Skip to main content

இங்கிலாதிருத்தல் - மொழியாக்க அனுபவம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் 2019 ஊட்டி காவிய முகாமை ஒட்டி நான் யதேச்சையாக மொழியாக்கம் செய்து பார்த்தது டெட் சியாங்கின் ‘The Great Silence’ சிறுகதை. சொற்கள் ஒவ்வொன்றாக இணைந்து முதல் வாக்கியங்கள் உருக்கொண்டதன் நிறைவை இப்போதும் உணர்கிறேன். அவை சிறப்பாக அமையவேண்டும் என்பதுகூட அல்ல, வெறுமனே முழுமையான வடிவத்திற்குள் ஒன்றை கொண்டு வரும் செயல்பாடே அப்போது நிறைவளிப்பதாய் இருந்தது. அதைத் தொடர்ந்து மேலும் சில கதைகளை மொழியாக்கம் செய்ய வேண்டும் என எண்ணினேன். ஆனால் எனக்கே என்மீது ஐயமும் இருந்தது, செய்வேனா என்று. எனவே பத்து வாரங்களில் பத்து கதைகள் என இலக்கு நிர்ணயித்துக் கொண்டேன். இலக்கிய செயல்பாடுகளை பொருத்தவரை காலம் மற்றும் அளவு குறித்த தெளிவான இலக்குகளை கொண்டிருத்தல் மிகுந்த பயனளிப்பதை உணர்கிறேன் (Inspired By சுனீல் அண்ணனின் வாசிப்பு சவால்:)). தற்போது சற்று தாமதாகவேனும் பத்துக் கதைகளை முடிக்க இயன்றிருக்கிறது. இப்பதிவின் மூலம் அச்செயல்பாட்டில் அடைந்த அனுபவத்தை தொகுத்துக் கொள்ள முயல்கிறேன். மொழியாக்கம் அனுபவம் எனக்கு இரண்டு வகைகளில் பயனளித்தது. முதலாவதாக படைப்பை அனுகி அறியும் அனுபவம். இரண்டாவது மொழி அனுபவம்.

படைப்பில் வாழ்தல்:

மொழியாக்கம் செய்வது என்பது நிச்சயமாக ஒரு படைப்பை அனுக்கமாக அறிய உதவும். கவிதை, சிறுகதை, நாவல் என அனைத்து வடிவங்களுமே வாசகனிடம் அடிப்படையில் கோரி நிற்பது அவனது கவனத்தையே. ஒரு கதையை ஏற்பதற்கோ நிராகரிப்பதற்கோ முன்னர் அதன் அனைத்து வாசிப்பு சாத்தியங்களும், நுட்பங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதா என்பதே அது முன்வைக்கும் ஒரே நிபந்தனை. இதை சரியாக செய்து முடிக்க நாம் அக்கதைக்குள் ‘வாழும்’ அனுபவத்தை நிச்சயம் அடைந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அதற்கு முயன்றிருக்க வேண்டும். ஒரு நல்ல வாசகர் இயல்பாகவே இதை சிறப்பாக செய்துவிடலாம். ஆனால் சிறுகதைகளை பொறுத்தவரை அதன் அளவு காரணமாகவே சிலசமயம் அதற்கான போதிய கவனத்தையும் காலத்தையும் பெறாமல் போய்விடுகிறதோ என அவ்வப்போது எனக்கு தோன்றுவதுண்டு. பிடித்த கதைகளை மொழியாக்கம் செய்வதன் வாயிலாக நான் முதன்மையாகப் பெற்றது என்னவெனில், அக்கதையில் மேலும் சிறிதுகாலம் வாழும் அனுபவத்தையே. மொழியாக்கம் செய்கையில் மூலத்தின் ஒவ்வொரு சொல்லும் நம் கண்ணுக்கு படுகிறது, அனைத்துமே கவனம் பெறுகின்றன. காட்சிகள் மேலும் துலங்குகின்றன. வாசகனின் கோணத்திலிருந்து ஆசிரியனின் கோணத்திற்கு நம் பார்வை திரும்புகிறது. அதாவது வாசிக்கையில் ஒரு கதையை வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் அனுபவம் கிடைத்தது என்றால், மொழியாக்கம் செய்கையிலோ கதைக்குள் இருக்கும் அனுபவத்தைப் பெறுகிறோம். நிச்சயம் முந்தையதை காட்டிலும் செறிவான அனுபவமாகவே இதை உணர்கிறேன்.

