Skip to main content

இங்கிலாதிருத்தல் - மொழியாக்க அனுபவம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் 2019 ஊட்டி காவிய முகாமை ஒட்டி நான் யதேச்சையாக மொழியாக்கம் செய்து பார்த்தது டெட் சியாங்கின் ‘The Great Silence’ சிறுகதை. சொற்கள் ஒவ்வொன்றாக இணைந்து முதல் வாக்கியங்கள் உருக்கொண்டதன் நிறைவை இப்போதும் உணர்கிறேன். அவை சிறப்பாக அமையவேண்டும் என்பதுகூட அல்ல, வெறுமனே முழுமையான வடிவத்திற்குள் ஒன்றை கொண்டு வரும் செயல்பாடே அப்போது நிறைவளிப்பதாய் இருந்தது. அதைத் தொடர்ந்து மேலும் சில கதைகளை மொழியாக்கம் செய்ய வேண்டும் என எண்ணினேன். ஆனால் எனக்கே என்மீது ஐயமும் இருந்தது, செய்வேனா என்று. எனவே பத்து வாரங்களில் பத்து கதைகள் என இலக்கு நிர்ணயித்துக் கொண்டேன். இலக்கிய செயல்பாடுகளை பொருத்தவரை காலம் மற்றும் அளவு குறித்த தெளிவான இலக்குகளை கொண்டிருத்தல் மிகுந்த பயனளிப்பதை உணர்கிறேன் (Inspired By சுனீல் அண்ணனின் வாசிப்பு சவால்:)). தற்போது சற்று தாமதாகவேனும் பத்துக் கதைகளை முடிக்க இயன்றிருக்கிறது. இப்பதிவின் மூலம் அச்செயல்பாட்டில் அடைந்த அனுபவத்தை தொகுத்துக் கொள்ள முயல்கிறேன். மொழியாக்கம் அனுபவம் எனக்கு இரண்டு வகைகளில் பயனளித்தது. முதலாவதாக படைப்பை அனுகி அறியும் அனுபவம். இரண்டாவது மொழி அனுபவம்.

படைப்பில் வாழ்தல்:

மொழியாக்கம் செய்வது என்பது நிச்சயமாக ஒரு படைப்பை அனுக்கமாக அறிய உதவும். கவிதை, சிறுகதை, நாவல் என அனைத்து வடிவங்களுமே வாசகனிடம் அடிப்படையில் கோரி நிற்பது அவனது கவனத்தையே. ஒரு கதையை ஏற்பதற்கோ நிராகரிப்பதற்கோ முன்னர் அதன் அனைத்து வாசிப்பு சாத்தியங்களும், நுட்பங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதா என்பதே அது முன்வைக்கும் ஒரே நிபந்தனை. இதை சரியாக செய்து முடிக்க நாம் அக்கதைக்குள் ‘வாழும்’ அனுபவத்தை நிச்சயம் அடைந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அதற்கு முயன்றிருக்க வேண்டும். ஒரு நல்ல வாசகர் இயல்பாகவே இதை சிறப்பாக செய்துவிடலாம். ஆனால் சிறுகதைகளை பொறுத்தவரை அதன் அளவு காரணமாகவே சிலசமயம் அதற்கான போதிய கவனத்தையும் காலத்தையும் பெறாமல் போய்விடுகிறதோ என அவ்வப்போது எனக்கு தோன்றுவதுண்டு. பிடித்த கதைகளை மொழியாக்கம் செய்வதன் வாயிலாக நான் முதன்மையாகப் பெற்றது என்னவெனில், அக்கதையில் மேலும் சிறிதுகாலம் வாழும் அனுபவத்தையே. மொழியாக்கம் செய்கையில் மூலத்தின் ஒவ்வொரு சொல்லும் நம் கண்ணுக்கு படுகிறது, அனைத்துமே கவனம் பெறுகின்றன. காட்சிகள் மேலும் துலங்குகின்றன. வாசகனின் கோணத்திலிருந்து ஆசிரியனின் கோணத்திற்கு நம் பார்வை திரும்புகிறது. அதாவது வாசிக்கையில் ஒரு கதையை வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் அனுபவம் கிடைத்தது என்றால், மொழியாக்கம் செய்கையிலோ கதைக்குள் இருக்கும் அனுபவத்தைப் பெறுகிறோம். நிச்சயம் முந்தையதை காட்டிலும் செறிவான அனுபவமாகவே இதை உணர்கிறேன்.

