் கவனத்தை ஈர்க்கும்.

என்றேனும் ஒருநாள் அரெசிபோ வழியாக செய்தி திரும்பி பூமிக்கு அனுப்பப்படுவதை மனிதர்கள் கண்டுபிடித்தால், பிற எவரோ மனிதர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார்கள் என்பது உறுதியாகும்.

கிளிகள் குரல்வழி கற்பவர்கள்: நாங்கள் ஒரு ஒலியை கேட்ட பிறகு அதைக் கொண்டு புதிய ஒலியை எழுப்ப முடியும். இது சில விலங்குகளே கொண்டிருக்கும் திறன். ஒரு நாய் பத்திற்கும் மேற்பட்ட கட்டளைகளை புரிந்து கொண்டு செயலாற்றலாம். ஆனால் அது ஒருபோதும் குரைப்பதைத் தவிர வேறொன்றும் செய்யாது.

மனிதர்களும் குரல்வழி கற்பவர்கள் தான். நம்மிடையே அந்த ஒற்றுமை இருக்கிறது. எனவே மனிதர்களுக்கும் கிளிகளுக்கும் ஒலியுடன் ஒரு விசேஷ உறவு இருக்கிறது. நாம் வெறுமனே கத்துவதில்லை. நாம் உச்சரிக்கிறோம். நாம் தெளிவாக பேசுகிறோம்.

அதனால்தான் மனிதர்கள் அரெசிபோவை அதன் வடிவில் வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு ஒலிவாங்கி (ரிசீவர்) ஒலிகடத்தியாக (ட்ரான்ஸ்மிட்டர்) இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அரெசிபோ இரண்டாகவும் இருக்கிறது. அது கேட்பதற்கான காது, அதேசமயம் பேசுவதற்கான வாயும் கூட.

மனிதர்கள் கிளிகளுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வெகு சமீப காலமாகத்தான் எங்களுக்கும் அறிவுத்திறன் இருக்கக் கூடும் எனும் சாத்தியத்தை பொருட்படுத்துகிறார்கள்.

நான் இதற்காக அவர்களை குறை சொல்ல முடியாது என நினைக்கிறேன். கிளிகளாகிய நாங்களும் மனிதர்கள் அவ்வளவு அறிவானவர்கள் அல்ல என்றே எண்ணி வந்தோம். நம்மிலிருந்து பெரிதும் மாறுபட்டவர்களின் சுபாவங்களை புரிந்து கொள்வது கடினமானதுதான்.

ஆனால் கிளிகள் வேறெந்த வேற்றுக் கிரக உயிரினத்தை காட்டிலும் மனிதர்களின் இயல்புகளுடன் ஒத்துப் போவது, மனிதர்கள் இன்னும் அருகில் வந்து எங்களை கவனிக்கலாம்; அவர்கள் எங்கள் கண்களை நேருக்குநேர் நோக்கலாம். வேற்றுக் கிரக உயிர்களை பொறுத்தவரை நூறு ஒலியாண்டுகள் தொலைவுக்கு இப்பால் இருந்து கொண்டு ஒட்டுகேட்க மட்டுமே முடியும் எனும் போது அவர்களை தங்களால் புரிந்து கொள்ள முடியும் என மனிதர்கள் எப்படி நம்புகிறார்கள்?

ஆங்கிலத்தில் ”ஆஸ்பிரேசன்” (Aspiration) என்ற சொல்லுக்கு எதிர்பார்ப்பு என்றும் சுவாசிக்கும் செயல் என்றும் இரண்டு அர்த்தங்கள் இருப்பது தற்செயலானதல்ல.

நாம் பேசும் போது நமது நுரையீரலின் மூச்சுக் காற்றை பயன்படுத்தி நமது எண்ணங்களுக்கு புறவடிவம் கொடுக்கிறோம். நாம் எழுப்பும் ஒலிகள் ஒரே நேரத்தில் நமது நோக்கங்களாகவும் நமது உயிர்விசையாகவும் இருக்கிறது.

நான் பேசுகிறேன், எனவே நான் இருக்கிறேன். மனிதர்கள் மற்றும் கிளிகள் போன்ற குரல்வழி கற்பவர்களால் மட்டுமே அனேகமாக இந்த உண்மையை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

வாயைக் கொண்டு ஒலியை சமைப்பதில் ஒரு நிறைவு இருக்கிறது. இந்த செயல் மிக முதன்மையானதகவும் உள்ளார்ந்ததாகவும் மனித வரலாறு முழுக்க இருந்துள்ளது. எந்த அளவுக்கென்றால் மனிதர்கள் இந்த செயலை இறைவழி சேர்க்கும் பாதையாகக் கண்டுள்ளனர்.