இலக்கியம் வாசிக்கப்படுவதற்கு முதன்மையான காரணங்களுள் ஒன்றாக அடிக்கடி சொல்லப்படுவது ‘பிறிதொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தல்’. ஆங்கிலக் கதைகளின் மொழியாக்கம் என்பது ஒருவகையில் எனக்கு பரவசம் அளித்தது இந்த அம்சத்தினால்தான். முற்றிலுமாக இங்கிலாதிருத்தல். அதிலும் அறிவியல் புனைவு மற்றும் மிகைகற்பனை கதைகள் எனும்போது மேலும் புதிய உலகங்களுக்குச் செல்கிறோம். கற்பனையானவை என்பதாலேயே மேலும் செறிவானவை, சிலசமயம் மேலும் பொருள் கொண்டவை. மானுட உணர்வுகளே எங்கும் விசாரிக்கப்படுகின்றன, ஆனால் வேறொரு நிலத்தில், வேறொரு ஒளியில். நான் எதிர்பார்த்தது போலவே இக்கதைகள் என்னை நிகழ் உலகின் சலிப்பிலிருந்து மீட்டன. ’முழுக் கோடையும் ஒரே நாளில்’ , ‘நிலவின் தொலைவு’ போன்ற கதைகளை மொழியாக்கம் செய்த நாட்கள் மிகவும் இனியவை. வெளியே மே மாத வெயில் தகித்து கொண்டிருந்த போதும் உள்ளுக்குள் சூரியனுக்காக மனம் ஏங்கிக் கொண்டிருந்ததை ஒருபோதும் மறக்க இயலாது (All summer in a Day). இவை ஒருவகை என்றால் ‘முட்டாள் கிம்பெல்’ போன்ற கதைகள் அளித்த தரிசனம் மேலும் நிறைவளிப்பது. அக்கதை நிகழும் நிலமும் எனக்கு முற்றிலும் அன்னியமானதே. ஆனால் களங்கமின்மையின் மகத்துவத்தை அதன் விடுதலையை அப்படைப்பின் மூலம் அடைந்தேன்.


சொல்லின் விசை:

இரண்டாவதாக மொழி அனுபவத்தைக் குறித்து சொல்ல வேண்டும். இது ஒரு வாசகனாக நான் அதிகம் உணர்ந்திராதது. ஆனால் எதையேனும் கொஞ்சமாக எழுதுபவர்கள்கூட உணரக்கூடியது. சொற்களை சரியான வகையில் பொருள் கொள்வதும், உரிய சொற்களை தேடுவதும், புதிய சொற்களை கண்டடைவதும் என இதில் அனைத்துமே ஆர்வமூட்டுபவை. இருப்பினும் சில சமயங்களில் சவாலானதும் கூட. ஒரு சொல்லே கூட ஒருமணிநேரம் எடுத்துக் கொண்டுவிடும். ஒன்றை செய்து முடிப்பதன் நிறைவை அளிப்பதே இத்தகைய சவால்கள்தான். யோசித்துப் பார்க்கையில் சற்றேனும் சவால்மிகுந்த வேலைகளே நமக்கு நிறைவளிக்கின்றன, மற்ற வேலைகளை வெறுமனே நாம் கடந்து செல்கிறோம் அவ்வளவுதான். சொற்றொடர்களை அமைப்பது ஓர் இன்பமெனில் அதை பிழை நோக்குவதும் மேம்படுவதும் மேலுமொரு உற்சாகமான செயல். ஒவ்வொருநாள் பிரதியை எடுத்துப் பார்க்கையிலும் திருத்தங்கள் கண்ணுக்கு தென்பட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு பிழையையும் சரி செய்யும்போதோ அல்லது உரிய மாற்றுசொல் அமைக்கும் போதோ பிரதி மேம்படுவதாகத் தோன்றும். திருத்தங்கள் முடிவில்லாதவை என்பதால் பிரதியும் முடிவில்லாமல் மேம்படுவதாய் உளமயக்கு எழும். முடிவிலாமல் மேம்படும் பிரதி எத்தனை சிறப்பாக இருக்க வேண்டும்! (முடிவிலாத பிழைகள் கொண்ட பிரதியே முடிவிலாமல் மேம்பட இயலும் என்ற தர்க்கத்தை ஒதுக்கி வைப்போமாக).

தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் வாசிக்கையில் உணர்ச்சிகரமான நீண்ட தன்னுரைகளும் விவாதங்களும் சுசீலா அம்மாவின் .மொழியாக்கத்தில் எவ்வாறு சாத்தியமாயின எனும் வியப்பை ஒவ்வொரு முறையும் அடைகிறேன். அத்தகைய பெரும் மொழியாக்க சாதனைகள் தற்போது எனக்கு மலைப்பையே அளிக்கின்றன. நான் செய்தவை எளிய சிறுகதைகள், அவற்றையும் தற்போது திரும்பிப் பார்க்கையில் எனக்கே சில திருத்தங்கள் தென்படுகின்றன. மொழி அனுபவத்தை பொருத்தவரை இன்னும் நான் கற்க வேண்டியதும் பயிற்சி எடுக்க வேண்டியதும் நிறைய இருப்பதை உணர்கிறேன். எவ்வாறிருபினும் மொழியில் திளைப்பதன் இன்பம் அலாதியானது. மொழியாக்க அனுபவத்திற்கு பின் எனக்கு ஏற்பட்ட புரிதல் ஒன்றுண்டு. ஒரு படைப்பாளியை செலுத்துவது படைப்பின் விசையே என நான் நம்பியிருந்தேன், தற்போது அதுமட்டுமல்ல எனத் தோன்றுகிறது. படைப்புக்கு நிகராகவே அதை சொல்லாக்குவதில் அடையும் மொழி அனுபவமும் இணையான விசையாக இருக்க வேண்டும்.

துணை நின்றவர்கள்:

’மாப்ள, நமக்கு கொண்டாட்டமா இருக்றத செஞ்சுகிட்டே இருக்கனும்.. ஒருநாள் அது மத்தவங்களுக்கு கொண்டாட்டமா மாறும்’ ஜெ தளத்தில் வெளியான ஒவ்வொரு கதையின் போதும் காலை ஒன்பது மணிக்கே போன் செய்து இம்மாதிரி உற்சாகமான வரிகளை அள்ளி வீசுபவர் நமது கோபி அண்ணன் ‘உயிர் நலத்தை நாடும்’ – சக்திவேல். துவக்க கதைகளுக்குப் பின் இச்செயல்பாட்டை தொடர்ந்தமைக்கு இவர் ஒரு முக்கிய காரணம். ‘மாப்ள.. விட்றாத மாப்ள.. பத்தையும் செஞ்சுடு’ என்றுதான் எப்போதும் பேச ஆரம்பிப்பார். கிட்டத்தட்ட இதுவரை வெளிவந்துள்ள அனைத்து கதைகள் குறித்துமே அவராக அழைத்துப் பேசியுள்ளார். தன்னைக் கவர்ந்த இடங்கள், விமர்சனங்கள் என இரண்டையுமே விரிவாகக் குறிப்பிடுவார். முதலிரு கதைகளுக்குப் பின் முதல் பிரதியை மணவாளனுடன் சேர்த்து இவருக்கும் அனுப்ப ஆரம்பித்தேன். அனுப்பிய நான்கு மணிநேரத்திற்குள் அவர் பரிந்துரைக்கும் திருத்தங்களை விரிவாக பிரதியிலேயே குறிப்பிட்டு அனுப்பிவிடுவார். எவ்வித எதிர்பார்ப்புமின்றி ரசனை மற்றும் இலக்கியத்தின் பொருட்டு இவர் காட்டும் உற்சாகம் மிகுந்த உத்வேகமளிப்பது.

