Skip to main content

பிறப்பிடம் - யசுனாரி கவபத்தா


பிறப்பிடம்

அந்த எழுத்தர் வாடகைக்கு வீடு தேடி வந்தபோது பனிரெண்டு அல்லது பதிமூன்று வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் கதவருகே நின்றிருப்பதைக் கண்டு அவரால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

”ரொம்பவும் சாமர்த்தியமாக நடந்து கொள்வதாக எண்ணாதே. உன் அம்மாவுக்கு கடிதமெழுதி அவளிடம் இதுபற்றி கேள்.”

”என் அம்மாவிடம் கேட்டால், அவள் இல்லையென்றே சொல்வாள். நீங்கள் என்னிடமிருந்துதான் வாடகைக்கு எடுக்க வேண்டும்.”

”சரி, வாடகை எவ்வளவு?”

”ஐந்து யென்.”

”ஹ்ம்ம. எனக்கு சந்தை நிலவரம் தெரியும்,” எழுத்தர் கறாராக மறுப்பதான தொனியில் பேசினார். “ஐந்து யென் என்பது ரொம்ப அதிகம். மூன்று யென்னாக வைத்துக் கொள்.”

”அவ்வாறெனில் மறந்து விடுங்கள்.” பையனைப் பார்க்கையில் வீட்டின் பின்னால் இருக்கும் வயல்வெளிக்கு ஓடத் தயாராக இருப்பவன்போல தெரிந்தது. இந்த குழந்தைத்தனமான பேரம்பேசும் பாணி எழுத்தரை திணறடித்தது. மாவட்ட அலுவலக கட்டிடத்தின் எதிரே உள்ள இவ்வீடு அவருக்கு கண்டிப்பாக வேண்டும்.

”இந்த மாதம் மட்டும் நீங்கள் வாடகையை முன்பணமாக கொடுக்க வேண்டும்.”

“நான் உன்னிடமே கொடுப்பதா?”

”ஆம், என்னிடம்தான்.” அந்தப் பையன் ஒரு வீட்டு உரிமையாளனுக்குரிய தன்னம்பிக்கையுடன் தலையசைத்தான். எனினும் அவனுள் சிறுவர்களுக்குரிய அசட்டுச் சிரிப்பு ஒன்று வெளிவந்தது, இறுதியில் உதடுகளை இறுக்கமாக மூடிக் கொண்டு ஒருவழியாக சமாளித்தான். அவன் புதிதாகக் கற்றுக்கொண்டு மேற்கொண்டு வரும் இந்தப் பண பரிவர்த்தனைகள் பெரும் கேளிக்கையாக இருந்ததால் அவனால் மகிழ்ச்சியை தாங்க முடியவில்லை. வெற்றிகரமாக ஒரு உடன்படிக்கைக்கு வந்து பணம் பெறுவது என்பது அவனுக்கு இது இரண்டாவது முறை.

அவனுடைய அம்மா, விரைவில் குழந்தை பெற்றெடுக்கப் போகும் தன் மூத்த மகளை கவனித்துக் கொள்வதற்காக டோக்கியோ சென்றிருக்கிறாள். மார்ச் மாதம் முழுக்க அவள் திரும்பி வரவில்லை. அவள் தன் பையனிடம் டோக்கியா வருமாறு தகவல் தெரிவித்தாள், ஆனால் பணமேதும் அனுப்பவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அண்டை வீட்டுக்காரர்களே அவனை பார்த்துக் கொண்டனர். பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி ஒருவன் அண்டை வீடுகளுக்கு வந்திருந்தபோது, அந்தப் பையன் அவரை தன் வீட்டுக்கே இழுத்து வந்து அவரிடம் பழைய பத்திரிக்கைகளையும் கந்தல் துணிகளையும் விற்றான். பையனுக்கு சீக்கிரமே புரிந்துவிட்டது.