இலக்கியம் வாசிக்கப்படுவதற்கு முதன்மையான காரணங்களுள் ஒன்றாக அடிக்கடி சொல்லப்படுவது ‘பிறிதொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தல்’. ஆங்கிலக் கதைகளின் மொழியாக்கம் என்பது ஒருவகையில் எனக்கு பரவசம் அளித்தது இந்த அம்சத்தினால்தான். முற்றிலுமாக இங்கிலாதிருத்தல். அதிலும் அறிவியல் புனைவு மற்றும் மிகைகற்பனை கதைகள் எனும்போது மேலும் புதிய உலகங்களுக்குச் செல்கிறோம். கற்பனையானவை என்பதாலேயே மேலும் செறிவானவை, சிலசமயம் மேலும் பொருள் கொண்டவை. மானுட உணர்வுகளே எங்கும் விசாரிக்கப்படுகின்றன, ஆனால் வேறொரு நிலத்தில், வேறொரு ஒளியில். நான் எதிர்பார்த்தது போலவே இக்கதைகள் என்னை நிகழ் உலகின் சலிப்பிலிருந்து மீட்டன. ’முழுக் கோடையும் ஒரே நாளில்’ , ‘நிலவின் தொலைவு’ போன்ற கதைகளை மொழியாக்கம் செய்த நாட்கள் மிகவும் இனியவை. வெளியே மே மாத வெயில் தகித்து கொண்டிருந்த போதும் உள்ளுக்குள் சூரியனுக்காக மனம் ஏங்கிக் கொண்டிருந்ததை ஒருபோதும் மறக்க இயலாது (All summer in a Day). இவை ஒருவகை என்றால் ‘முட்டாள் கிம்பெல்’ போன்ற கதைகள் அளித்த தரிசனம் மேலும் நிறைவளிப்பது. அக்கதை நிகழும் நிலமும் எனக்கு முற்றிலும் அன்னியமானதே. ஆனால் களங்கமின்மையின் மகத்துவத்தை அதன் விடுதலையை அப்படைப்பின் மூலம் அடைந்தேன்.


சொல்லின் விசை:

இரண்டாவதாக மொழி அனுபவத்தைக் குறித்து சொல்ல வேண்டும். இது ஒரு வாசகனாக நான் அதிகம் உணர்ந்திராதது. ஆனால் எதையேனும் கொஞ்சமாக எழுதுபவர்கள்கூட உணரக்கூடியது. சொற்களை சரியான வகையில் பொருள் கொள்வதும், உரிய சொற்களை தேடுவதும், புதிய சொற்களை கண்டடைவதும் என இதில் அனைத்துமே ஆர்வமூட்டுபவை. இருப்பினும் சில சமயங்களில் சவாலானதும் கூட. ஒரு சொல்லே கூட ஒருமணிநேரம் எடுத்துக் கொண்டுவிடும். ஒன்றை செய்து முடிப்பதன் நிறைவை அளிப்பதே இத்தகைய சவால்கள்தான். யோசித்துப் பார்க்கையில் சற்றேனும் சவால்மிகுந்த வேலைகளே நமக்கு நிறைவளிக்கின்றன, மற்ற வேலைகளை வெறுமனே நாம் கடந்து செல்கிறோம் அவ்வளவுதான். சொற்றொடர்களை அமைப்பது ஓர் இன்பமெனில் அதை பிழை நோக்குவதும் மேம்படுவதும் மேலுமொரு உற்சாகமான செயல். ஒவ்வொருநாள் பிரதியை எடுத்துப் பார்க்கையிலும் திருத்தங்கள் கண்ணுக்கு தென்பட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு பிழையையும் சரி செய்யும்போதோ அல்லது உரிய மாற்றுசொல் அமைக்கும் போதோ பிரதி மேம்படுவதாகத் தோன்றும். திருத்தங்கள் முடிவில்லாதவை என்பதால் பிரதியும் முடிவில்லாமல் மேம்படுவதாய் உளமயக்கு எழும். முடிவிலாமல் மேம்படும் பிரதி எத்தனை சிறப்பாக இருக்க வேண்டும்! (முடிவிலாத பிழைகள் கொண்ட பிரதியே முடிவிலாமல் மேம்பட இயலும் என்ற தர்க்கத்தை ஒதுக்கி வைப்போமாக).

தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் வாசிக்கையில் உணர்ச்சிகரமான நீண்ட தன்னுரைகளும் விவாதங்களும் சுசீலா அம்மாவின் .மொழியாக்கத்தில் எவ்வாறு சாத்தியமாயின எனும் வியப்பை ஒவ்வொரு முறையும் அடைகிறேன். அத்தகைய பெரும் மொழியாக்க சாதனைகள் தற்போது எனக்கு மலைப்பையே அளிக்கின்றன. நான் செய்தவை எளிய சிறுகதைகள், அவற்றையும் தற்போது திரும்பிப் பார்க்கையில் எனக்கே சில திருத்தங்கள் தென்படுகின்றன. மொழி அனுபவத்தை பொருத்தவரை இன்னும் நான் கற்க வேண்டியதும் பயிற்சி எடுக்க வேண்டியதும் நிறைய இருப்பதை உணர்கிறேன். எவ்வாறிருபினும் மொழியில் திளைப்பதன் இன்பம் அலாதியானது. மொழியாக்க அனுபவத்திற்கு பின் எனக்கு ஏற்பட்ட புரிதல் ஒன்றுண்டு. ஒரு படைப்பாளியை செலுத்துவது படைப்பின் விசையே என நான் நம்பியிருந்தேன், தற்போது அதுமட்டுமல்ல எனத் தோன்றுகிறது. படைப்புக்கு நிகராகவே அதை சொல்லாக்குவதில் அடையும் மொழி அனுபவமும் இணையான விசையாக இருக்க வேண்டும்.

துணை நின்றவர்கள்:

’மாப்ள, நமக்கு கொண்டாட்டமா இருக்றத செஞ்சுகிட்டே இருக்கனும்.. ஒருநாள் அது மத்தவங்களுக்கு கொண்டாட்டமா மாறும்’ ஜெ தளத்தில் வெளியான ஒவ்வொரு கதையின் போதும் காலை ஒன்பது மணிக்கே போன் செய்து இம்மாதிரி உற்சாகமான வரிகளை அள்ளி வீசுபவர் நமது கோபி அண்ணன் ‘உயிர் நலத்தை நாடும்’ – சக்திவேல். துவக்க கதைகளுக்குப் பின் இச்செயல்பாட்டை தொடர்ந்தமைக்கு இவர் ஒரு முக்கிய காரணம். ‘மாப்ள.. விட்றாத மாப்ள.. பத்தையும் செஞ்சுடு’ என்றுதான் எப்போதும் பேச ஆரம்பிப்பார். கிட்டத்தட்ட இதுவரை வெளிவந்துள்ள அனைத்து கதைகள் குறித்துமே அவராக அழைத்துப் பேசியுள்ளார். தன்னைக் கவர்ந்த இடங்கள், விமர்சனங்கள் என இரண்டையுமே விரிவாகக் குறிப்பிடுவார். முதலிரு கதைகளுக்குப் பின் முதல் பிரதியை மணவாளனுடன் சேர்த்து இவருக்கும் அனுப்ப ஆரம்பித்தேன். அனுப்பிய நான்கு மணிநேரத்திற்குள் அவர் பரிந்துரைக்கும் திருத்தங்களை விரிவாக பிரதியிலேயே குறிப்பிட்டு அனுப்பிவிடுவார். எவ்வித எதிர்பார்ப்புமின்றி ரசனை மற்றும் இலக்கியத்தின் பொருட்டு இவர் காட்டும் உற்சாகம் மிகுந்த உத்வேகமளிப்பது.