அனைத்து மொழியாக்கங்களுக்கும் தவறாமல் அழைத்துப் பேசும் இன்னொரு நபர் அந்தியூர் மணி அண்ணன். கதை குறித்த தன் வாசிப்பை பகிர்ந்து கொள்வார். ஒருமுறை மொழியாக்கம் குறித்து ”அப்டியே தமிழ்ல வாசிக்கிற மாதிரியே இருந்துச்சு தம்பி” என்றார். ‘அண்ணா தமிழ்ல தான்னா மொழி பெயர்த்திருக்கேன்…” , “அதான் தம்பி தமிழ்ல வாசிச்சா எப்டி இருக்குமோ அப்டி” என்றார். சரி ரொம்ப பேசினால் அடுத்த கதையையும் தமிழிலேயே மொழிபெயர்க்க சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஒருவழியாக சமாளித்தேன். மணவாளன் அனைத்திலும் உடனிருப்பவன். அனைத்து கதைகளிலுமே பிழைநோக்கி செம்மை செய்ததில் அவன் பங்குண்டு. தினமும் மாலை நடையின்போது அவனுடன் மொழியாக்கத்திற்கான சொற்களை விவாதிப்பது ஒரு நல்ல பொழுதுபோக்கு (கிராமபோன் கிராமபோனாகவே இருக்கட்டுமா அல்லது இசைத்தட்டுப் பெட்டியா (அய்யே)). ஈரோடு கிருஷ்ணன் சார் தளத்தில் வந்த அனைத்து கதைகளையும் தவறாமல் படித்து விடுவார். வாரம் ஒருமுறையேனும் சந்திக்க நேர்கையில் கடைசியாக படித்த கதை குறித்த தன் கருத்தை சொல்வார். குறிப்பிடத்தகுந்த கதையெனில் அதுகுறித்து பேசும் முதல்நபர் அவராகத்தான் இருக்கும். அதேபோல் கதை மற்றும் மொழியாக்க சொற்தேர்வு குறித்த விமர்சனங்களையும் அவர் சொல்லத் தவறியதில்லை. பொதுவாக மொழியாக்கம் குறித்து நான் உரையாடும் இன்னொரு நபர் கோவை தாமரைக்கண்ணன். அவரும் இதே காலகட்டத்தில் ஓர் ஆங்கில நூலை தொகுத்து எழுத முயற்சித்து தற்போது கிட்டத்தட்ட முழுமையான மொழியாக்கமாகவே செய்து வருகிறார். ‘Philosophy of Science’ என்ற ஆக்ஸ்போர்டு வெளியீட்டு நூல். விரைவில் அவர் தன் மொழியாக்கத்தை பகிர்வார் என எதிர்பார்க்கலாம்.

இதுபோக எப்போதும் என் நன்றிக்கும் வணக்கத்திற்கு உரியவர் கதைகளை தன் தளத்தில் வெளியிட்ட ஆசிரியர் ஜெ. எம். எஸ். அவர்களின் மொழியாக்கம் தொடர்பாக ‘கனவுகளின் மாற்றுமதிப்பு’ என்ற கட்டுரையில் அவர் எழுதிய வரிகளே இச்செயல்பாட்டின் பெறுமதியை எனக்கு காட்டின,

//ஆம், மொழியாக்கம் என்ற செயல் ஒரு மகத்தான விஷயத்தை அடையாளம் காட்டுகிறது. மனிதகுலம் என்பது ஒற்றைப்பேரகம் கொண்டது என்பதை! //

அந்த ஒற்றைப்பேரகத்தை கண்டுகொள்வதன் ஆச்சரியத்தை மீண்டும் மீண்டும் அடைய வேண்டும். மேலும் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆசிரியர் ஜெயமோகனுக்கு வணக்கம். சொல்லின் தேவிக்கு வணக்கம்.

***

அனைத்து கதைகளுக்குமான சுட்டி இங்கே.