”இது அவ்வளவு விலை போகுமா?” கரி அடுப்பிலிருந்து எடுத்த இரும்பாலான தேனீர் கெண்டியை வியாபாரியிடம் தூக்கிக் காண்பித்தான். போகப்போக அவனுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்துவிட்டது: எதை வேண்டுமானாலும் விற்கலாம். அலங்கோலமான அவ்வீடு முழுக்க பொருட்களுக்காக துழாவினான், அவனுடைய மறைந்த தந்தையின் சிறப்பான உடைகள்கூட விற்கப்பட்டன. இன்னும் ஐந்து யென் மட்டும் கிடைத்தால், அவன் டோக்கியோ சென்று திரும்புவதற்கான தொகை சேர்ந்துவிடும். இந்த வினோதமான வாழ்வின் பகுதியாக தன் தினசரி தேவைகளை தானே ஈட்டிக் கொள்ள வழிசெய்யும் இந்தப் பரிவர்த்தனைகள் பையனை ஒரு முதிர்ந்தவனாக உணரச் செய்தது. ஆனால் பழைய பொருட்கள் வியாபாரியிடமிருந்தும் எழுத்தரிடமிருந்தும் பணம் பெற்றுக் கொண்டபோது, அவர்கள் வாழ்வின் பரிதாபகரத்தையும் சோர்வையும் அவனால் தெளிவாக உணர முடிந்தது. இருப்பினும் துணிச்சலான இந்த ஆரம்பநிலை முயற்சிகள் அவனை ஒரு வெற்றியாளனாக உணரச் செய்தது. பிழைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அவன் அடைந்தான்.

பச்சை வாசமடிக்கும் ஆமோரி ஆப்பிள்களை முதுகில் சுமந்துகொண்டு டோக்கியோவில் உள்ள வெனோ நிலையத்தில் பையன் வந்திறங்கினான். அவனைக் கண்ட திகைப்பில் அவனுடைய அம்மாவால் திட்டக் கூட முடியவில்லை. இனி வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாது என்ற உண்மை அவளது நெஞ்சில் பரவியது. அவளுடைய மூத்த மகனும் டோக்கியோவில்தான் வசிக்கிறான். தன் தொழிலுக்குத் தேவையான முதலீட்டை பெறுவதற்காக ஊரில் உள்ள பழைய வீட்டை விற்றுவிடுமாறு அவன் பல வருடங்களாக அவளைத் திட்டி வந்தாலும், ஒருபோதும் அவ்வீடு கைவிட்டுப் போவதை அவள் அனுமதிக்கவில்லை. தற்போது இந்தப் பையனோ அவள் கணவனின் சிறந்த ஆடைகளை கந்தல் துணிகளை விற்பதுபோல விற்றுள்ளான். சாப்பாட்டுக்காக தன் கிமோனோ உடைகளை அவள் விற்றபோது கூட கணவனின் ஆடைகளை பாதுகாத்தே வந்திருந்தாள்.
”நான் மூன்று நாட்களுக்கு தூங்கப் போகிறேன்.” தன் அக்கா வீட்டிற்கு வந்தவுடன் அவன் களைப்பில் விரைவாக தூங்கிவிட்டான்.

.அக்காவின் வீடு புறநகர் பகுதியில் உள்ள ஒரு பெரிய குளத்தின் அருகில் இருந்தது. அடுத்தநாள் அந்தப் பையன் அவனாகவே மீன்பிடிக்கச் சென்றான். திரும்பி வருகையில் ஐந்து அல்லது ஆறு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வந்தவன், கதவருகே நின்று பதினான்கு கெண்டை மீன்களை அவர்களுக்கு பகிர்ந்தளித்தான்.

வீட்டினுள்ளே அம்மாவும் மகளும் அழுது கொண்டிருக்கும் குரல் கேட்டது. மகளின் கணவன் வேலையிடத்தில் தனக்குத் தெரிந்த ஒரு கொத்தனாரிடம் பையனை உதவியாளனாக வேலைக்கு அனுப்ப முடிவு செய்திருந்தான்; அவன் மாலையில் பையனை வரச் சொல்லியிருந்தான். அம்மாவோ ஒரு உதவியாளனாக அனுப்புவதை விட அவனை மீண்டும் நாட்டுக்கே கூட்டிச் சென்று விடுவதாக எதிர்ப்பு தெரிவித்தாள். இதற்கிடையே பையன் வேகமாக உள்ளே வந்து, பதற்றத்தில் இருப்பவனாக பேசினான்.