அனைத்து மொழியாக்கங்களுக்கும் தவறாமல் அழைத்துப் பேசும் இன்னொரு நபர் அந்தியூர் மணி அண்ணன். கதை குறித்த தன் வாசிப்பை பகிர்ந்து கொள்வார். ஒருமுறை மொழியாக்கம் குறித்து ”அப்டியே தமிழ்ல வாசிக்கிற மாதிரியே இருந்துச்சு தம்பி” என்றார். ‘அண்ணா தமிழ்ல தான்னா மொழி பெயர்த்திருக்கேன்…” , “அதான் தம்பி தமிழ்ல வாசிச்சா எப்டி இருக்குமோ அப்டி” என்றார். சரி ரொம்ப பேசினால் அடுத்த கதையையும் தமிழிலேயே மொழிபெயர்க்க சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஒருவழியாக சமாளித்தேன். மணவாளன் அனைத்திலும் உடனிருப்பவன். அனைத்து கதைகளிலுமே பிழைநோக்கி செம்மை செய்ததில் அவன் பங்குண்டு. தினமும் மாலை நடையின்போது அவனுடன் மொழியாக்கத்திற்கான சொற்களை விவாதிப்பது ஒரு நல்ல பொழுதுபோக்கு (கிராமபோன் கிராமபோனாகவே இருக்கட்டுமா அல்லது இசைத்தட்டுப் பெட்டியா (அய்யே)). ஈரோடு கிருஷ்ணன் சார் தளத்தில் வந்த அனைத்து கதைகளையும் தவறாமல் படித்து விடுவார். வாரம் ஒருமுறையேனும் சந்திக்க நேர்கையில் கடைசியாக படித்த கதை குறித்த தன் கருத்தை சொல்வார். குறிப்பிடத்தகுந்த கதையெனில் அதுகுறித்து பேசும் முதல்நபர் அவராகத்தான் இருக்கும். அதேபோல் கதை மற்றும் மொழியாக்க சொற்தேர்வு குறித்த விமர்சனங்களையும் அவர் சொல்லத் தவறியதில்லை. பொதுவாக மொழியாக்கம் குறித்து நான் உரையாடும் இன்னொரு நபர் கோவை தாமரைக்கண்ணன். அவரும் இதே காலகட்டத்தில் ஓர் ஆங்கில நூலை தொகுத்து எழுத முயற்சித்து தற்போது கிட்டத்தட்ட முழுமையான மொழியாக்கமாகவே செய்து வருகிறார். ‘Philosophy of Science’ என்ற ஆக்ஸ்போர்டு வெளியீட்டு நூல். விரைவில் அவர் தன் மொழியாக்கத்தை பகிர்வார் என எதிர்பார்க்கலாம்.

இதுபோக எப்போதும் என் நன்றிக்கும் வணக்கத்திற்கு உரியவர் கதைகளை தன் தளத்தில் வெளியிட்ட ஆசிரியர் ஜெ. எம். எஸ். அவர்களின் மொழியாக்கம் தொடர்பாக ‘கனவுகளின் மாற்றுமதிப்பு’ என்ற கட்டுரையில் அவர் எழுதிய வரிகளே இச்செயல்பாட்டின் பெறுமதியை எனக்கு காட்டின,

//ஆம், மொழியாக்கம் என்ற செயல் ஒரு மகத்தான விஷயத்தை அடையாளம் காட்டுகிறது. மனிதகுலம் என்பது ஒற்றைப்பேரகம் கொண்டது என்பதை! //

அந்த ஒற்றைப்பேரகத்தை கண்டுகொள்வதன் ஆச்சரியத்தை மீண்டும் மீண்டும் அடைய வேண்டும். மேலும் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆசிரியர் ஜெயமோகனுக்கு வணக்கம். சொல்லின் தேவிக்கு வணக்கம்.