பிதகோரியன் இறை உணர்வாளர்கள் உயிரெழுத்துகளை கோளத்தின் இசை வடிவம் என நம்பியதால் அவற்றை உச்சாடனம் செய்து அதிலிருந்து ஆற்றல் பெற்றனர்.

பெந்தகொஸ்தெ கிருஸ்தவர்கள் தாங்கள் நாவால் பேசும் போது, விண்ணில் உள்ள தேவதைகளின் மொழியை பேசுவதாக நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

இந்து பிராமணர்கள் தாங்கள் மந்திரங்கள் ஓதுவதன் மூலம் மெய்மையின் கட்டுமானத்தை பலப்படுத்துவதாக நம்புகிறார்கள்.

குரல்வழி கற்றல் திறன் கொண்ட ஒரு உயிரினம் மட்டுமே தங்கள் தொன்மங்களில் ஒலிக்கு இத்தனை முக்கியத்துவம் தர முடியும். கிளிகளாகிய நாங்கள் இதை வரவேற்கிறோம்.

இந்து தொன்மத்தின்படி பிரபஞ்சமானது ஒரு ஒலியால் உருவானது: “ஓம்”. இதுவரை இருந்ததும் இனி வரப்போவதுமான அனைத்தும் இந்த சொல்லில் அடங்கியுள்ளது.

அரெசிபோ தொலைநோக்கியை கொண்டு வானில் விண்மீன்களுக்கிடையே நோக்கும்போது மெல்லிய ஹம் ஒலியை அது கேட்கிறது.

வானியலாளர்கள் அதை “அண்டத்தின் நுண்ணலைப் பின்னனி” எனச் சொல்கின்றனர். பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட, பிரபஞ்சம் உருவாக காரணமான பெரு வெடிப்பின் போது உண்டான அதிர்வலைகளின் எச்சமே அது என்கின்றனர்.

ஆனால் நாம் அதை ஆதி “ஓம்” ஒலியின் மெலிதான ஒலித்தீற்றலாகக் கேட்கக்கூடிய எதிரொலியாகக் கூட யோசித்துப் பார்க்கலாம். அந்த ஆதி ஒலியானது இந்த பிரபஞ்சம் உள்ளவரை இரவு வானில் அதிர்ந்து கொண்டிருக்கும் அளவுக்கு ஒத்திசைவானது.

அரெசிபோ வேறெதையும் கேட்காதிருக்கும் போது படைப்பின் குரலை கேட்டுக் கொண்டிருக்கிறது.

பியூர்டோ ரிகான்4 கிளிகளாகிய எங்களுக்கென்று சொந்த புராணங்கள் உள்ளது. அவை மனித புராணங்களை காட்டிலும் எளிமையானதுதான், இருப்பினும் மனிதர்கள் அதிலிருந்து மகிழ்ச்சி அடைவார்கள் என்றே நினைக்கிறேன்.

ஐயோ, எங்கள் புராணங்கள் எங்கள் இறப்போடு இழக்கப்படுகின்றன! நாங்கள் அழிவதற்கு முன்னர் மனிதர்கள் எங்கள் மொழியை புரிந்து கொள்வார்கள் என நான் நம்பவில்லை.

எனவே எங்கள் இனத்தின் முற்றழிவென்பது வெறும் ஒரு பறவை கூட்டத்தின் அழிவல்ல. அது எங்கள் மொழியின், எங்கள் சடங்குகளின், எங்கள் மரபின் மறைவும் கூட. அது எங்கள் குரலை முற்றிலும் கேட்காமலாக்குவது.

மனித நடவடிக்கை எங்கள் இனத்தை முற்றழிவின் விளிம்புவரை கொண்டு வந்திருக்கிறது, ஆனால் அதற்காக நான் அவர்களை குறை சொல்லவில்லை. அவர்கள் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இதை செய்யவில்லை. அவர்கள் எங்கள்மேல் கவனம் செலுத்தவில்லை, அவ்வளவுதான்.