”நீ இதுகுறித்து வாதிட்டு அழுது கூச்சலிடுவதாக இருந்தால், நான் எங்கு வேண்டுமானாலும் மகிழ்ச்சியுடன் உதவியாளனாகப் போவேன்.”

அம்மா அமைதியாக பையனின் காலுறைகளை தைக்கத் துவங்கினாள். அவன் தன் அம்மாவின் கிமோனோக்களையும் மற்றும் தன் சொந்த உடைமைகளையும் கொண்டு வந்திருந்தான், மேலும், கோடை காலம் நெருங்கிவிட்ட நிலையில் அவனுடைய குளிர்கால காலுறைகளும் பிரம்பு பெட்டியில் திணித்து எடுத்து வரப்பட்டிருந்தது.

*** 

மூலம்: Birthplace (Collection: The Dancing girl of Izu and other Stories)



Comments

Popular posts from this blog

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் நாகரிகத்திலிருந்து தப்பிப்பது என்ற எனது செயல்திட்டத்தை அச்சொல்லின் பொருளைக் கற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயே தொடங்கிவிட்டேன். ஆனால் பதினெட்டு வயதுவரை

மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர் (கதகளி விழா அமைப்பாளர்களுள் ஒருவரும் பவித்ராவின் தோழியுமான ஜெயஶ்ரீ அவர்கள் சொன்னபடியே எங்கள் கதகளி அனுபவம் பற்றிய  செய்திக்கட்டுரை  நேற்றைய (07.08.2026) மலையாள மனோரமாவில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம்: அழகிய மணவாளன்)  மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம் மலப்புரம் மாவட்டம் வண்டூரில், மறைந்த கதகளி கலைஞர் நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரியின் நினைவேந்தல் விழா ஆகஸ்ட் 3 அன்று நிகழ்ந்தது. கதகளியை அறிவதற்கும், மொழி எல்லைக்கு அப்பால் கதகளியை  தங்கள் மாநிலத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேர்  அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.  ஈரோட்டில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பவித்ரா, அவரது கணவரும் தொழிலதிபருமான சௌந்தர்ராஜன், ஆசிரியை ஜி.ரஞ்சினியரசி,  பி.விக்ரம், மணவாளன், டி.ஏ.பாரி ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பே வண்டூர் வந்துவிட்டனர். கதகளி ஒப்பனையிலிருந்து தொடங்கி முக அபிநயம், கைமுத்திரை என கதகளியின் எல்லா அம்சங்களையும் கற்றுக்கொண்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒருங்கிணைப்...

பலூன் கவிதைகள் - சந்தோஷத்தின் வால்

பலூன் கவிதைகள் - ஒரு குறிப்பு சாதாரணமாக ஒரு குழந்தையின் மனதில் பலூனின் ஆயுட்காலம் என்பது எவ்வளவாக இருக்கும்? என் குழந்தைப் பருவத்தில் நான் முடிவிலி வரை என்றே நினைத்திருந்தேன். அப்போதெல்லாம் வருடாவருடம் நடைபெறும் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஒன்றே அந்த வருடத்திற்கான விளையாட்டுத் தளவாடங்களை வாங்கிக் கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. எனக்கும் அண்ணனுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய் ஒதுக்கப்படும். அதில் விரும்பியனவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அம்மாவுக்கு மட்டும் இருபது. வளையல் வாங்க வேண்டுமாம், வளையல் அம்மாவின் தனிக்கணக்கில் வராதாம். எனக்கு அந்தக் கணக்குகள் புரிந்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். சரியான நேரம் பார்த்து காண்போர் மனம் உருக கண்கலங்கி அடம்பிடித்தால் அம்மாவின் கணக்கிலிருந்து ஐந்து ரூபாயை நம் பக்கம் இழுத்துவிடலாம். எப்படி திட்டம்போட்டு வாங்கினாலும் நான் கடைசியாக வாங்க நினைத்த ‘ரேடியம்’ பந்திற்கு இரண்டு ரூபாய் இடிக்கும். கடைசியில் அப்பாதான் வந்து பஞ்சாயத்தை முடித்து வைப்பார். ‘இத்துணூண்டு பந்து எப்டியும் ரெண்டு நாள்ல தொலச்சிருவ.. பு...