***

அனைத்து கதைகளுக்குமான சுட்டி இங்கே.


Comments

Popular posts from this blog

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

நாகரிகத்திலிருந்து தப்பித்தல் நாகரிகத்திலிருந்து தப்பிப்பது என்ற எனது செயல்திட்டத்தை அச்சொல்லின் பொருளைக் கற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயே தொடங்கிவிட்டேன். ஆனால் பதினெட்டு வயதுவரை

மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம்

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர் (கதகளி விழா அமைப்பாளர்களுள் ஒருவரும் பவித்ராவின் தோழியுமான ஜெயஶ்ரீ அவர்கள் சொன்னபடியே எங்கள் கதகளி அனுபவம் பற்றிய  செய்திக்கட்டுரை  நேற்றைய (07.08.2026) மலையாள மனோரமாவில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம்: அழகிய மணவாளன்)  மொழிஎல்லையை கடந்த கதகளி ஆர்வம் மலப்புரம் மாவட்டம் வண்டூரில், மறைந்த கதகளி கலைஞர் நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரியின் நினைவேந்தல் விழா ஆகஸ்ட் 3 அன்று நிகழ்ந்தது. கதகளியை அறிவதற்கும், மொழி எல்லைக்கு அப்பால் கதகளியை  தங்கள் மாநிலத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு பேர்  அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.  ஈரோட்டில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பவித்ரா, அவரது கணவரும் தொழிலதிபருமான சௌந்தர்ராஜன், ஆசிரியை ஜி.ரஞ்சினியரசி,  பி.விக்ரம், மணவாளன், டி.ஏ.பாரி ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பே வண்டூர் வந்துவிட்டனர். கதகளி ஒப்பனையிலிருந்து தொடங்கி முக அபிநயம், கைமுத்திரை என கதகளியின் எல்லா அம்சங்களையும் கற்றுக்கொண்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒருங்கிணைப்...

பலூன் கவிதைகள் - சந்தோஷத்தின் வால்

பலூன் கவிதைகள் - ஒரு குறிப்பு சாதாரணமாக ஒரு குழந்தையின் மனதில் பலூனின் ஆயுட்காலம் என்பது எவ்வளவாக இருக்கும்? என் குழந்தைப் பருவத்தில் நான் முடிவிலி வரை என்றே நினைத்திருந்தேன். அப்போதெல்லாம் வருடாவருடம் நடைபெறும் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஒன்றே அந்த வருடத்திற்கான விளையாட்டுத் தளவாடங்களை வாங்கிக் கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. எனக்கும் அண்ணனுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய் ஒதுக்கப்படும். அதில் விரும்பியனவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ளும் சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அம்மாவுக்கு மட்டும் இருபது. வளையல் வாங்க வேண்டுமாம், வளையல் அம்மாவின் தனிக்கணக்கில் வராதாம். எனக்கு அந்தக் கணக்குகள் புரிந்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். சரியான நேரம் பார்த்து காண்போர் மனம் உருக கண்கலங்கி அடம்பிடித்தால் அம்மாவின் கணக்கிலிருந்து ஐந்து ரூபாயை நம் பக்கம் இழுத்துவிடலாம். எப்படி திட்டம்போட்டு வாங்கினாலும் நான் கடைசியாக வாங்க நினைத்த ‘ரேடியம்’ பந்திற்கு இரண்டு ரூபாய் இடிக்கும். கடைசியில் அப்பாதான் வந்து பஞ்சாயத்தை முடித்து வைப்பார். ‘இத்துணூண்டு பந்து எப்டியும் ரெண்டு நாள்ல தொலச்சிருவ.. பு...