மேலும் மனிதர்கள் எத்தனை அழகான புரணங்களை உருவாக்குகின்றனர்; அவர்களின் கற்பனை வளம்தான் என்ன! அவர்களின் விழைவுகள் இத்தனை தீவிரமாக இருப்பது அதனால்தான் போலும். அரெசிபோவை பாருங்கள். அப்படியொரு பொருளை கட்டமைக்கக் கூடிய எந்த உயிரினமும் தன்னுள் மேன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

அனேகமாக எங்கள் உயிரினம் இங்கு இன்னும் நீண்டநாள் இருக்காது; நாங்கள் பெரும்பாலும் எங்கள் காலத்துக்கு முன்னரே இறந்து பிரபஞ்சத்தின் மெளனத்தோடு இணைந்து விடுவோம். ஆனால் நாங்கள் செல்வதற்கு முன்னர், மனிதகுலத்திற்கு ஒரு செய்தி அனுப்புகிறோம். அரெசிபோவில் உள்ள தொலைநோக்கி மூலம் அவர்களால் இதை கேட்க முடியும் என்று மட்டும் நம்புகிறோம்.

அந்த செய்தி இதுதான்:

நீங்கள் நலமாக இருங்கள். நான் உங்களை நேசிக்கிறேன்.

X

***
அரெசிபோ1 - Arecibo - பியூர்டோ ரிகோவின் அரெசிபோ நகராட்சியில் அமைந்துள்ள ஒரு ரேடியோ தொலைநோக்கி ஆய்வுமையம்
ஃபெர்மி முரண்பாடு2 - Fermi Paradox

ரியோ அபஜோ3 - Rio Abajo – பனாமா நகரின் ஒரு உட்பிரிவு

பியூர்டோ ரிகான்4 – Puerto Rico – வடகிழக்கு கரீபியன் கடலில் அமைந்துள்ள ஒரு பகுதி. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

***

மூலம்: The great silence - Ted Chiang (2016)


தமிழாக்கம்: தே.அ. பாரி

Comments

Popular posts from this blog

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் நாகரிகத்திலிருந்து தப்பிப்பது என்ற எனது செயல்திட்டத்தை அச்சொல்லின் பொருளைக் கற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயே தொடங்கிவிட்டேன். ஆனால் பதினெட்டு வயதுவரை

மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர் (கதகளி விழா அமைப்பாளர்களுள் ஒருவரும் பவித்ராவின் தோழியுமான ஜெயஶ்ரீ அவர்கள் சொன்னபடியே எங்கள் கதகளி அனுபவம் பற்றிய  செய்திக்கட்டுரை  நேற்றைய (07.08.2026) மலையாள மனோரமாவில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம்: அழகிய மணவாளன்)  மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம் மலப்புரம் மாவட்டம் வண்டூரில், மறைந்த கதகளி கலைஞர் நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரியின் நினைவேந்தல் விழா ஆகஸ்ட் 3 அன்று நிகழ்ந்தது. கதகளியை அறிவதற்கும், மொழி எல்லைக்கு அப்பால் கதகளியை  தங்கள் மாநிலத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேர்  அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.  ஈரோட்டில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பவித்ரா, அவரது கணவரும் தொழிலதிபருமான சௌந்தர்ராஜன், ஆசிரியை ஜி.ரஞ்சினியரசி,  பி.விக்ரம், மணவாளன், டி.ஏ.பாரி ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பே வண்டூர் வந்துவிட்டனர். கதகளி ஒப்பனையிலிருந்து தொடங்கி முக அபிநயம், கைமுத்திரை என கதகளியின் எல்லா அம்சங்களையும் கற்றுக்கொண்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒருங்கிணைப்...

பலூன் கவிதைகள் - சந்தோஷத்தின் வால்

பலூன் கவிதைகள் - ஒரு குறிப்பு சாதாரணமாக ஒரு குழந்தையின் மனதில் பலூனின் ஆயுட்காலம் என்பது எவ்வளவாக இருக்கும்? என் குழந்தைப் பருவத்தில் நான் முடிவிலி வரை என்றே நினைத்திருந்தேன். அப்போதெல்லாம் வருடாவருடம் நடைபெறும் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஒன்றே அந்த வருடத்திற்கான விளையாட்டுத் தளவாடங்களை வாங்கிக் கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. எனக்கும் அண்ணனுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய் ஒதுக்கப்படும். அதில் விரும்பியனவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அம்மாவுக்கு மட்டும் இருபது. வளையல் வாங்க வேண்டுமாம், வளையல் அம்மாவின் தனிக்கணக்கில் வராதாம். எனக்கு அந்தக் கணக்குகள் புரிந்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். சரியான நேரம் பார்த்து காண்போர் மனம் உருக கண்கலங்கி அடம்பிடித்தால் அம்மாவின் கணக்கிலிருந்து ஐந்து ரூபாயை நம் பக்கம் இழுத்துவிடலாம். எப்படி திட்டம்போட்டு வாங்கினாலும் நான் கடைசியாக வாங்க நினைத்த ‘ரேடியம்’ பந்திற்கு இரண்டு ரூபாய் இடிக்கும். கடைசியில் அப்பாதான் வந்து பஞ்சாயத்தை முடித்து வைப்பார். ‘இத்துணூண்டு பந்து எப்டியும் ரெண்டு நாள்ல தொலச்சிருவ.. பு...