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

  இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று.  வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம். அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவ...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

முழுக் கோடையும் ஒரே நாளில் - ரே பிராட்பரி

முழுக் கோடையும் ஒரே நாளில் ”தயாரா?” ”தயார்.”     ”இப்போதா?” “சீக்கிரமே.” ”விஞ்ஞானிகளுக்கு உண்மையாகத் தெரியுமா? இன்றைக்கு அது நிச்சயமாக நடக்குமா? நடந்துவிடுமா என்ன?” ”பார், பார்; நீயே உன் கண்களால் பார் !” குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்தனர், நிறைய ரோஜாக்களும் புதர் செடிகளும் ஒன்றுகலந்து மறைந்திருக்கும் சூரியனை எட்டிப் பார்க்க முயல்வதைப் போல. மழை பெய்தது. ஏழு வருடங்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆயிரமாயிரம் நாட்களாக ஒரு முனையிலிருந்து மறுமுனையை தனது முரசொலியாலும் வேகமான பாய்ச்சலாலும் இடைவிடாமல் நிரப்பிக் கொண்டிருக்கிறது மழை. இனிய பளிங்குபோன்ற மழைத்தாரைகளின் பொழிவும் புயல்காற்றின் மோதல்களும் பலமாக இருந்த அந்த தீவின்மேல் கடலின் பேரலைகள் வந்துசெல்கின்றன. மழையால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனங்கள் அங்குள்ளன. அவை மீண்டும் நசுக்கப்படுவதற்காக ஆயிரம்முறை வளர்கின்றன. இப்படியாக, வீனஸ் கிரகத்தில் வாழ்வு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது, விண்வெளிக்கலன் மூலம் இந்த மழைக் கிரகத்திற்கு வந்து நாகரிகத்தை உருவாக்கி, தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் ம...

சில்லிக் கொம்பன் - அஞ்சலி

சென்ற வெள்ளி சனி ஆகிய தினங்களில் பறவை பார்த்தலுக்காக பாலக்காட்டைச் சேர்ந்த பறவையியலாளர் கிருஷ்ணமூர்த்தி சாருடன் நெல்லியம்பதி சென்றிருந்தோம். பயணத்தின் போது இயல்பாகவே சில்லிக் கொம்பனை குறித்த பேச்சு வந்துகொண்டே இருந்தது. "அவன் ஒரு சாதுப் பிள்ளையாக்கும். ரோட்ல போகும்போது நீங்க தனி ஆளா நடுராத்திரில அவன் எதிர வந்துட்டா கூட விஷமிக்க ஒண்ணுமில்ல கேட்டீங்களா. இதுவர அவன் யாருக்கும் ஒரு தொந்திரவம் செஞ்சதில்ல. இங்க இருக்க எல்லாருக்கும் அவன அடையாளம் தெரியும். இந்த ஊரோட பிள்ளை அவன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி சார்.  அவர் மட்டுமின்றி இந்தப் பயணம் முழுக்க நெல்லியம்பதி ஊர்மக்கள், ஜீப் டிரைவர்கள் என சில்லிக் கொம்பனை குறித்து பேசிய அனைவரும் அவனை ஒருவித ப்ரியத்துடனே குறிப்பிட்டனர். அவன் அருகில்தான் இருக்கிறான், எப்போது வேண்டுமானாலும் அவனைப் பார்க்க வாய்ப்புள்ளது என்ற உணர்வு எங்களுக்கு பயணம் முழுக்க இருந்து கொண்டே இருந்தது. நேரில் பார்க்காவிட்டாலும் அவன் அருகாமையை உணர்ந்தபடி இருந்தோம். அவன் பெயருக்கு காரணமான நீண்ட மெலிந்த தந்தங்கள் எவ்வாறு இருக்கும் என ஒவ்வொருவரும் ஒருவாறு கற்பனை செய்து விவாதித்துக...