ஆடிப்பெருக்கில் வந்த மாமலர்

  இந்த ஆண்டு செல்ல நினைத்திருந்த சில பருவமழை பயணங்கள் போக முடியாமல் தள்ளிப் போனதும் நல்லதாய் போயிற்று.  வழக்கமாக ஜூன் முதல் வாரம் கேரளத்தில் தொடங்கியிருக்க வேண்டிய பருவமழை தாமதமாக தற்போது ஆகஸ்டில்தான் அதிகம் பெய்வதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதுவும் இங்கு ஈரோட்டில் மழை அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ஞாயிறு கல்யாண செளகந்திகம் கதகளி காண கேரளத்தில் வண்டூர் ஊருக்கு செல்ல முடிவெடுத்தும் அது மழைப்பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்கியது. எனவே நானும் ரஞ்சனியும் சனிக்கிழமையே கிளம்பி ஆணைக்கட்டி அட்டப்பாடி வழியாக அமைதி பள்ளத்தாக்கு சென்றோம். அமைதி பள்ளத்தாக்கில் வனத்துறை சார்பாக இயக்கப்படும் ஜீப் சவாரி உண்டு. மதியம் ஒருமணிக்குள் அங்கு செல்ல வேண்டும். அடர் வனத்திற்குள் செல்லும் சவாரி என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரம் ஆகும் என தொலைபேசியில் விசாரிக்கையில் வன அதிகாரி சொல்லியிருந்தார். சனி மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் சென்று சேர்ந்திருந்தோம். ஆனால் பாலக்காடு மாவட்டம் முழுக்க மழை அதிகம் இருக்கும் என வானிலை எச்சரிக்கை வந்ததால் சனி ஞாயிறு இரண்டு நாட்களும் ஜீப் சவ...

அயிகிரி நந்தினி - தமிழில்

சில தினங்களுக்கு முன்பு குப்பம் பல்கலை பேராசிரியர் நண்பர் கு. பத்மநாபன் சார் “ஆதி சங்கரர் அருளிய ஐகிரி நந்தினி பாடல் அழகிய தமிழ் வடிவில்” என்ற செய்தியுடன் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். எனக்கு இச்செய்தியை பார்த்த பிறகுதான் ஒருவிஷயம் மண்டையில் உறைந்தது. அப்படியானால் இத்தனை நாளும் நம் செவியில் விழும் ஐகிரி நந்தினி பாடல் தமிழில் ஒலிக்கப்படவில்லை. முதல் சில வரிகளை மனதில் ஓட்டிப் பார்க்கும் போதே புரிந்துவிட்டது, ஆம் துர்க்கையை போற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரம். ஆனால் ஐகிரி நந்தினி பாடலும் அதன் மெட்டும் அந்த அளவிற்கு தமிழ் மனதுடன் ஒன்றியிருப்பதால் அதன் மொழிகுறித்த கேள்வியே இதுநாள்வரை மனதில் எழாமல் போய்விட்டது. இச்செய்தியை தொடர்ந்து ஆதி சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்திர பாடல்களின் பட்டியலை தேடியபோது தான் எனக்கு உண்மையான ஆச்சர்யமே காத்திருந்தது. தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைக்கும் அத்வைதத்தின் முதன்மை ஆசிரியரான ஆதிசங்கரரே அழகியல் சார்ந்த ‘சௌந்தர்ய லஹரியை’ இயற்றியவரும் கூட என்பதே இதுவரை என் மனதில் பதிந்திருந்தது. சக்தி ரூபமாக இங்கு நிகழ்பவளை பாடும் அழகிய நூறு பாடல்களைக் கொண்டது சௌந்தர்ய லஹரி ஸ்தோத...