Comments

Popular posts from this blog

நீலக்குறுநிலவு

"இப்ப ஒரு தவிப்புக் குரல் கேக்குதில்லையா.. இத கவனிச்சு பாருங்க, கொஞ்சம் கொஞ்சமா இந்தக் குரலோட ஸ்ருதி ஏறிட்டே போகும். அதுக்கப்றம் ஒரே சொல், இல்லயில்ல ஒரு இரட்டை சொல் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கும், சிலப்பம் நாள் முழுக்கக் கூட கேக்குறதுண்டு. குறிப்பா இரவு நேரத்துல கேக்க ஆரம்பிச்சா அப்றம் நிக்காது. நேத்து நைட் எங்க கிணத்துக்குடில் பக்கம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. இது இப்டி பித்து பிடிச்ச மாதிரி ராத்திரி முழுக்க கத்திட்டே இருக்குறதால இதுக்கு Brain fever Bird ன்னு பேரு" என்று சுசித்ரா அக்காவிடம் நித்யவனத்தின் லைப்ரரி ஹால் வாசலில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். கோடை காலம் ஆதலால் விடியற்காலையின் எஞ்சியிருந்த குளிரும் விரைவாக அகன்று நன்றாக வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. "ஓ இன்ட்ரெஸ்டிங் நேம்", சுசித்ரா அக்கா சிறிது நேரம் செவிகூர்ந்தார், "ஆமா ரொம்ப தொந்திரவான குரல்தான். மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் ஒரு அழைப்பு அல்லது கட்டளையிடப்படும் ஒரு ஆணை மாதிரி கேக்குதில்லையா" "ஆமாக்கா. சரியா சொன்னீங்க. இந்தக் குரல்ல இருக்குறது அழைப்புக்கான தவிப்பா இல்ல...

தினமும் எழுந்துவரும் ஜோதி

  அன்புள்ள ஆசிரியருக்கு, “இதுவே இந்தச் சொற்களை அல்லது இம்மாதிரி வாக்கியங்களை வேற யாராச்சும் சொல்லிருந்தா எளிமையா தேய்வழக்குன்னு ஒதுக்கித் தள்ளியிருப்போம். ஆனா பாட்டி மாதிரி ஓர் ஆளுமை சொல்லும்போது சொற்களுக்கு உண்மையிலேயே உயிர் வந்திடுது” என்றார் கிருஷ்ணன் சார். எனக்கும் பள்ளி நாட்களில் யோகா ஆசிரியர் மூலமாக அறிமுகமான அச்சொற்கள் அப்போது எந்த அதிர்வையும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் பாட்டியின் உச்சரிப்பில் அவை ஓர் அசரீரி போல் ஒலிப்பதை எண்ணிக் கொண்டேன். பாட்டிக்கு அச்சொற்களை சொல்லும் போது மட்டும் சுத்தமாக குரல் நடுங்குவதில்லை. உச்சரிக்கும் பொழுது முழுமைக்கும் சித்தம் அச்சொற்களுக்கே என ஒப்படைத்து அழுத்தம் திருத்தமாக சொல்வார், “அருட்பெருஞ்ஞ்ஞ்.. ஜோதி தனிப்பெருங்ங்ங்.. கருணை” கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு நூறு அகவை நிறைவு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு நாங்கள் திண்டுக்கல் காந்திகிராம ஊழியரகத்தை அடைந்த பொழுது நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தன, பேராசிரியர் பழனிதுரை உரையாற்றிக் கொண்டிருந்தார். மாலை நான்கு மணி ஆகிவிட்டது. காலை முதலே நிகழ்ச்சிகள், ஆசியளித்தல்கள் என இருந்திருக்கும் என...

One more Bottle!