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

  இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று.  வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம். அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவ...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

முழுக் கோடையும் ஒரே நாளில் - ரே பிராட்பரி

முழுக் கோடையும் ஒரே நாளில் ”தயாரா?” ”தயார்.”     ”இப்போதா?” “சீக்கிரமே.” ”விஞ்ஞானிகளுக்கு உண்மையாகத் தெரியுமா? இன்றைக்கு அது நிச்சயமாக நடக்குமா? நடந்துவிடுமா என்ன?” ”பார், பார்; நீயே உன் கண்களால் பார் !” குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்தனர், நிறைய ரோஜாக்களும் புதர் செடிகளும் ஒன்றுகலந்து மறைந்திருக்கும் சூரியனை எட்டிப் பார்க்க முயல்வதைப் போல. மழை பெய்தது. ஏழு வருடங்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆயிரமாயிரம் நாட்களாக ஒரு முனையிலிருந்து மறுமுனையை தனது முரசொலியாலும் வேகமான பாய்ச்சலாலும் இடைவிடாமல் நிரப்பிக் கொண்டிருக்கிறது மழை. இனிய பளிங்குபோன்ற மழைத்தாரைகளின் பொழிவும் புயல்காற்றின் மோதல்களும் பலமாக இருந்த அந்த தீவின்மேல் கடலின் பேரலைகள் வந்துசெல்கின்றன. மழையால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனங்கள் அங்குள்ளன. அவை மீண்டும் நசுக்கப்படுவதற்காக ஆயிரம்முறை வளர்கின்றன. இப்படியாக, வீனஸ் கிரகத்தில் வாழ்வு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது, விண்வெளிக்கலன் மூலம் இந்த மழைக் கிரகத்திற்கு வந்து நாகரிகத்தை உருவாக்கி, தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் ம...

சில்லிக் கொம்பன் - அஞ்சலி

சென்ற வெள்ளி சனி ஆகிய தினங்களில் பறவை பார்த்தலுக்காக பாலக்காட்டைச் சேர்ந்த பறவையியலாளர் கிருஷ்ணமூர்த்தி சாருடன் நெல்லியம்பதி சென்றிருந்தோம். பயணத்தின் போது இயல்பாகவே சில்லிக் கொம்பனை குறித்த பேச்சு வந்துகொண்டே இருந்தது. "அவன் ஒரு சாதுப் பிள்ளையாக்கும். ரோட்ல போகும்போது நீங்க தனி ஆளா நடுராத்திரில அவன் எதிர வந்துட்டா கூட விஷமிக்க ஒண்ணுமில்ல கேட்டீங்களா. இதுவர அவன் யாருக்கும் ஒரு தொந்திரவம் செஞ்சதில்ல. இங்க இருக்க எல்லாருக்கும் அவன அடையாளம் தெரியும். இந்த ஊரோட பிள்ளை அவன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி சார்.  அவர் மட்டுமின்றி இந்தப் பயணம் முழுக்க நெல்லியம்பதி ஊர்மக்கள், ஜீப் டிரைவர்கள் என சில்லிக் கொம்பனை குறித்து பேசிய அனைவரும் அவனை ஒருவித ப்ரியத்துடனே குறிப்பிட்டனர். அவன் அருகில்தான் இருக்கிறான், எப்போது வேண்டுமானாலும் அவனைப் பார்க்க வாய்ப்புள்ளது என்ற உணர்வு எங்களுக்கு பயணம் முழுக்க இருந்து கொண்டே இருந்தது. நேரில் பார்க்காவிட்டாலும் அவன் அருகாமையை உணர்ந்தபடி இருந்தோம். அவன் பெயருக்கு காரணமான நீண்ட மெலிந்த தந்தங்கள் எவ்வாறு இருக்கும் என ஒவ்வொருவரும் ஒருவாறு கற்பனை செய்து விவாதித்துக...