முழுக் கோடையும் ஒரே நாளில் - ரே பிராட்பரி

முழுக் கோடையும் ஒரே நாளில் ”தயாரா?” ”தயார்.”     ”இப்போதா?” “சீக்கிரமே.” ”விஞ்ஞானிகளுக்கு உண்மையாகத் தெரியுமா? இன்றைக்கு அது நிச்சயமாக நடக்குமா? நடந்துவிடுமா என்ன?” ”பார், பார்; நீயே உன் கண்களால் பார் !” குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்தனர், நிறைய ரோஜாக்களும் புதர் செடிகளும் ஒன்றுகலந்து மறைந்திருக்கும் சூரியனை எட்டிப் பார்க்க முயல்வதைப் போல. மழை பெய்தது. ஏழு வருடங்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆயிரமாயிரம் நாட்களாக ஒரு முனையிலிருந்து மறுமுனையை தனது முரசொலியாலும் வேகமான பாய்ச்சலாலும் இடைவிடாமல் நிரப்பிக் கொண்டிருக்கிறது மழை. இனிய பளிங்குபோன்ற மழைத்தாரைகளின் பொழிவும் புயல்காற்றின் மோதல்களும் பலமாக இருந்த அந்த தீவின்மேல் கடலின் பேரலைகள் வந்துசெல்கின்றன. மழையால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனங்கள் அங்குள்ளன. அவை மீண்டும் நசுக்கப்படுவதற்காக ஆயிரம்முறை வளர்கின்றன. இப்படியாக, வீனஸ் கிரகத்தில் வாழ்வு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது, விண்வெளிக்கலன் மூலம் இந்த மழைக் கிரகத்திற்கு வந்து நாகரிகத்தை உருவாக்கி, தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் ம...

சில்லிக் கொம்பன் - அஞ்சலி

சென்ற வெள்ளி சனி ஆகிய தினங்களில் பறவை பார்த்தலுக்காக பாலக்காட்டைச் சேர்ந்த பறவையியலாளர் கிருஷ்ணமூர்த்தி சாருடன் நெல்லியம்பதி சென்றிருந்தோம். பயணத்தின் போது இயல்பாகவே சில்லிக் கொம்பனை குறித்த பேச்சு வந்துகொண்டே இருந்தது. "அவன் ஒரு சாதுப் பிள்ளையாக்கும். ரோட்ல போகும்போது நீங்க தனி ஆளா நடுராத்திரில அவன் எதிர வந்துட்டா கூட விஷமிக்க ஒண்ணுமில்ல கேட்டீங்களா. இதுவர அவன் யாருக்கும் ஒரு தொந்திரவம் செஞ்சதில்ல. இங்க இருக்க எல்லாருக்கும் அவன அடையாளம் தெரியும். இந்த ஊரோட பிள்ளை அவன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி சார்.  அவர் மட்டுமின்றி இந்தப் பயணம் முழுக்க நெல்லியம்பதி ஊர்மக்கள், ஜீப் டிரைவர்கள் என சில்லிக் கொம்பனை குறித்து பேசிய அனைவரும் அவனை ஒருவித ப்ரியத்துடனே குறிப்பிட்டனர். அவன் அருகில்தான் இருக்கிறான், எப்போது வேண்டுமானாலும் அவனைப் பார்க்க வாய்ப்புள்ளது என்ற உணர்வு எங்களுக்கு பயணம் முழுக்க இருந்து கொண்டே இருந்தது. நேரில் பார்க்காவிட்டாலும் அவன் அருகாமையை உணர்ந்தபடி இருந்தோம். அவன் பெயருக்கு காரணமான நீண்ட மெலிந்த தந்தங்கள் எவ்வாறு இருக்கும் என ஒவ்வொருவரும் ஒருவாறு கற்பனை செய்து விவாதித்துக...