எங்களை விட உயரம் குறைவாக இருந்தாலோ என்னவோ அவள் கண்களுக்குத்தான் பறவைகள் அதிகம் தட்டுப்பட்டன. அகல்யா. உயரத்தின் காரணத்தால் பார்வைகோணம் மாறுபடுவது மட்டுமல்ல, பொதுவாகவே இப்பயணத்தில் பல பறவைகளை முதலில் அடையாளம் காட்டியது அவளே. அதுவும் குறிப்பாக பார்வைக்கு அதிகம் சிக்காத குயிலனங்களை கண்டறிவதில் தேர்ச்சி பெற்றிருந்தாள் (Cuckoo Spotter!). மொத்தம் மூன்று ஜோடிகள் விஜயபாரதி-கெளசல்யா, கோபி-சரண்யா, திரு-காயத்ரி ; மூன்று பேச்சிலர்கள் (பயணத்தின் போது மட்டும்) ஈஸ்வரமூர்த்தி, ஞானவேல், நான்; நிறைய குழந்தைகள் ஆதித்யா, அகல்யா, அன்பரசி, மகிழ், மஞ்சரி என அந்த சிறுமலை பயணத்திற்கான குழு அமைந்திருந்தது. நாங்கள் முதல் நாள் சனி காலை கொடைக்கானல் ஏறும் பாதையில் ஒரு திருப்பமெடுத்து அங்கு பெருமாள்மலை என்ற பகுதியை ஒட்டி நிலைகொண்டோம். பகல் முழுக்க அங்கு பறவை பார்த்து முடித்துவிட்டு அங்கிருந்து சிறுமலைக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். மொத்தம் மூன்று கார்களில் எங்கள் கார் முன்னரே அடிவாரத்தை அடைந்திருந்தது. இருபுறமும் மாந்தோப்புகள் தென்பட தொடங்கியிருந்தன. இவ்வருடம் மழை மற்றும் காற்றின் ஒத்துழைப்பில் பூக்கள் அதிகம் உதிராத...

ஈரோடு நாடகக் கொட்டாய் - நீர்வழிப்படூஉம்

 மகரந்தம் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோடு நாடக கொட்டாயில் நடைபெற்ற 'நீர்வழிப்படூஉம்' நாவலின் நாடக வடிவைக் காண நேற்று மாலை நண்பர்கள் ரஞ்சனி, விக்ரம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சென்றிருந்தேன். ஈரோடு நாடக கொட்டகை கட்டிடம் கூத்துப்பட்டறையின் நிறுவனர் மறைந்த ந. முத்துசாமியின் நினைவகமும் கூட. மறைந்த ஆசிரியரின் வழியில் தொடர்ந்து செயலை முன்னெடுப்பதே வாழும் நினைவகமாக இருக்க முடியும். அவ்வகையில் வெவ்வேறு நவீன நாடக முயற்சிகள் தொடர்ந்து இக்கொட்டகையில் அரங்கேறுவதாய் அறிகிறேன். கொட்டகை அமைந்துள்ள கட்டிடம் முன்னர் ஒரு தேவாலாயமாக இருந்த இடம். உயர்ந்த நீண்ட ஓட்டுக்கூரை வடிவத்தை இப்போதும் நாம் பார்க்கலாம். மனித நாடகங்களை அரங்கேற்ற தேவனின் ஆலயம் ஏற்ற இடம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்திருந்ததை விடவும் தற்போது அரங்கம் புதுப்பொலிவுடன் இருந்தது. பார்வையாளர்களுக்கான கேலரி புதிதாக அமைத்திருந்தார்கள். சுமார் அறுபது பேர் வரை வசதியாக அமர்ந்து நாடகம் பார்க்கலாம். தற்போது கொட்டகையை நிர்வகிப்பவர் முத்துசாமியின் மாணவர் சதீஷ் குமார். அவரும் தோழர் கலைக்கோவனும் இணைந்தே 'ந...

சிறுமலை பயணம் - படங்கள்

One more Bottle - சிறுமலை பயணக் குறிப்பு குட்டீஸ்:)   Velvet-fronted Nuthatch கருந்தலைச் சில்லை தெக்கத்தி மலையில் இறுதிக் காட்சியாக துடுப்புவாலன் Choco Boy விழுப்புண் பெற்ற blue tiger Common Blue bottle The transparent one வழுக்குனா விட்ருவனா.. Rock agama, On top of the world The spotter while spotting அழகு ஆண்களின் நடுவே.. மலர்ச் சூரியன் ஆயிரம் ஜன்னல் வீடு துணை Shining Silver வழி வழிகாட்டி கருப்பண்ணசாமி வழித்துணையுடன் வேலி தாண்டிய மலர் படங்கள்: அன்பரசி, வேலு, பாரி. (நிறைவு)